Saturday, April 7, 2012

சிலை உயிர்த்தெழும் ஓர் கணம்

பாகங்களாக உடைந்திருக்கிறது
அவ் வனத்தின் பட்டுப்போன மரமொன்றினூடு
தென்படும் முழு நிலவு

விருட்சங்களால் ஈரலிப்போடு உறிஞ்சப்படுகின்றன
வனத்தின் எல்லை மர வேர்களை
தழுவும் சமுத்திரத்தின் அக் கணத்து அலையில்
இருளை ஊடறுத்துச் சிதறும் ஒளிக் கிரணங்கள்

காற்று அணைக்கப் பாடுபடும் அந்த ஓடத்து விளக்கினை
ஏற்றியவன் கரங்களிலிருந்து விசிறப்படும்
வலையினில் சிக்கிக் கொள்கிறது
தண்ணீரில் முளைத்த பௌர்ணமி

வேட்டைக்காரனுக்குத் தப்பிய தேன்கூடொன்று
ஒளிந்திருக்கும் மலைக்குன்று இதுவல்லவோ
எந்தப் பாதச் சுவடுகளும் தொட்டிராச் சருகுக் குவியல்
சலசலத்து எழுப்பும் இசை
தேனீக்களுக்குத் தாலாட்டோ

எத்தனையோ நிலவுகளை ரசித்த புத்தர்,
சிலையாகித் தனித்திருக்கும் வனத்தின் விகாரைக்கு
தூய மலர்களோடு அணிவகுக்கும்
வெண்ணிற ஆடை பக்தர்களுக்கு
வழிகாட்டும் நிலவின் விம்பம்
அவர்கள்தம் நகங்களில் மின்னுகிறது

நீரின் மேல் மிதந்த நிலவு
அசைந்து அசைந்து மூழ்கும் காலை
தீக்குழம்பாய் உருகும் ஆகாயத்தில்
தொலைதூரச் செல்லும் பறவைகள்
தனித்த புத்தர் சிலையையும் விருட்சமெனக் கொண்டு
தரித்துச் செல்லும் அக் கணம் மட்டுமேதான்
சிலை உயிர்த்தெழும் ஓர் கணம்

- எம்.ரிஷான் ஷெரீப்
110811

நன்றி
# கலைமுகம் - கலை இலக்கிய இதழ் 
# உயிர்மை
# நவீன விருட்சம்
# திண்ணை