Friday, March 1, 2013

துயர் விழுங்கிப் பறத்தல்


பறந்திடப் பல
திசைகளிருந்தனவெனினும்
அப் பேரண்டத்திடம்
துயருற்ற பறவையைத் தேற்றவெனவோ
சௌபாக்கியங்கள் நிறைந்த
வழியொன்றைக் காட்டிடவெனவோ
கரங்களெதுவுமிருக்கவில்லை

ஏகாந்தம் உணர்த்தி உணர்த்தி
ஒவ்வொரு பொழுதும்
காற்று ரணமாய்க் கிழிக்கையில்
மௌனமாகத் துயர் விழுங்கும் பறவை மெல்ல
தன் சிறகுகளால்
காலத்தை உந்தித் தள்ளிற்றுதான்

முற்காலத்திலிருந்து தேக்கிய வன்மம்
தாங்கிட இயலாக் கணமொன்றில் வெடித்து
தன் எல்லை மீறிய பொழுதொன்றில்
மிதந்தலையும் தன் கீழுடலால்
மிதித்திற்று உலகையோர் நாள்

பறவையின் மென்னுடலின் கீழ்
நசுங்கிய பூவுலகும் தேசங்களும்
பிதுங்கிக் கொப்பளித்துக் காயங்களிலிருந்து
தெறித்த குருதியைப் பருகிப் பருகி
வனாந்தரங்களும் தாவரங்களும்
பச்சை பச்சையாய்ப் பூத்துச் செழித்திட
வலி தாள இயலா நிலம் அழுதழுது
ஊற்றெனப் பெருக்கும் கண்ணீர் நிறைத்து
ஓடைகள் நதிகள்
சமுத்திரங்கள் வற்றாமல் அலையடித்திட

விருட்சக் கிளைகள்
நிலம் நீர்நிலைகளெனத் தான்
தங்க நேர்ந்த தளங்களனைத்தினதும்
தடயங்களெதனையும் தன்
மெலிந்த விரல்களிலோ
விரிந்த சிறகுகளிலோ
எடுத்துச் செல்லவியலாத் துயரத்தோடு
வெளிறிய ஆகாயம் அதிர அதிர
தொலைதுருவமேகிற்று
தனித்த பறவை

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# உயிர்நிழல் இதழ் - 35, ஜூலை 2012உயிர்மைமகுடம் இதழ் - 03வெயில்நதி இதழ்திண்ணைபதிவுகள்