Thursday, October 15, 2009

காவல் நாகம்


எனதான தனிமையை
இருட்டைப் போல உளவு பார்த்து
அடர் சருகுகள் பேய்களின் காலடியில்
மிதிபடும் ஓசையைக்
கனவுகள் தோறும் வழியவிட்டு
நெஞ்சு திடுக்கிட்டலறும்படி
அச்சமூட்ட முயலுமுனது
புலன்கள் முழுதும் பகை நிரம்பிக்
காய மறுத்திற்று

சாத்தான்களுலவும் வானின் மத்தியில்
முகில்களின் மறைப்புக்குக் காவிச்சென்றெனது
சிறகுகளகற்றிப் பறக்கவிடுகிறாய்
விசித்து விசித்தழும் மெல்லிய இதயத்தோடு
வீழ்ந்து நொறுங்குமெனது
இறுதிக் கணத்தில் தொங்கியபடி
கேட்கிறதுன் விகாரச் சிரிப்பு

பற்றுறுதியற்று
அழுந்தி வீழ்ந்த கண்ணாடி நேசத்தில்
பழங்கானல் விம்பங்களைக் கொடுங்காற்று
காலங்கள் தோறும் இரைத்திட
உனது வரையறைகளை
நீ விதித்த கட்டுப்பாடுகளை
விஷச்சர்ப்பமொன்று விழுங்கட்டும்

ஆதி தொட்டுக் காத்துவரும் வைரமாயவை
உருப்பெற்றுக் கக்கியபின் கொன்று
காவல்பாம்பாக நீயே மாறு
இலகுதானுனக்கு
கொன்றொழிப்பதும் காவல் காப்பதுவும்
காவலெனச் சொல்லிச் சொல்லிக் கொன்றொழிப்பதுவும்

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


நன்றி
# உன்னதம் செப்டம்பர், 2009 இதழ்
# திண்ணை இணைய இதழ்