Wednesday, October 15, 2014

மலையுச்சிப் பூவின் தியானம்




கைக்குழந்தை உள்ளங்கையென மொட்டவிழ்கிறது
பறிக்கப்படாத கனிகள் வீழ்ந்தழியும் மலைத் தரைகள்
வனப்பு மிக்க காடுகளைச் சுமக்கின்றன தம்மில் அவை

அந்திப் பறவைகள்
கறுப்புத் திட்டுகளாகப் பறந்து மறையும்
மாலை நேரங்களில் வனங்கள் என்ன செய்யும்

உன் பாடலெனப் பொழிந்திடும் மழை பார்
ஒவ்வொரு துளிகளிலும் உறைந்திருக்கக் கூடும்
தாண்டிப் பறந்த பட்சி இறகுகளின் ரேகைகள்

நீ மிதந்திருக்கிறாய் ஒரு வெண்குதிரையின் மீது
யாரும் அகற்றிடா ஆதிச் சருகுகள் மூடி மறைத்திருக்கும்
தடித்த வேர்கள் பிடித்து வைத்திருக்கும்
கருங்கற் குகைகளிடை வழி
உனது பயணப் பாதையல்ல

நீ பறித்து வரச் சென்ற மலையுச்சிப் பூவின் தியானம்
கடவுளுக்கானது
காட்டின் விரூபங்களை மறைக்கும் இராப் பொழுதுகளில்
உதிக்கும்
மலையுச்சிப் பூவின் சோர்ந்திடாத் திமிர்

உனது இலக்குகளில்
பகலைக் கரைத்த ஈரம் சொட்ட அழுத சூரியன்
எங்கோ தொலைந்துபோகும் இத் தருணத்தில்
தாமதியாதே
வனத்தின் வேர்களில் உனது புரவிகள் சற்று ஓயட்டும்

- எம். ரிஷான் ஷெரீப்
நன்றி

# தீராநதி இதழ் - ஆகஸ்ட், 2014, படிகள் - பத்தாவது ஆண்டுச் சிறப்பிதழ் - ஆகஸ்ட் 2014, வல்லமை இதழ், காற்றுவெளி, பதிவுகள், வார்ப்பு