
ஒரு பெருவெளிப் போர்க்களத்தை
மனதுள் பரப்பிச்
சென்றதுன் வருகை
மீளவும் மீளவும்
சுடுகாடாய்ப் புகை கசிய
வெடித்துச் சிதறுகிறது மனம் !
அமைதி,அந்தஸ்து,
அத்தனை நிம்மதியும்
வாய்க்கப் பெற்றவன் நானென
இறுமாந்து நின்றவேளை
சலனமற்ற தூறலென
சப்தங்களை விழுங்கி,விழுங்கி
நீ வந்துநின்றாய்
உள்ளுக்குளென்ன வெள்ளமோ...
நானேதுமறியேன் !
வந்தாய் - விழியுரசிடச் சிலகணங்கள்
மௌனத்தை மொழியாக்கிப்
பார்த்தபடி நின்றாயதில்
சலனத்தையோ,சிவப்பையோ
நான் காணவில்லை !
கேள்விகளை மட்டுமே
வார்த்தைகளாக்கியுன்னிடம்
வருகையின் மூலத்தை - நான்
வினவிச் சோர்ந்தவேளையிலும்
என் நெஞ்சப்பரப்பில்
ஆழத்தடம் பதித்து,
மௌனத்தை மொழியாக்கி
ஓர் தென்றல் போல
நீ விலகிச்சென்றாய் !
உனது கருவிழிகள்
பயணிக்கும் திசையில்
மட்டுமே வாழ்ந்திடப்
பலர் காத்து நிற்கையில்...
எந்தக் கோலத்துக்கும்
வசப்படாப் புள்ளியொன்றிடம்
என்ன எதிர்பார்த்து நீ வந்தாய் ?
எந்தத்திசை நோக்கியும்
முடிவுறாப் பாதையொன்றில்
எங்கு பயணிக்கக் காத்திருந்தாய் ?
உன் வாசனை நிறுத்திச்சென்று
சிலபொழுது கடந்தவேளை,
தீயிடம் என் பெயரை - நீ
உச்சரித்து மாண்டதாக
வேதனை மிகும் செய்தியொன்று
காற்றோடு வந்தது !
ஒரு பெருஞ்சமுத்திரச்சோகத்தை
மனதில் ஓயாமல் அலையடிக்கச்
செய்ததுன்னிறப்பு.
மீளவும் மீளவும்
வசந்தங்களேதுமற்றவொரு
மயானத்து வனாந்தரமாய்
வெடித்துச் சிதறியும்
துடித்துக்கொண்டே
ஏனின்னும் இருக்கிறதுன்
நேசத்தை உணர்ந்திடா என் மனம் ?
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.