Friday, August 15, 2008

புதைகுழி வீடு !

அத்திவாரத்தை
வெடிபொருட்களால் நிரப்பி
அது இறுகிச் சேர்ந்திட
மனிதக் குருதி சேர்த்து
நெருப்புக்களால் ஆன
வீடொன்று கட்டு உனக்கு.
பேய்களே அதற்குக் காவலிருக்கட்டும் !

முன்பு புதைத்த
சவங்களைத் தோண்டியெடுத்து
அதன் எலும்புகளால் சில யன்னல்களும் வை.
இரவானாலும் - எந்த
இருளானாலும்
அவை மூடப்படாமலே கிடக்கட்டும் ;
அனல்காற்றும்,
அரைவேக்காட்டுப் பிணவாடையும்
மட்டுமே சுமந்தது உள்ளே வரட்டும் !

உருகிச் சிவந்து சூடு சுமக்கும்
தட்டை இரும்பினாலோர்
ஒற்றைக் கதவு வை.
வெப்பத்திறவுகோலால்
சாத்தான்களுக்கு மட்டுமதனைத்
திறந்து வழிவிட்டு நகர் !

பிணக்கால்களின் மூட்டுக்கள் கொண்டு
உன் சிம்மாசனம் அமையட்டும்,
மண்டையிலடித்துக் கொன்றொழித்த
பெண்களின் முத்துப் பற்களை
அழகுக்காகப் பதி ;
சிறு மழலையின் மண்டையோடு
செங்கோலின் கைப்பிடியை அலங்கரிக்கட்டும் !

இளம்பெண்களின் அலறலும்,
குழந்தைகளின் அழுகையும்,
மனிதர்களின் ஓலமும்
துயர் சுமந்த ஒப்பாரிகளும்
உன் வீட்டை இசையாக
நிரப்பட்டும் !

விருந்தினர் வருகையில்-கொதிக்கும்
விஷபானம் குடிக்கக் கொடு ;
அவர்கள் தொண்டை வழியே உருகிவழிகையில்
உன் வீரவாள் கொண்டு
வெட்டிக் கறி சமை !

அவர்கள் கண்களைத் தோண்டி-அதில்
ஆயிரம் அலங்காரம் பண்ணி,
நாக்குகளை அறுத்துத் துணைக்குத்
தொட்டுக் கொள்ளவை !

உன் பசி தீர்ந்ததா?
இப்பொழுது சொல்.
நான் சொன்னபடி கட்டிய
உன் வீட்டுக்கும்
என் தாய்தேசத்துக்கும்
என்ன வித்தியாசம் இன்று?

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.


இணைய வானொலியில் ஒலிபரப்பான இக்கவிதையை பிரபல அறிவிப்பாளர் அப்துல் ஜப்பார் அவர்களது குரலில் கேட்க...

rishan.mp3 -

Friday, August 1, 2008

நேசத்தை விழிநீரில் அழித்து...!


வீடு முழுவதிற்குமான
மகிழ்ச்சியின் ஆரவாரத்தினை
ஒரு புகைப்படம் கொண்டுவந்தது ;
இதைப் போலப்
பேருவகையொன்றைத் தவிர்த்து
நிராகரிப்பின் பெருவலியை
அவள் அவனுக்குத் தரவிரும்பவில்லை !

அவளது வீடு வளர்கிறதா என்ன ?
அவனது காதலை ஏற்க மறுத்து
உள்ளுக்குள் புதைந்து
மனம் குறுகி நின்றவேளை
குறுகுறுப்பாகப் பார்த்து
குறுகிச் சிறுத்த அதே வீடு - இன்று
சொந்தங்களின் கிண்டல்களுக்குத்
துள்ளிக்குதித்து ஓடும் போதெல்லாம்
இத்தனை காலமும்
ஒளித்து வைத்திருந்த
நீண்ட புதுப்புதுப் பாதைகளை
அகன்று விரிக்கிறது !

சாஸ்திரங்கள்,சம்பிரதாயங்கள்,
வீட்டிற்கான பழம்பெரும் கலாச்சாரங்கள்
அவளது கரம்பிடித்து
இறுக்க நெருக்குகையில்,
வெட்கத்தைப் போர்த்திய சாலைவழியே
அவனது காதலைப் பாடிச்செல்வாளென
அவனெப்படி எண்ணலாம் ?

சமுத்திரங்கள் பிரித்த
பெருங்கண்டங்களிரண்டில்
நீந்தத் தெரியாமல் அவன்களும்
நீர் வற்றுமென அவள்களும்
பார்த்தவாறு காத்திருக்கையில் ,
காதலும் , நேசங்களும்
அவன்களுக்குள்ளேயே
புதையுண்டு போகட்டும் - அவ்வாறே
அவள்களது நிலவெரிந்த
நடுநிசிகள் கண்ணீரால் நனையட்டும் !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.