Monday, December 17, 2007

ஒரு கணப் பொழுதில்...!


இக்கணம்
எங்கேனும் ஒரு மூலையில்
ஏதேனுமொரு எரிநட்சத்திரம்
சமுத்திரத்தில் வீழ்ந்து
சங்கமமாகியிருக்கலாம் !

இக்கணம்
ஒரு பூ உதிர்ந்திருக்கலாம் ,
ஒரு பூ மலர்ந்திருக்கலாம் ,
எறும்பூரக் கற்குழிந்த கணம்
இதுவாகக் கூட இருக்கலாம் !

இக்கணம்
ஏதோவோர் எல்லையில்
மலையொன்று மண்மேடாகியிருக்கலாம்,
மரமொன்று வேருடன்
வீழ்ந்திருக்கலாம் !

இக்கணம்
இதழ் விரிக்கும் - எனதிந்தக்
கவிதையைப் போல
யாரேனும் ஒரு தாய்க்கு
ஒரு அழகிய இளங் கவிதை பிறந்து
'அம்மா' என்றழுதிருக்கலாம் !

இக்கணம்
எங்கேனுமொரு மூச்சு
நின்று போயிருக்கலாம் ,
எங்கேனுமொரு மூக்கு
புதுக் காற்றை சுவாசித்திருக்கலாம் !

புயலடித்து ஓய்ந்த கணம்,
பூகம்பம் வெடித்த கணம்,
முதல் தூறல் விழுந்த கணம்,
மழை நின்று போன கணமென
ஒரு கணத்தில்
எல்லாமும் நிகழ்ந்திருக்கலாம் !

அந்நியனின் ஆக்கிரமிப்பில்
வதைப்பட்டு,
வாழ்விழந்து,
அனாதையாகி , அகதியாகி,
தாயொருத்தி பிள்ளையிழந்து,
தாரமொருத்தி விதவையாகி
விம்மியழும் ஒரு சொட்டுக்
கண்ணீர்த்துளி நிலத்தில் வீழ்ந்த
கணமாகவும் இது இருக்கலாம் !

ஏழு வானங்களையும்
தடைகளெதுவுமின்றி தாண்டிப்போன
ஒரு ஷஹீதின் உயிருக்கு
வானவர்களும் அழகிய தேவதைகளும்
மணம் நிறைந்த
மரணமின்றிய வாழ்வுக்கு
கதவு திறந்த கணம்
இதுவாகக் கூட இருக்கலாம் !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

* ஷஹீத் - யுத்த களத்தில் மரணமடையும் வீரன்.

6 comments:

v.pitchumani said...

நன்றாக உள்ளது உங்களது கவிதைகள்
தொடருங்கள்
வே.பிச்சுமணி

M.Rishan Shareef said...

அன்பின் பிச்சுமணி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

இப்னு ஹம்துன் said...

நல்ல கவிதை,
நிறைய எழுதுங்கள் நண்பரே.

M.Rishan Shareef said...

அன்பின் இப்னு ஹம்துன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே ... :)

கோகுலன் said...

ஏழு வானங்களையும்
தடைகளெதுவுமின்றி தாண்டிப்போன
ஒரு ஷஹீதின் உயிருக்கு
வானவர்களும் அழகிய தேவதைகளும்
மணம் நிறைந்த
மரணமின்றிய வாழ்வுக்கு
கதவு திறந்த கணம்
இதுவாகக் கூட இருக்கலாம் !

உங்க கவிதையில எனக்கு புரியாத வார்த்தைகள் நிறைய இருக்கு..

ஷஹீதின் ????

M.Rishan Shareef said...

அன்பின் கோகுலன்,

//உங்க கவிதையில எனக்கு புரியாத வார்த்தைகள் நிறைய இருக்கு..

ஷஹீதின் ???? //

ஷஹீத் என்பது ஓர் அறபுச் சொல்.யுத்தத்தின் போது மரணமடைந்த போர்வீரனைக் குறிக்கும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)