Friday, February 1, 2013

சொல்லித் தீராத சங்கிலி



எறிகல்லோடு சேர்ந்து வீழ்ந்த தாரகையொன்று
வர்ணத் திரைச்சீலைக்கப்பால்
சமையலறையில் உறைகிறது
வரவேற்பறையிலிருந்து எழும்புகின்றன படிக்கட்டுக்கள்
யன்னலால் எட்டிப் பார்க்கும் வெயிலுக்கு
ஏறிச் செல்லப் பாதங்களில்லை

கூடத்தில்
வீட்டின் பச்சையைக் கூட்டுகிறது
பூக்கள் பூக்காச் சிறு செடியொன்று
காலணி தாங்கும் தட்டு
தடயங்களைக் காக்கிறது

ஒரு தண்ணீர்க் குவளை
தோலுரித்த தோடம்பழச் சுளைகள் நிறைந்த பாத்திரமொன்று
வாடாத ஒற்றை ரோசாப்பூவைத் தாங்கி நிற்கும் சாடி
வெண்முத்துக்கள் சிதறிய மேசை விரிப்புக்கு
என்னவோர் எழில் சேர்க்கின்றன இவை

பிரகாசிக்கும் கண்கள்
செவ்வர்ணம் மிகைத்த ஓவியமொன்றென
ஆகாயம் எண்ணும்படியாக
பலகை வேலிக்கப்பால் துள்ளிக் குதித்திடும்
கறுப்பு முயல்களுக்குத்தான் எவ்வளவு ஆனந்தம்

எந்த விருந்தினரின் வருகையையோ
எதிரொலிக்கிறது காகம்
அவர் முன்னால் அரங்கேற்றிடவென
வீட்டைத் தாங்கும் தூண்களிரண்டின் இதயங்களுக்குள்
ஒத்திசைவான நாடகமொன்று ஒத்திகை பார்க்கப்படுகிறது

இரவின் அந்தகாரத்துக்குள் ஒளிந்துபோன
காதலின் பெருந்தீபம்
சொல்லித் தீராத சங்கிலியொன்றோடு
மௌனத்தைப் பிணைத்திருக்கிறது
என்னிலும் உன்னிலும்

- எம்.ரிஷான் ஷெரீப்
09012012

2012 ஆம் ஆண்டு சர்வதேச ரீதியில் 'பண்புடன்' குழுமம் நடத்திய ஆண்டு விழாப் போட்டியில் இரண்டாம் பரிசினை  வென்ற கவிதை 

நன்றி
# அம்ருதா இதழ் - நவம்பர், 2012 
# யாத்ரா இதழ் - நவம்பர், 2012
# எதுவரை இதழ் - ஜனவரி, 2013
# உயிர்மை
# திண்ணை
# நவீன விருட்சம்
# பதிவுகள்
# Artist - Roshan Dela Bandara