
உனது உயிர்
போகும் பாதையைப்
பார்த்த படியே
விழிகள் திறந்தபடி
உயிர்விட்டிருந்தாய் !
ஏழு வானங்களையுமது
எந்தத் தடைகளுமின்றித்
தாண்டிச்சென்றதுவா...?
திறந்திருந்த வாய்வழியே
இறுதியாக என்ன வார்த்தையை - நீ
உச்சரிக்க நினைத்திருந்தாய்...?
நீ
நிரபராதியோ...
தவறிழைத்தவனோ...
உயிர்விடும் கணம்வரை
எப்படித் தாங்கிக் கொண்டாய்
அவ்வலிகளை ?
உன் நகங்கள்
ஒவ்வொன்றாக பிடுங்கப்பட்டிருந்தன .
நீ பிறந்தவேளையில்
ஒரு மெல்லிய பூவிதழ்போல்
அவை இருந்திருக்கக்கூடும் !
உன் உடம்பு முழுக்க
வரி வரியாய்
காயங்கள்...வீக்கங்கள்...
சிறுவயதில் நீயும்
சிறு சிராய்ப்புக்கு அழுதபடியே
எச்சில் தடவியிருப்பாய் !
என்றபோதிலும்
எதுவுமே சொல்லாமல்
உயிர் விட்டிருந்த உனது
விழிகளில் மட்டும்
எஞ்சியிருக்கிறது இன்னும்
ஏதோ ஒரு ஏக்கம்...
ஏதோ ஒரு தாகம்...
- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.