Tuesday, April 21, 2015

செம்மஞ்சள் பொழுதின் வானம்


பூர்வீக வீட்டிலிருந்து சற்றுத் தொலைவுதான் எனினும்
நடந்தே செல்லத் தலைப்பட்டோம்
அரூப ஆவிகள் உலவும் தொன்ம பூமியென
வழி காட்டியவர்கள் சொன்ன கதை கேட்டு அச்சமுற்றாயா

எத்தனையெத்தனையோ தலைமுறைகளுக்கு ஊணிட்ட
வேலிகளற்ற தரிசு வயலது
பரந்து விரிந்த எம் பண்டைய பூமி
வண்டி கட்டிச் சென்று மூத்தோர் விவசாயம் பார்த்த
சருகுக் கோரைப் புற்கள் விரவிக் கிடக்கும் பயிர்நிலம்

என் ஞாபகத்திலொரு பூநெல்லிச் செடியிருக்கிறது
நிலா இரவுகளில் முற்றத்தில் பாய்விரித்து
தலைகோதிக் கதை சொன்ன அம்மா நட்ட செடி
பிஞ்சு விரல்கள் வலிக்க வலிக்க
மூக்கு நீண்ட பேணியொன்றில் நீரேந்தியூற்றி
நானதை வளர்த்து வந்தேன்
அந்நிய நகரத்தில் நீயும் நானும்
அலங்காரத்துக்காக வைத்திருக்கும் போலிச் செடி போலன்றி
அது நன்கு தளைத்திருந்தது
தேசம் விட்டகன்ற நாளில்

அக் காலத்தில் நிழலுக்கென்று வளர்த்திருக்கக் கூடிய
கொன்றையும் வேம்பும் இன்ன பிற மரங்களும்
குளிர்ச்சியைத் தந்திருக்கும்
கூடவே களைப்பறியாதிருக்க வாய்ப்பாடலும்
கூட்டுக் கதைகளும் வெற்றிலையும்
சிறு காயங்களுக்குச் சேற்று மண்ணுமென
உழுத பின் வாடிக் களைத்த மூத்தவர்கள்
அங்கமர்ந்து ஓய்வெடுத்திருப்பர்

இன்று
சட்டை கழற்றிச் சென்றிருந்ததொரு சர்ப்பம்
தூர்ந்துபோய் வான் பார்த்திருக்கும் பெருங்கிணறும்
பல பிரேதங்களைச் சுமந்திருக்கக் கூடும்

எம் மூதாதையரின் இதிகாச ரேகைகள் பரவிய நிலத்தை
பாதி விழுங்கிச் செரித்திருக்கின்றது கருவேலங்காடு
அநேகப் பெருவிருட்சங்கள் மரித்துவிட்டன இப்போது
வலிய துயர்களைக் கண்டு தளர்ந்து கிடக்கிறது பூமி
அதன் உடலிலின்னும்
சுருக்கங்களைத் தீட்டிக் கொண்டேயிருக்கிறது
கோடை காலத் தூரிகை

அத்தி மரத்தில் சாய்ந்து நின்றபடி
அந்திப் பேய் வெயில்
மஞ்சளாய் ஊடாடிய தரிசு வெளி பார்த்துச் சட்டென
''வான்கோ'வின் ஓவியமும் குரூர ஆயுதங்களும்
ஒருங்கே கலந்த நிலம்' என்றாய்
தங்க பூமியின் ஆகாயத்தில்
செஞ்சாயம் கலந்தது வேறெப்படியாம்

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# அம்ருதா இதழ், மலைகள் இதழ், வல்லமை இதழ், பதிவுகள் இதழ், காற்றுவெளி இதழ், நவீன விருட்சம் இதழ்
# ஓவியம் - Van gogh