Thursday, April 15, 2010

வண்ணத்துப்பூச்சிகளைச் சூடிக்கொண்டவள்


அவன் தன்
வேட்டைப்பற்களை மறைக்க
தேவதூதனையொத்தவொரு
அழகிய முகமூடியைத் தன்
அரக்க முகத்தில் மாட்டிக்கொண்ட
பின்னரான பொழுதொன்றில்தான்
அவள் அவனைப் பார்த்தாளெனினும்
ஒரு செங்கழுகின் சூட்சுமத்தோடலையும்
அவனது விஷப்பார்வையை அறிந்திட்டாளில்லை

அக்கழுகு
அழகிய பெண்களின் மாமிசப்பட்சி
அவர்தம் வாழ்வினைக் கொழுவி
உயிர் எஞ்சத் துண்டுகளாய்
வெட்டியெடுத்துச் சப்பிச் சிரிக்கும்
கோரங்களைக் கொண்டவை அதனது நாட்கள்

அவள்
செந்தாமரை மலரொத்தவொரு
தேவதைக்குப் பிறந்தவள்
ஏழ்மையெனும் சேற்றுக்குள்
வனப்பு நிறைக்க மலர்ந்தவள்
அன்பைத்தவிர்த்து ஏதொன்றும் அறியா
அப்பாவிப்பெண்ணக் கழுகின்
கூர்விழிகளுக்குள் விழுந்தவள்

சுவனக் கன்னியையொத்த
தூய்மையைக் கொண்டவளின்
கவனம் பிசகிய கணமொன்றிலவன்
கவரும் இரையுடனெறிந்த காதல் தூண்டிலின் முள்
மென்தொண்டையில் இலகுவாக இறங்கிற்று
என்றுமே உணர்ந்திராதவொரு
விபரீதக் குருதிச்சுவையை நா உணர்ந்திற்று

நேசத்தினைச் சொல்லிச் சொல்லி
அவளது சதைகளை அவ்விஷப்பட்சி
தின்றரித்து முடிந்தவேளையில்
வாழ்வில் காணாவொரு துயரத்தை
அவள் கண்கள் விடாதுசொரிந்திட
எந்நாள்பொழுதும் தீராப்பசியோடவன்
வேறொரு அழகியை ஈர்க்கச் சென்றான்
இயல்பை மறந்த நாட்கள் தொடர்ந்து வர
அவளது தேவதைப்பாடல்கள் சோரலாயின

ஆழி நடுவிலொரு ஒற்றைப்படகிலமர்ந்து
சூழ்ந்த தனிமைக்கும் துயருக்கும்
மீளப்பெறமுடியா இழப்புக்குமாக
வசந்தகாலத்து வனங்களின்
வண்ணத்துப்பூச்சிகளைத் தன்
அரணாக அவள் சூடிக் கொண்டாள்
இன்று
மீட்டமுடியாக் காலத்தின் வினைகளைத்
தம் இச்சையால் உணர்ந்த பல திமிங்கிலங்கள்
இடையறாது படகை
வட்டமிட்டுக் கொண்டேயிருக்கின்றன

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# வடக்குவாசல் - ஜனவரி, 2010 இதழ்
# தமிழ் எழுத்தாளர்கள்
# நவீன விருட்சம்
# வார்ப்பு

Monday, April 5, 2010

அகதிப் பட்சி

அப்பாரிய மலைகளைத் தாண்டிய வனாந்தரத்தின்
பெரு விருட்சமொன்றின் பரவிய கிளைகளில்
குச்சுக்களால் வேயப்பட்டு
எமக்கென்றொரு அழகிய கூடிருந்தது
இணைப்பறவைகள் சேர்த்துக் கட்டிய வீட்டில்
அழகாய்ப் பிறந்து கீச்சிட்டேனாம்

இரை திரட்டி வந்த அன்னைப் பட்சி
தொண்டைக்குள் வைத்தழுத்திய உணவு காயும் முன்
வேட்டைப் பறவையொன்றின்
வஞ்சகம் சூழ்ந்த விழிகளிலே விழுந்திட்டேன்

இறகுகள் இருக்கவில்லை
வில்லங்கங்கள் தெரியவில்லை
விசித்திர வாழ்க்கையிதன்
மறைவிடுக்குகள் அறியவில்லை
அன்னை அருகிலாப் பொழுதொன்றில்
சாத்தானியப் பட்சி காவிப்பறந்திற்று என்னை

கூரிய சொண்டுக்குள் என்
தோள் கவ்விப் பறக்கும் கணம்
மேகங்கள் மோதியோ
தாயின் கண்ணீர்ப் பிரார்த்தனையோ
எப்படியோ தவறிட்டேன்
கீழிருந்த இலைச் சருகுக்குள்
வீழ்ந்து பின் ஒளிந்திட்டேன்

அடை காத்தவளும் வரவில்லை - பின்னர்
காவிச் சென்றவனும் வரவில்லை
எப்படி வளர்ந்தேனென்று
எனக்கும் தெரியவில்லை
இறகுகள் பிறந்தன
தத்தித் தத்திப் பறக்கக் கற்றேன்

இன்று புராதன நினைவுகளைத் திரட்டியெடுத்து
வலிமையான குச்சிகள் கொண்டு
எனக்கொரு வீடு கட்டுகிறேன்
விஷப் பறவைகள் காவிப்பறக்க இயலா
உயரத்தில்  உருவத்தில்
விசித்திரமான கூடொன்று கட்டுகிறேன்
கூரிய சொண்டுகளால் தோள் கவ்வும் வலி
என் குஞ்சுகளுக்கு வேண்டாம்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.

நன்றி
# கலைமகள் - ஜனவரி, 2009 இதழ்
# உயிர்மை
# தமிழ் எழுத்தாளர்கள்

# வார்ப்பு
# ஓவியர் ஷ்யாம்