Tuesday, April 1, 2014

நுழைதல்


எந்த நட்சத்திரமும் உதிர்ந்துவிழா பனிபடர்ந்த இரவின் காலம்
எனது கைவிரல்களை ஒற்றியொற்றி
உன் நேசத்தைச் சொல்லிற்று

பசியினைத் தூண்டும் சோள வாசம்
காற்றெங்கிலும் பரவும்
அத்திப்பூ மலையடிவாரக் கிராமங்களினூடான பயணத்தை
முடித்து வந்திருந்தாய்
குடிநீர் தேடி அடுக்கடுக்காய்ப் பானைகள் சுமந்து நடக்கும்
பெண்களின் சித்திரங்களை
புழுதி பறக்கும் தெருவெங்கும் தாண்டி வந்திருந்தாய்
வெயிலெரித்த சருமத்தின் துயரம்
உன் விழிகளுக்குள் ஒளிந்திருக்கும்
அந் நெய்தல் நிலத்தின் அழகை என்றும் மறந்திடச் செய்யாது

நகரும் தீவின் ஓசை
நீ நடந்த திசையெங்கிலும்
பாடலாகப் பொழிந்திடக் கூடும்
அனற்சூரியனை எதிர்க்கத் தொப்பிகள் விற்பவன்
வாங்க மறுத்து வந்த உன்னை நெடுநாளைக்கு நினைத்திருப்பான்

உனைத் தீண்டி நகர்ந்திருந்ததொரு விஷத் தேள்
உச்சியிலிருந்து சருக்கச் செய்தது அதன் நச்சு
எல்லாம் கடந்துவிட்டன
நேற்றிருந்த மேகத்தைப் போல
இக் கணத்து நதி நீர் போல

உனது பயணங்கள் முடிவற்றன
எல்லையற்று நீளும் உனது பாதைகள் வலியன
ஏமாற்றங்களில் தடுக்கி விழுந்து
அனுபவங்கள் பல ஒளிந்திருந்த நெஞ்சுனது
பாளங்களாய்க் கனன்றெரிந்து
உன் வாழ்வின் கதைகள் பேசிற்று
உள்ளிருந்த எனக்கான உன் நேசம் சுகமாயும் வலியாயும் மிதந்தூறிட
தெப்பமென நனைந்தேன்

நரகப் பெருநெருப்புக்கஞ்சி
எவருக்கெனவோ மூடிக் காத்திருந்த பொக்கிஷ நந்தவனமொன்று
நீ வரத் திறந்தது
அன்று
உனக்கென உதிர்ந்ததொரு மந்திரப் பூ
உனக்கெனத் தெளிந்ததொரு வாசனைப் பொய்கை
உனக்கென மட்டும் துளிர்விடத் தொடங்கியிருக்கிறது ஒரு தளிர்

எல்லாவற்றையும் குறித்துத் தெரிந்திருக்கிறாய்
ஆனாலும் சகா
நீ உணர்வதற்கும் நம்புவதற்கும்
அப்பாலுள்ளது எனதுலகம்

- எம். ரிஷான் ஷெரீப் 
# நன்றி - அம்ருதா இதழ், ஜனவரி 2014எதுவரை இதழ்வல்லமை இதழ்பதிவுகள்Painting - Abhijith