Monday, May 1, 2017

தென்னைகளில் கள்ளெடுப்பவள்






பக்கவாதப் புருஷனுக்கென முதலில்
வீட்டுத் தென்னையில் கள்ளெடுத்தவளின்
தோப்பு மரங்கள்
அத் தடவை காய்த்துக் குலுங்கியது கண்டு
தொடக்கத்தில் ஊர் முழுவதும்
வியப்பாகக் கிசுகிசுத்துக் கொண்டார்கள்
பெண்ணேறும் தென்னைகள்
அதிகமாகக் காய்க்கிறதென


விடியலிலும், இரவிலுமென
எக் காலத்திலும் மரமேறுபவள்
எல்லாத் தென்னைகளினதும் உச்சிகளைத் தொடுத்து
நீண்ட கயிற்றினால் முடிச்சிட்டுக் கட்டினாள்


ஓரோர் மரத்துக்கும்
கயிற்றின் வழியே நடந்து சென்று
மண்பானைகளைப் பொருத்தியும், எடுத்தும் வரும்
கள்ளெடுக்கும் செம்பருத்தி
தென்னை ஓலைகளினூடே தொலைவில்
கடல் மின்னுவதை
எப்போதும் பார்த்திருப்பாள்


தென்னந் தோட்டங்களை வைத்திருப்பவர்கள்
அவளைக் காண வரும் பின் மதியங்களில்
தம் தோப்புக்களைச் செழிக்கச் செய்ய வேண்டுமென்ற
அவர்களது வேண்டுகோள்களோடு பணத்தையும் வாங்கி
பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வாள்


ஒரு தொகை பணம் சேர்த்த பின்
கடலின் அப்புறம் தெரியும் தீவுத் தென்னைக்கு
கயிறெரிந்து முடிச்சிட்டு
கணவனோடு தப்பித்துச் செல்லும் வீரியம்
அவள் கண்களில் மின்னும்
அப்போதெல்லாம்

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி - காலச்சுவடு இதழ்-207, தமிழ் எழுத்தாளர்கள் இதழ், ஊடறு, வல்லமை, வார்ப்பு