Sunday, December 20, 2009

பாவப்பட்ட அது


கடவுள் தந்த பொழுதிலிருந்து
காயங்களெதுவும் கண்டிரா
பரிபூரணத் தூய்மையோடு துடித்திட்ட அது
மழலை வாடையை எங்கும் பரப்பும்
பூக்களை இறுக்கமாகப் பொத்திவைத்திருக்கும்
ஒருநாள் குழந்தையின்
உள்ளங்கையினைப்போலவும்
மொட்டவிழக் காத்திருக்கும்
தாமரையொன்றின் உட்புற இதழைப்போலவும்
மிகவும் மென்மையானது
சில சலனங்களை
பின்விளைவறியாது ஏற்றுப்பின்
கலங்கியது துவண்டது
வாடிச் சோர்ந்தது
ஞாபக அடுக்குகளில்
சேமித்துக் கோர்த்திருந்த
எனதினிய பாடல்களின் மென்பரப்பில்
உன் கால்தடங்களை மிகுந்த
அதிர்வோடு ஆழமாய்ப் பதித்தவேளையில்
ஏமாளியாய் நின்றதைத்தவிர்த்து
வேறென்ன பாவம்தான் செய்தது
வதைக்கவென நீ தேர்ந்தெடுத்த
என் ஒற்றை மனது

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


நன்றி
# வடக்கு வாசல் - செப்டம்பர், 2009 இதழ்
# வல்லினம் - மலேசிய கலை இலக்கிய இதழ் -10, அக்டோபர் 2009






Thursday, December 10, 2009

நிச்சயமாக உனதென்றே சொல்




உன் வரண்ட தொண்டைக்குழிக்கு
தண்ணீரை எடுத்துச் செல்கையில்
ஈரலித்துக்கொள்கிறது
பின்னும்
இரையும் வயிற்றுக்கென நீ
உள்ளே தள்ளிடும்
எல்லாவற்றையும் சுவைத்துப்பார்க்கிறது
எதையும் தனக்கென வைத்துக்கொள்ளாமல்
தானும் உபயோகித்துக்கொண்டு
முழுதாக உனக்கே தருவதென்பது
ஆச்சரியம் தானென்ன

எல்லோரையும் தூற்றியபடியும்
எச்சிலில் குளித்தபடியும்
தினமொரு ஆளைத்தேடி
உன் கண்களால் செவிகளால் வார்த்தைகளால்
அலையுமது
ரோசா வண்ணத்திலல்லது இளஞ்சிவப்பில்
மிகவும் திமிர்பிடித்துக்
கொழுத்துப் போய்க்கிடக்கிறது
அதற்கு மெல்லவென நான் சிக்கியபொழுதில்
மேலண்ணத்துக்கும் கீழண்ணத்துக்குமிடையிலதனைத்
துடிதுடிக்கவைத்து
கட்டற்ற பொய்களை
அவதூறுகளை வசைமொழிகளை
வெளியெங்கும் இறைத்தது
தேளுக்கில்லை
அரவத்துடையது மிகவும்
மெல்லியது, பிளந்தது, கூரியது
இரண்டெனவும் கூறலாமெனினும்
அதனைப் போன்றதல்ல

உன்னுடையது
தீண்டப்பட்ட எல்லா மனங்களையும்
கொல்லும்
கொடிய விஷத்தினைக் கக்கியபடி
வழியெங்கும் தொடரும்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# வல்லினம் - மலேசிய கலை இலக்கிய இதழ் -10, அக்டோபர் 2009
# தமிழ் எழுத்தாளர்கள்
# தினகரன் வாரமஞ்சரி (27.12.2009)




Tuesday, December 1, 2009

பேரன்பின் தேவதை வருகை


பிரபஞ்ச வெளியெங்கும்
சுகந்தம் நிறைக்கும்
அழகிய பூவொன்றை
வசந்தநாளொன்றில் எதிர்கொள்ள
தன்
பரப்பெங்கிலும் பாசம் நிரப்பி
நெடுநாளாகக் காத்திருந்ததோர்
பச்சை இல்லம்

மெதுவாக நகர்கையில்
பெருஞ்சலனத்தில்
சிதறச் செய்த கரும்பாறைகள்
மேலிருந்த சினமோர் யுகமாய்த் தொடர்ந்தும்
தன் பழஞ்சுவடுகளில் நலம் விசாரிக்கும்
எளிய நாணல்களை
மீளவும் காணவந்தது
நீர்த்தாமரை

விரிசல்கள் கண்ட மண்சுவர்
மழையின் சாரலை
தரையெங்கும் விசிறும்
ஓட்டுக் கூரை சிறிய வீடு
தொடரும்
புராதன இருளின் ஆட்சி மறைக்க
தன் கீற்றுக்களைப் பரப்பி
பரிபூரணத்தை எடுத்துவந்தது
பேரன்பின் தேவதை

மெல்லிய வண்ணத்துப் பூச்சியென
பொக்கிஷங்களைச் சுமந்து வந்த தன்
சிறகுகளைச் சிறிதேனும்
இளைப்பாறவிடாமல்
வந்தது என்றுமழியாப் புன்னகையோடு
யாவர்க்கும் மகிழ்வைத் தரும்
மந்திரங்களை உதிர்த்தது
பின்னர்
தவறவிட்ட விலைமதிக்கமுடியாதவொன்றை
தேடிச் செல்வது போல
மிகத் துரிதமாகத் தன் நிலம் நாடி
தொன்ம பயிர்நிலங்கள் தாண்டி
மீண்டும் பறந்தது

ஆத்மாக்களனைத்திற்கும்
இனி வாழப்போதுமான
சுவாசத்தை விட்டுச் சென்ற
அத் தூய காற்றினூடே
அந்தகாரத்தைப் பரப்பி
தைத்திருந்த கருங்குடையை திரும்பவும்
விரித்தது மழை இரவு

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


@ அன்புச் சகோதரி ஃபஹீமா ஜஹானின் வருகை ( 03-11-2009)

நன்றி
# சொல்வனம் இதழ் 13 (27-11-2009)


Monday, November 23, 2009

அவகாசம்


சற்று இடமும், நேரமும் கொடு
எனைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி
இளைப்பாறிக் கொள்கிறேன்

ஒரு பெரும் புதைகுழியிலிருந்து
மீண்டு வந்திருக்கிறேன்
சூழ்ந்தேயிருந்தன
நச்சில் தோய்ந்த நாக்குகளோடு
சீறும் பாம்புகள் பல

கொடும்வெப்பம் உமிழும்
விஷக் காற்றினை மட்டும் சுவாசித்தபடி
மூர்ச்சையுற்றுக் கிடந்ததென் வெளியங்கு
வண்ணத்துப் பூச்சிகள் தொட்டுச் சென்றன
அனல் கக்கும் தணல் கற்றைக்குள்
ஒரு பூப்போல இருந்தேனாம்
சிறகுகள் கருகி அவையும்
செத்துதிரும் முன் இறுதியாகச் சொல்லின

அரசகுமாரனாகிய அவனையேதான்
தன்னலவாதியென்றும் துரோகியென்றும்
சனியனென்றும் சாத்தானென்றும்
பிடாரனென்றும்
பேய் பிசாசுகளின் தலைவனென்றும்
உண்மைகளை உரக்கச் சொல்வேன்
மீளவும் கண்களைக் கட்டிக்
கடத்திப் போகும் வரையில்

அதுவரையில்
உன் கையில் ஆயுதம் ஒதுக்கி
பார்வையில் குரூரம் தவிர்த்து
சற்று இடமும் நேரமும் கொடு
எனைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி
இளைப்பாறிக் கொள்கிறேன்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# உன்னதம் செப்டம்பர், 2009 இதழ்
# உயிர்மை
# திண்ணை





Sunday, November 15, 2009

மெல்லிசையழிந்த காலம்


உனக்கும் எனக்குமென்றிருந்த
ஒரேயொரு வீட்டின் அறைகளில்
அன்பைப் பூசி அழகுபடுத்தினோம்
பளிங்கென மிளிர்ந்த குவளைகளில்
பாசம் தேக்கி மெல்லப் பருகினோம்
மெல்லிசையைப் பாடல்களைத்
திக்கெட்டும் அனுப்பி
கூடிப் பேசிக் களித்திருந்தோம்
இருவரும் உறங்கிடும் மௌனத்துக்குள்
புது மொழியொன்றினைக் கற்றறிந்தோம்
சிரித்தோம் ஆனந்தித்தோம்
வாழ்ந்தோம்

கருணையின் கற்கள் தேடிக்
கட்டிய வீட்டுக்குள்
குரூப இதயங்கொண்டவர்கள் நுழைய
ஏன் அவ்வேளை அனுமதித்தோம்
பளிங்குக் குவளைகளில்
நிறைந்திருந்த பாசம் கொட்டி
சாக் கொணரும் விஷத்தினை
அவை வந்து நிரப்பிட ஏன் இடங்கொடுத்தோம்
இருவருக்கிடையிலும் பெருந்திரை பொருத்தி
உன் பற்றி என்னிலும்
என் பற்றி உன்னிலுமாக
நம் செவி வழி ஊதப்பட்ட வசவுகளை நெருக்கி
ஏன் அருகிலமர்த்திக் கொண்டோம்
பழகிய நேச மொழிகளை மறந்த மனங்களிரண்டும்
ஆழுறக்கம் தழுவட்டுமென
ஏன் அப்படியே விட்டுவைத்தோம்
அழுதோம் துயருற்றோம் - இன்றோ
இறவாது தினம் இறக்கிறோம்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி

# உயிர் எழுத்து இலக்கிய இதழ் - அக்டோபர், 2009
# உயிர்மை
# திண்ணை


Sunday, November 1, 2009

நினைவின் கணங்கள்


பெரும்பெரும் வலிநிறை
கணங்களுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும்
நகர்ந்து வந்த கணங்கள்
சில பொழுதுகளில் அழகானவைதான்
புன்னகை தருபவைதான்

ஒரு தனித்த அந்தி
எல்லாக் கணங்களையும்
விரட்டிக்கொண்டு போய்
பசுமைப் பிராந்தியமொன்றில்
மேயவிடுகிறது
நீ வருகிறாய்

மேய்ச்சல் நிலத்திலிருந்த
கணங்களனைத்தையும் உன்னிரு
உள்ளங்கைகளிலள்ளி உயரத்தூக்கி
கீழே சிதறட்டுமென விடுகிறாய்
எல்லாம் பள்ளமென ஓடி
நினைவுகளுக்குள் புதைகிறது

மீளவும்
நினைவின் கணங்கள்
மலையிறங்கக் காத்திருக்கின்றன

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# உயிர்மை
# நவீன விருட்சம்
# திண்ணை

Thursday, October 15, 2009

காவல் நாகம்


எனதான தனிமையை
இருட்டைப் போல உளவு பார்த்து
அடர் சருகுகள் பேய்களின் காலடியில்
மிதிபடும் ஓசையைக்
கனவுகள் தோறும் வழியவிட்டு
நெஞ்சு திடுக்கிட்டலறும்படி
அச்சமூட்ட முயலுமுனது
புலன்கள் முழுதும் பகை நிரம்பிக்
காய மறுத்திற்று

சாத்தான்களுலவும் வானின் மத்தியில்
முகில்களின் மறைப்புக்குக் காவிச்சென்றெனது
சிறகுகளகற்றிப் பறக்கவிடுகிறாய்
விசித்து விசித்தழும் மெல்லிய இதயத்தோடு
வீழ்ந்து நொறுங்குமெனது
இறுதிக் கணத்தில் தொங்கியபடி
கேட்கிறதுன் விகாரச் சிரிப்பு

பற்றுறுதியற்று
அழுந்தி வீழ்ந்த கண்ணாடி நேசத்தில்
பழங்கானல் விம்பங்களைக் கொடுங்காற்று
காலங்கள் தோறும் இரைத்திட
உனது வரையறைகளை
நீ விதித்த கட்டுப்பாடுகளை
விஷச்சர்ப்பமொன்று விழுங்கட்டும்

ஆதி தொட்டுக் காத்துவரும் வைரமாயவை
உருப்பெற்றுக் கக்கியபின் கொன்று
காவல்பாம்பாக நீயே மாறு
இலகுதானுனக்கு
கொன்றொழிப்பதும் காவல் காப்பதுவும்
காவலெனச் சொல்லிச் சொல்லிக் கொன்றொழிப்பதுவும்

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


நன்றி
# உன்னதம் செப்டம்பர், 2009 இதழ்
# திண்ணை இணைய இதழ்

Wednesday, September 30, 2009

என்னை ஆளும் விலங்குகள்

எல்லாமாயும் எனக்குள்ளே
ஒளிந்திருக்கின்றன பல விலங்குகள்
பூசி மெழுகும் சொற்களெதுவும்
அவையிடத்திலில்லை
சில மீன்களைப் போல அமைதியாயும்
இன்னும் சில தேவாங்குகளைப் போல சோம்பலாயும்
சில நேரங்களில் மட்டும்
எறும்பு, தேனி, கரையான்களைப் போல
சுறுசுறுப்பாகுபவையுமுண்டு

காலத்தைப் பயனுள்ளதாக
நகர்த்திப் போவதாகப் பெருமை பேசி
திரும்பிப் பார்க்கையில்
தடங்களேதுமற்ற பொழுதில் பறவையாயும்
கோபமுறுகையில்
சீறும் சர்ப்பத்தைக் கொண்டு சிலதும்
நன்றி காட்டுகையில் நாயின் வாலாட்டுதலோடும்
நன்றி மறப்பதில்
பூனையின் மெதுநடைத் திருட்டு போலவும்
குவிந்த பல குணவியல்புகளோடு உலாவருகையில்
புன்னகைப்பது மட்டும்
மனிதத்தை ஒத்திருக்கிறது


- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# வார்த்தை - ஆகஸ்ட், 2009 இதழ்
# நவீன விருட்சம் - பெப்ரவரி,2010 இதழ்கள் 85/86ன் தொகுப்பு
# உயிர்மை

Sunday, September 13, 2009

சிதைந்த நாட்களோடு ஓய்தல்


எல்லாமாயும் ஓய்ந்துபோயிற்று
காலத்தின் நோய்ச் சக்கரம்

கரும்புகைகளில் சிக்குண்ட
வாழ்வினை மீட்டாயிற்று
சாத்தான் கரும்புள்ளிகளிட்டுக் கனத்த
இதயத்தோடு சேர்த்து வாழ்வினையும் கழுவி
தூய்மைப்படுத்தியுமாயிற்று

நீ அதிரவிட்ட
குரூர வார்த்தைகளின் பெருமதிர்வு
சுழன்று சுழன்று பரப்பெங்கும் மேவி
இருந்த ஆரோக்கியத்தையெல்லாம்
அள்ளிப்பறந்தது ஓர்பொழுது

நச்சுப்பரவிய தோல்மட்டும் இப்பொழுதும்
கருந்தழும்புகளைத் தாங்கியிருக்கிறது

வேறெதுவும் வேண்டேன்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி 
# நடுகை - கவிதைகளுக்கான இதழ் - ஆகஸ்ட் 2009
# ஓவியம் - நஜி அல் அலி (கொலை செய்யப்பட முன்னரான இறுதி ஓவியம்)
# திண்ணை இணைய இதழ்

Tuesday, September 1, 2009

கோடை


பெரு வனத்தை எரிக்குமொரு
ஊழித் தீயின் கனல் நான்
எரித்து எரித்துக் கருக்கி
எரியாக் கணங்களில் உள்ளுக்குள்
புகைந்து வெளிக் கசிந்து இருளாக்கி
பின்னும் ஆகாயத்தையே எரிக்கப்போல
அதியுயர் விருட்சங்களின்
நுனி பற்றியெரித்து
இன்னும் காட்டைக் கூடெனக் கொண்ட
எல்லா உயிரையும் பொசுக்கும்
வல்லமை பெற்ற கட்டற்ற நெருப்பின்
வலுஞ்சுடர்கள் நான்
மண்ணின் அடியாழத்துக்குள்
முகம் புதைத்துக் கொண்டோரே
நீர் மட்டும்
எல்லா அனல்களினின்றும்
தப்பித்து விட்டீரா

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி - வார்த்தை - ஆகஸ்ட், 2009 இதழ்

Saturday, August 15, 2009

ஊழிக் காலம்


காய்ந்துபோன ஏரிகளில்
காலம் தன் முகம் பார்த்துக் கொண்டது
சுருக்கங்களின்றி
பருவம் பூரித்துச் செழித்த தன்
முன்பொரு யுகத்தின் யௌவனம் பற்றி
பார்த்திருந்த வானத்திடம்
தன் முறைப்பாட்டையும் நெடுமூச்சையும்
ஒருசேரக் கொடுத்தது

எதையும் கண்டுகொள்ளாச் சூரியன்
வழமைபோலவே
காற்றைச்சுட்டெரித்தது
இருக்கும் விருட்சங்களை வெட்டியபடியும்
பிளாஸ்டிக் குப்பைகளைப் புதைத்தபடியும்
எதுவுமே செய்யாதவன் போல
முகம்துடைத்துப் போகிறேன் நான்
உங்களைப் போலவே வெகு இயல்பாக

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# பூவுலகு - ஜூன்,2009 இதழ்
# உயிர்மை

#திண்ணை

Saturday, August 1, 2009

ஒலி மிகைத்த மழை


மின்னலைப் பார்த்திருக்கும்
விழிகளுக்குச் சலனமேதுமில்லை
அநிச்சையாய் விரல்கள்
பின்னலை அவிழ்த்து மீண்டும் மீண்டும்
பின்னிக் கொண்டேயிருக்கின்றன

தவளைகள் கத்தும் சத்தம்
மழையை மீறிக் கேட்டபடியிருக்கிறது
இலைகள் கோப்பைகளாகி
நீரைத் தேக்குகின்றன
மழை ஓய்ந்த தென்றலுக்கு
பன்னீர் தெளிக்கக்கூடும் அவை

இப்பெருத்த மழைக்கு
கூட்டுக் குஞ்சுகள் நனையுமா
சாரலடிக்கும் போது
கூட்டின் ஜன்னல்களை மூடிவிட
இறக்கைகளுக்கு இயலுமா

மிகுந்த ஒலியினைத் திருத்த
இயந்திரக் கரங்களோடு எவனும் வரவில்லை
இரைச்சல்கள் அப்படியே கேட்டபடியிருக்கின்றன

நீயும்
எதனாலும் காவப்படமுடியாதவொரு
மனநிலையைக் கொண்டிருக்கிறாய்
இறுதிவரையிலும்
உன்னில் அமைதியை ஏற்படுத்த
என்னால் ஆக முடியாமல் போனதைப் போல

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# கலைமுகம் இலக்கிய இதழ் - 49 (ஜனவரி - ஜூன், 2009)
# நவீன விருட்சம்
# திண்ணை

Wednesday, July 15, 2009

நிசிவெளி


தீராக் கொடும்பசியுடன்
பூரண நிலவைத்
தின்று சிதறி
ஏதுமறியாப் பாவனையோடு
பார்த்திருக்கின்றன
நிசிவெளியின் நட்சத்திரங்கள்

முற்றாகத் தின்னட்டுமென
விட்டுப்பின்
இருளைத் தின்று வளர்கிறது
இளம்பிறை

-எம்.ரிஷான் ஷெரீப்



நன்றி - உயிர்மை

Wednesday, July 1, 2009

வதந்தி


உதிர்ந்த இலைச்சருகுகளுக்குள்
ஊர்ந்தொளிகிறது பாம்பு
கசந்த அசைவொன்றைக்
காற்றுக்குக் கொடுத்தபடி
ஆடியசையும் வனவிருட்சங்கள்
விஷப்பாம்பினைப் போர்த்த
மேலும் மேலும் உதிர்க்கின்றன
இலைகளையும் காட்டுப்பூக்களையும்

குஞ்சுகளின் பசியாற்றிய பட்சி
உள்ளே அதிர்ந்து நிற்க
பசித்த பாம்பு தன் வாடை பரப்பி
மரமொன்றின் கிளிப்பொந்தில்
இரைதேடி ஏறுகிறது

பீதியில் நடுநடுங்கிய
தாய்க்கிளியின் ஓசை
வனமெங்கும் அதிர
ஏதுமறியாக் குஞ்சுகளும்
உண்ட இரை கக்கத் தம்
மென்குரலில் அலற
சர்ப்பம் ஒரு குஞ்சை விழுங்கிற்று

எஞ்சிய குஞ்சுகள்
விஷ உடலின் கீழ் நசுங்கி
இடையறாது கதற
நிஷ்டை கலைந்த வனமும்
மற்றவையும்
பட்சிகளைச் சாடியபடி கிடக்கையில்

எப்பொழுதும் போலக்
குஞ்சுகளின் குரலெடுத்து
அவற்றின் உயிரெடுத்துக்
காற்றே போ
கிளிச்சொண்டு சொல்லுதிர்த்ததால்தான்
காட்டில் பெருங்கலகம் விளைந்ததெனப்
போய்ச் சொல்

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


நன்றி - உன்னதம் ( மே-2009) இதழ்

Monday, June 15, 2009

பின்னங்கால் வடு


உதிர்ந்த சருகு போலாகிவிட்ட
அப்பாவுக்கு முந்தியவர்கள் 
எப்பொழுதோ நட்டுச் சென்ற
முற்றத்து மாமரம்
அகன்ற நிழலைப் பரப்பி
மாம்பிஞ்சுகளை
பூக்களைப் பழங்களை வீழ்த்தும்

தண்டின் தடித்த பரப்பிலோர் நாள்
என் பெயர் செதுக்கினார் அப்பா
தடவிப்பார்க்கிறேன்
கசிந்து காய்ந்த தழும்பின்
நெருடலும் அப்பாவுமாக
விரல்களில் உறைகிறது நினைவுகள்

இறுதியாக அவர் மடியிலமர்த்திச்
சொல்லித்தந்திட்ட வேளையில்
விரிந்திருந்த அரிச்சுவடியின்
எழுத்துகள் ஒவ்வொன்றிலும்
நகர்ந்த என் பிஞ்சுச் சுட்டுவிரலின் அழுத்தத்தில்
நகக்கண்ணில் வெள்ளை பூத்தது
எழுத்துக்கள் குறித்துநின்ற
விலங்குகளுக்கும் கூட
உயிரிருந்திருக்கும் அப்பொழுது

வீட்டின் கொல்லையில்
அகன்ற பெருங்கூட்டுக்குள்
அழகிய பூமைனா வளர்ந்தது
விழி சூழ்ந்த மஞ்சள் கீற்று
மென்சதை மூடித்திறக்கும் கருமணிகள் உருள
நாற்சூழலுக்கும் கேட்கும் படி
தன் சொண்டுகளிலிருந்து
எப்பொழுதுமேதேனும்
வார்த்தைகளை வழியவிட்டுக் கொண்டிருக்கும்
அதுதான் முதலில் அலறியது
கப்பம் கேட்டு
ஆயுதங்கள் நுழையக் கண்டு

பீதியில் நடுங்கிப்
பதைபதைத்து நாங்கள்
ஒளிந்திருந்த தளத்துள்
பலத்த அரவங்களோடு
அப் பேய்கள் நுழைந்திற்று
ஏதும் சொல்ல வாயெழாக் கணம்
கோரமாயிருந்தவற்றின் அகலத்திறந்த
வாயிலிருந்து கடுஞ்சொற்களும்
துப்பாக்கிகளில் சன்னங்களும் உதிரக்கண்டு
மேலுமச்சத்தில் விதிர்விதித்து
மூர்ச்சையுற்றுப் போனேன்

விழித்துப் பார்க்கையில்
பிணமாகியிருந்தார் அப்பா
ஊனமாகியிருந்தேன் நான்
அம்மாவும் அக்காவும்
எங்கெனத் தெரியவில்லை
இன்றுவரை

குறி பிசகிய
துப்பாக்கி ரவை விட்டுச் சென்ற
ஒற்றைக்காலின் சாம்பல் வடு
அப்பா,அம்மா,அக்கா,சுற்றம் குறித்த நினைவுகளை
இனி வரும் நாட்களிலும்
ஏந்தி வரக்கூடும்

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி - புகலி
                மனிதம் - ஏப்ரல் இதழ்

Monday, June 1, 2009

விருட்ச துரோகம்

தென்றல் சாட்சியாக
பிறை நிலவும் தாரகைகளும் சாட்சியாக
அல்லிக்குளத்து நீர்ப்பூக்கள் சாட்சியாக
விருட்சக் கூட்டுப் பட்சிகளும் சாட்சியாக
ராக்குருவியின் மெல்லிசையொன்றோடு
இருள் படர்ந்த நடுநிசிப்பொழுதொன்றில்
அடர்துயிலில் நிலத்தில்
ஒன்றிப்படர்ந்திருந்த பூங்கொடியினைத்
தன் மேல் போட்டுக்கொண்டது
வனத்தின் பெருவிருட்சமொன்று

புது இடத்தில் துவண்ட கொடியின்
மனவலியகற்றி
நேசம் சொல்லிச் சொல்லி
ஆறுதல்படுத்திற்று மரம்

கொடியின் பேரெழில் பூக்கள்
வண்ணத்துப்பூச்சிகளுக்கும் வண்டுகளுக்கும்
தேன்சிட்டுகளுக்கும் எட்டாமல்
மரத்தின் இலைகள்
முக்காடாகிப்போயின
கொடி சூழலுக்கிறைக்கும்
சுத்தக்காற்றும் மேல்நோக்கிப் பறந்து
வீணாகியே போயிட
எதற்கும் பயனற்றுப்போன
கொடியின் மலர்கள் வீழ்ந்து
வேரின் மண்ணுக்கு உரமாகின

வசந்தங்கள் மிகைத்த காலமொன்றில்
சூழவும் மரத்தின் நிழலில்
அழகழகான பூக்கள் கொண்ட
வேற்றுக்கொடிகள் சில
வேர்விடத் தொடங்குகையில்
தூக்கிவளர்த்த கொடியை சிறிதகற்றி
மரம் அனைத்தையும்
வரவேற்றுப் பாடியது

ஓர் துர்நாளில்
தன்னை நம்பிப் படர்ந்திருந்த
பழங் கொடியுதிர்த்தகன்றது துரோகித்த மரம்
அந்தோ
விருட்சத்தை மட்டுமே
நம்பிச் சிதைந்த கொடி
நீரற்றுக் கிளையற்றுப்
படர ஒரு துரும்பற்றுத் திரும்பவும்
மண்ணிலே வீழ்ந்தழிந்தது

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி - வடக்குவாசல் - ஏப்ரல், 2009

                 திண்ணை

Tuesday, May 19, 2009

மீள்தலின் பாடல்


ஓய்வுகளின்றி ஓடித்திரிந்த உடல்
தொய்வுகளேதுமின்றி
எழுதிவந்த விரல்கள்
வெளியெங்கும் புன்னகையை விதைக்கும்
இதழ்களோடும் விழிகளோடும்
சேர்ந்தெப்பொழுதும் மூடியே இருந்தன
இரவு பகல் காலநிலையென
மாறும் காலக்கணக்குகளறியாது
ஆஸ்பத்திரிக்கட்டிலில் மயங்கிக்கிடந்தேன்
ஓயாத பேச்சுக்குள் சிக்கித்தவித்த நாவு
மௌனத்தைப் போர்த்தி உறங்கிப்போனது

கண்களில் பேரன்பு பொருத்தித் தலைகோதி
ஆரோக்கியத்தைச் சொட்டுச் சொட்டாக ஏற்றி
எனது புலம்பல்களைச் சகித்தபடி
நடமாடிய செவிலித்தாய்களில்
அக்கா உன்னைக் கண்டேன்

ஆறுதலும் அக்கறையும் மிகுந்த வார்த்தைகளை
உன்னழுகையில் குரல் இடராது
தொலைபேசி வழியே கசியவிட்டாய்
நகர்ந்த நொடிகளனைத்திலுமுன்
பிரார்த்தனைகளினதும்
நீ அதிர்ந்தெழும் கொடிய கனவுகளினதும்
மையப்பொருளாக
நானிருந்தேனெனப் பின்னரறிந்தேன்

நீ பார்த்துப்பார்த்துச் செதுக்கிய
கவிதையின் முகத்தினை
மீளப்பொருத்தியபடி
தம்பி வந்திருக்கிறேன்
எல்லாக்காயங்களையும்
முழுதாயாற்றிடக் காலத்துக்கும்
சிறிது காலமெடுக்கலாம்
எனினும்
'மீளவும் பழைய ஆரோக்கியத்திடம்
மீண்டுவிட்டேன்' என
இப்போதைக்கு உன் வரிகளைச்
சொல்வதன்றி வேறறியேன்

- எம்.ரிஷான் ஷெரீப்.

* அன்புச் சகோதரி ஃபஹீமா ஜஹானுக்கு...

Friday, April 17, 2009

சாகசக்காரியின் வெளி

அதீத மனங்களில் மிதந்து வழியும்
ஆசைகளை அவளறிவாள்
தன் வஞ்சக விழிகளில் சிரித்து
மென்மை வழியும் குரலினை
சாம்பல் காலங்களின் முனையினில் மாட்டி
தூண்டிலென எறிவாள்

கபடங்களறியாக் கண்களைக் கொண்ட
பிஞ்சுமனங்களை அவளிடம்
கொடுத்துப் பார்த்திருங்கள்
அல்லது
உலகம் மிகவும் நல்லதெனச்
சொல்லிக் கொண்டிருக்குமொரு மனிதனை
அவளிடம் விடுங்கள்
அம் மனிதன் தானாகவே
முன்பு நல்லதெனச் சொன்ன நாவை
கருஞ்சுவரில் தேய்த்துக்கொள்ளும்படியான
நஞ்சை மிடறாக்கி
அருந்த வைத்திருப்பாள் அவள்
கைவசமிருக்கும்
எல்லா நெஞ்சங்களையும்
கெட்டதாக்கி அழுகவைத்துப்
பின்னொருநாள் புது இதயங்களுக்கு
மீண்டும் தூண்டிலிடவென விட்டுச் செல்வாள்
அழுதழுது நீங்கள்
அவளைத் தேடிச் சென்றால்
உங்களைத் திரும்பச் சொல்லி
மென்மையானதென நீங்கள் சொல்லும்
அவளது பாதங்களால் எட்டியுதைப்பாள்
கொடுந்தீய வார்த்தைகளையெல்லாம்
எச்சிலோடு காறி உங்கள்
வாடிய முகங்களில் துப்பிடுவாள்

பிஞ்சு மனங்களை, நல்ல மனிதனை
வக்கிரங்களறியவென
அவளிடம் கொடுத்த நீங்கள்
இதையெல்லாம்
சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்
ஏனெனில் அவள்
சாகசக்கார வெளியில்
வன்முறைகளை விதைப்பவள்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


லண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பான இக்கவிதையை ஒலிபரப்பாளர் ஸைஃபா பேகம் அவர்களின் குரலில் கேட்க...





நன்றி - 
* நவீன விருட்சம் காலாண்டிதழ்
* லண்டன் தமிழ் வானொலி

Thursday, April 9, 2009

கண்ணீர்ப் பிரவாகம்

2009, பெப்ரவரி மாத வடக்குவாசல் மாத இதழில் பிரசுரிக்கப்பட்ட எனது 'கண்ணீர்ப் பிரவாகம்' கவிதையினை தமிழ்மணம் நட்சத்திரப் பதிவாக இங்கே பார்க்கலாம்.

Wednesday, April 1, 2009

துரோகிக்கு மிகவும் நன்றி

வஞ்சித்த சினேகமொன்றினை
எண்ணித்தனித்துச் சோர்ந்து
கதறிக் கதறியழுதவேளை
நீயுள் நுழைந்தாய்
மிகுந்து வெடித்த
கவலைக்கான கலங்கலிலுன்னுருவம்
தட்டுப்படவில்லையெனினும்
தலைசாயத் தோள் கொடுத்து
மிதந்த துயரையெல்லாம்
மேலும் மேலும் அழுதுதீர்க்கும்படி
ஆதரவாய்ச் சொன்னாய்

கவலையறியாக் கண்ணீரறியா
தனித்த ஜீவனொன்று
காலம் காலமாய்ச் சேமித்த விழிநீரெல்லாம்
அணை உடைப்பெடுத்துத் திமிறிப் பொங்கி
உன் தோள் நனைத்த கணத்தில்
அன்னையின் அணைப்பையொத்த
அன்பான தலைதடவலுன்
கருணை மனம் சொல்லிற்று

எதற்கிந்த அழுகை
ஏதுன்னைக் கதறச் செய்தது
எதையுமே நீ கேட்டிடவில்லை
தூய அன்பைக் கொன்றவனதை
மயானத்தில் புதைத்த கதையின்
ஒரு சொல் பற்றிக் கூட
உன்னிடம் கேள்விகள் இருக்கவில்லை
அத்துயர்பற்றியேதும் நீ அறிந்திருக்கவுமில்லை

நீ யாரெனத் தெரிந்திருக்கவில்லையெனினும்
அக்கணத்தில் நீயொரு
ஊமையாய் இருந்தாய்
செவிடனாய் இருந்தாய்
எதையுமே அறியாமல்
பாசமாய் அரவணைத்தவொரு
பொம்மையாய் இருந்தாய்
வழிந்த துளிகள் காய்ந்து
கண்ணீர் மீதமற்ற பொழுதில்
புன்னகை தந்தவொரு தேவதூதனாயிருந்தாய்

வாழ்வின் பாதங்கள்
வழிதவறிப் போனதை மட்டும்
எக்கணத்திலும் கேட்டாயில்லை
வழிய வழிய அன்பைத்தந்து இப்பொழுதெல்லாம்
நயவஞ்சகனொருவன் பற்றிய
பழங்கால எண்ணங்கள் மிகைக்காமல்
நேசத்தின் அழகிய பாடல்களை
காலங்கள் தோறும் காற்றில் மிதக்கும்படி
எப்படிப் பாடுவதெனச் சொல்லித் தருகிறாய்

சகா
இரு கரங்கள் உயர்த்திய
புராதனப் பிரார்த்தனையொன்றின் பலனாக
அமைதியையும் அன்பையும்
அகிலம் முழுதுமான மகிழ்வையும் நிம்மதியையும்
அள்ளியெடுத்து நீ வந்தாயோ
வசந்தங்கள் நிறைந்து
நறுமண வாடை சுமந்த தென்றலுலவும்
ஓரழகிய பூஞ்சோலை வாழ்வின்
பளிங்குப் பாதை வழியே
எந்த இடர்களும் இடறல்களுமற்று
சிறுமழலையாய் விரல் பிடித்து
வழிகூட்டிப் போகிறாய்

இப்போதைய அழகிய வாழ்வின்
நேசனாயுனைச் சேர்த்த
அந்தக் கண்ணீருக்கு நன்றி
கரிய இருள் பரவிய கொடிய வழியினில் அழைத்துக்
காயங்கள் தந்து கண்ணீர் தந்து
அன்பான உன்னிடம்
கைவிட்டுச் சென்ற
அந்தத் துரோகிக்கு மிகவும் நன்றி

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை


நன்றி - 'நாம்' மலேசிய காலாண்டிதழ் ஜனவரி - மார்ச் 2009

Sunday, March 22, 2009

பெண் மனது மற்றும் ஆட்சிகள் உனதாக...

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியான 'விகடன் மகளிர் சக்தி' மற்றும் 'மனிதம்' இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட எனது இரு கவிதைகள்.

பெண் மனது

அவர்கள் வரட்டும்
எது கொண்டோ உடைத்துப் போன
ஓர் ஆழ்துயர் மனதை
எப்படிச் சரிப்படுத்துகிறார்களென
வேடிக்கை பார்க்கலாம்

அது ஒரு பெண் மனது
பால்யம் முதலாய்ப் பலர் சேர்ந்து
பருவங்கள் தோறும்
பல எல்லைகளையும் அணைகளையும்
வளையங்களையுமிட்டு
இன்னும் பல இடர்களை ஒன்றாய்ப் பின்னி
இறுக இறுகச் சேர்த்துக்
கட்டிய மனது

முன்பும் அது சிதைந்தது
சிறுகச் சிறுகச் சிதைந்து வருகையில்
திரும்பவும் வந்து
பெருந்துயரொன்று கொண்டு
அவர்கள்
அதனை மீளச் செப்பனிட்டார்கள்

காலத்திற்கு என்ன தெரியும் - அவளது
கண்ணீர் பிசைந்து
அவர்கள் சீர்படுத்தப் படுத்த
மீண்டும் சிதிலமாகவே செய்தது
இப்பொழுதைப் போல

அவர்களும் வந்தனர்
ஓட்டைகள் வழியே நழுவிய துயர்களை
நினைவுகள் கொண்டு மீள அடைத்தனர்
மறதியில் உதிர்ந்து
காணாமல் போனவற்றை
மீளப் பெறமுடியாமல் போக
அவதூறுகள் கொண்டும்
கடுஞ்சொற்கள் கொண்டும்
அவளுக்கு வலிக்க வலிக்க
மகிழ்வோடும் அலுப்பில்லாமலும்
இதயம் நிறைந்த குரூரத்தோடும்
மீளவும் மெருகேற்றினர்

அவர்கள் பார்வையில் இக்கணத்தில்
அழகு பெற்றதாகி விட்டது அது

அது ஒரு பெண்மனது
ஆம் அவள் ஒரு பெண்

நன்றி
# விகடன் மகளிர் சக்தி
# பெண்ணியம்



ஆட்சிகள் உனதாக

அநிச்ச நிலவதனைப் பிடித்து
அவளது வதனத்தில் இடுகிறாய்
மீன்களைப் பிடித்து அவளது விழிகளிலிட்டுத்
துள்ளத் துடிக்க நீர் சிந்தப் பார்த்து ரசிக்கிறாய்

உன்னுடையது போன்றதேதானே
அவளுடையதும்
எனினும்
கழுத்தைச் சங்கென்கிறாய்
பற்களை முத்தென்கிறாய்
கன்னங்களைக் கனிகளென்கிறாய்
உதிர்ந்த ஒற்றை முடியை
உயிர்த்தோகை என்கிறாய்
உன் முன்னால்
வெட்டி எறிந்த நகத்துணுக்கைக் கூடப்
பிறைநிலவென வர்ணிக்கிறாய்
இன்னுமின்னும்...

அஃறினைகளுக்காளாக்கி
அவளை வதைத்தது போதும்
எப்போதவளைச் சக மனுஷியென்பாய் ?


நன்றி - மனிதம் இதழ்

 -எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.


Monday, March 2, 2009

எம் மண்



நடந்து நடந்து பாதங்கள் வெடித்தன
வாழ்விடம் குறித்த கனவுகள் பெருகி
ஏக்கங்கள்
தாண்டும் பொழுதுகளிலெல்லாம் வழியலாயிற்று
சொந்தத் தரை மண்ணிட்டுப்
போற்றி வளர்க்கும் செடியொன்றின்
கிளைப் பூக்களுக்கு அவாவி
எல்லா இடர்களுக்குள்ளும்
எம் சுவடுகள் திரிகின்றன

நிலவும் பார்த்திற்று சூரியன் கொண்டுபோன
நீர்த்துகளும் பார்த்திற்று
இன்னும் அனைத்தும் பார்த்திட
வாழ்வின் அறுவடைக்கு முன்னர்
விடியலைத்தான் காணவில்லை

' வரிசை வரிசையாய் மனிதர்கள்
ஆயுதங்கள் கொண்டு
இடையில் கோடுகிழித்துச் சலனங்களை
ஏற்படுத்து
சுமைகளை அந்தரத்தில் விட்டு
திசைக்கொன்றாய்ச் சிதறி ஓடிப்போகட்டும்
மனிதர்கள் எறும்பல்லவே
ஒன்றுகூடுதல் ஆபத்து
அவர்களுக்குள் மொழி இருக்க
தேசம் பற்றிய இலட்சியங்கள் இருக்க
தாய்மண் தந்த வீரம் வழிநடத்துகிறது '
எனக் குறிப்புகளெடுத்து
அப்பாவி ஜீவன்களின் உயிரெடுத்தல் குறித்துப்
பாடங்கள் நடத்து

தாய்மண் குறித்த
நம்பிக்கைகள் வழிநடத்த
சாவுக்கொன்றும் பயந்தவர்களில்லை நாங்கள்
உன்னைப் போல

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.


நன்றி - யுகமாயினி ( பெப்ரவரி, 2009 )

Sunday, February 15, 2009

கோபங்களின் நிமித்தம்

வழமை போலவே
உனது அளவிடமுடியாக் கோபங்களையும்
எல்லாப்பழிகளையும் என்னிலேற்று
வழியிறங்கிப்போகிறேன்

ஒவ்வொரு துணிக்கையிலும்
அன்பைக் கொண்டு
எனக்காய்ச் செய்ததான சுவர்களுக்குள்
உன் சகாப்பிசாசுகளை ஏவுகிறாய்
மிகுந்த அச்சம் கொண்ட பார்வையினை
மீண்டும் மீண்டும் உன்னிலெறிகையில்
அலட்சியத்தின் சலனமற்ற மொழி
உன் முகத்தில் உறைகிறது

நாற்திசைகளிலும் ஊசலாடும்
நூலாம்படைகளினிடையில்
சிதறும் மனதின் சூனியங்களுக்குள்
நிரம்பி வழிகிறது
நிராகரிப்பின் பெருவலி

நான் அகல்கிறேன்
உனது இப்பெருங்கோட்டையை விட்டும்
நீயுன் வழித்துணைகளை
மூலைக்கொன்றாய்க் குடியமர்த்திப்
பாடச் சொல்லி ரசி

இறுதியாக வழமை போலவே
உனது அளவிடமுடியாக் கோபங்களையும்
எல்லாப்பழிகளையும் என்னிலேற்று
வழியிறங்கிப்போகிறேன்

வாழ்க்கை
அது மீண்டும் அழகாயிற்று

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.


நன்றி - வார்ப்பு, நவீன விருட்சம்

Thursday, February 5, 2009

உதிர்ந்த பூவின் வெயில்

கொழுத்த வெயில் பரவிய தார்வீதியின்
மேலுதிர்ந்த ஒற்றைப் பூவினை
ஏழை யாசகனொருவனின் மெலிந்த பாதமொன்று
மிதித்து நகர்கிறது

மிதிபடாவிடினும்
தாரோடு சேர்ந்து இதழ்கள் கறுக்க
இன்னும் பொசுங்கியிருக்கக்கூடும்

உதிர்த்த விருட்சத்துக்குத் தெரியவில்லை
பூவின் வலி
விருட்சத்தின் வேர்களும் கானகமொன்றிலிருந்து
எப்பொழுதோ அகற்றப்பட்டிருக்க
கொடும் நகரத்துக்குள் பூக்கள் உதிர்க்க
நிழல் சருகுகளையா தேடமுடியும்

மரத்திலிருந்து உதிர்ந்த
ஒற்றைக் காகத்தின் நிழல் மட்டும்
கறுப்பாகப் பறந்தவாறே
அடுத்த தெருவுக்குச் செல்கிறது

அத்தனையும் பார்த்தவாறு
கொடிய வெயில் அப்படியே இருக்கிறது
இப்பொழுது என்ன செய்தபடி இருக்கிறாயென
உன்னைக் கேட்கவிழையும் என்னையும் பார்த்தபடி

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,

இலங்கை

( நன்றி - யாத்ரா - இலங்கையிலிருந்து வெளிவரும் கவிதைகளுக்கான இதழில் பிரசுரமான கவிதை )

Friday, January 16, 2009

பொம்மை நேசம்

எனைச் சிலகாலம் உன் மனதிற்குத்
தத்தெடுத்திருந்தாய்
விழிகளை உருட்டி விழித்துக்
கன்னங்களை உப்பவைத்து ஓசையெழுப்பி
மகிழ்வூட்டிக் கொண்டேயிருந்தாய்

தத்தெடுக்கப்பட்டதன் களிப்பு
என்றென்றும் நிலைத்திருக்க
பிரார்த்திருக்கத் தெரியாதவனாகி
உன் மனதில் நானிருந்தேன்

சில காலம் ஆயிற்று - எனக்கு
வேடிக்கை காட்டி நீ மகிழ்ந்து கிடப்பது
உனக்கே சலித்திருக்கக் கூடும்

மனம் முழுதும் வியாபித்துக் கிடந்த என்னை
சிறப்பேதுமற்ற நாளொன்றில்
விழி பறித்துக் கை முறித்து
உன் மாளிகையிலிருந்து உதறியெறிந்து
எனை வலிக்கச் செய்தாய்

இப்பொழுதும்
காக்கைக் கூடெனத் தெரிந்தே
கருங்குயில்கள் முட்டையிடுகின்றன

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Thursday, January 1, 2009

உன்னால் வீண்பழி சுமந்தவனின் அறை

காதல் வானத்திலேறி
இதய வானவில்லில் குதித்து அதன்
நிறமிழந்த பகுதிகளுக்கு நீ
சாயமடித்த பொழுதில்தான்
என்னறைக்கு உதிர்ந்திருக்கவேண்டும்

சூழ விழுந்தவற்றை
எனதிருப்பிடம் வந்த பாதங்கள்
வஞ்சகமாய்க் கொண்டுவந்து சேர்த்தன
அந்தரத்தில் நின்றவற்றை
அவதூறு சுமந்த காற்று
அள்ளி வந்து தெறித்தது

உன் தவறால்
பெரும்பாரமாய் அழுத்தும்
வண்ணங்களால் நிறைந்ததென்னறை

என் தவறேதுமில்லையென மெய்யுரைக்க
பட்சிகளையும் வண்ணாத்திகளையுமழைத்து
செட்டைகளில் வண்ணங்களை
வழிய வழிய நிறைத்து
பூமிதோறும் வனங்கள் தோறும்
காணும் பூக்களுக்கெல்லாம்
கொடுத்து வரும்படியனுப்பியும்
இன்னும் வண்ணங்கள் குறைவதாயில்லை

அறை முழுதும்
சிதறிக்கிடக்கின்றன
நீ தெறித்த வண்ணங்கள்
மௌனத்தின் வண்ணத்தை மட்டும்
நான் முழுதும் பூசிக்கொள்கிறேன்
எஞ்சிய வண்ணங்களை
நீயேயள்ளிக் கொண்டுபோ

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.