Sunday, June 1, 2008

என்னைத் தொலைத்த நான்...!


யுத்தப் பெருவெளியொன்றின்
விஷக்காற்றினைச் சுவாசித்தபடி
பேருவகை ஏதுமற்ற வாழ்வின்
கடைசிச் சொட்டில் உயிர் வழிய
காற்றின் துவாரங்களெங்கிலும்
ஒழுகும் எனது பாடல்கள்
துயரத்தைச் சோர்கின்றன !

எனது கழுத்தை நெரிக்க
நீளும் கைகள்
எனது நண்பனுடையதாக இருக்கின்றன,
எனது சுவாசம் பறித்துக்
காறியுமிழும் வாயும் அவனுக்கிருக்கிறது,
சுயநலத்தின் உள்ளங்கை
அவன் தலைதடவி
எனை நோக்கி அனுப்பியிருக்கிறது
அவன் உறிஞ்சி விழுங்கிச் சிரிக்கும்படியாகவே
என் உயிரும் நிரம்பி
வழிந்து கொண்டிருக்கிறது இப்போது !

ஒரு காலம் இருந்தது,
அன்று நாம் அழகாயிருந்தோம்,
இனிமையான பாடல்களும்,
தென்றலும்,வாசனையும்
எம்மைச் சூழ்ந்திருந்தது
எந்தவித அச்சங்களுமற்று
கனவுகளின் நீள்பாதை நீண்டுகிடக்க
மின்னலைப் பேசிய வானத்தின் கீழ்
நானுமவனும் மட்டும்
நடைபயின்று களிப்புற்றோம் !

ஒன்றான ரசனை எமை இணைத்த
நாட்களின் முடிவில்
ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவனானான்
அப்பொழுதுதான் முதன்முதலாக
அவன் ஆயுதம் எனை நோக்கி நீண்டது !

நட்பின் இறுதிச் சொட்டு
நயவஞ்சகத்தைக் கோர்த்துவந்தது,
எனைக் கொல்லத் தேடிவந்தது தெரியாமல்
என் தாய் அவனுக்கு உணவிட்டாள் !

எந்தச் சூனியமுன்னை இடறச் செய்தது?
எந்தக் கணத்தில்
சுவடழிக்கப்பட வேண்டியவனானேன்?
எந்தக் கூர்நகங்கள் கொண்ட கரங்கள்
உனக்கந்தக் கொலைக்கருவிகளை
எனை நோக்கி நீளச்செய்தன ?
எதற்காக நானன்று ஓடினேன் ?

ஓடிச் சோர்ந்து,தவித்து,நின்று
பாலைநிலமது
பாதங்களை விழுங்கிக்கொள்ள,
உயிர் வழியும் இறுதிச் சொட்டில்
என்னையே தொலைத்த
நானாகி நிற்கிறேன் பார்..!

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை
.

29 comments:

Kavinaya said...

//கனவுகளின் நீள்பாதை நீண்டுகிடக்க
மின்னலைப் பேசிய வானத்தின் கீழ்//

//பாலைநிலமது
பாதங்களை விழுங்கிக்கொள்ள,
உயிர் வழியும் இறுதிச் சொட்டில்//

வார்த்தைகளைக் கோர்த்து வருத்தத்தை வடித்துக் நெஞ்சகத்தைப் பிளக்கும் வஞ்சகத்தைச் சொல்வதில் நிகரவற்றராய் இருக்கிறீர்கள் ரிஷான்! இந்த வரியைச் சொல்லலாமா, அந்த வரியைச் சொல்லலாமா என்று தவிக்க வைப்பதே வழக்கமாகிவிட்டது உங்கள் கவிதைகளுக்கு.

Anonymous said...

உணர்ச்சிகள்...உணர்ச்சிகள்...உணர்ச்சிகள்..

தமிழன்-கறுப்பி... said...

ரிஷான் நல்லாயிருக்கு சொல்ல வந்த விடயமும் புரிகிறது...

M.Rishan Shareef said...

அன்பின் கவிநயா,

//வார்த்தைகளைக் கோர்த்து வருத்தத்தை வடித்துக் நெஞ்சகத்தைப் பிளக்கும் வஞ்சகத்தைச் சொல்வதில் நிகரவற்றராய் இருக்கிறீர்கள் ரிஷான்! இந்த வரியைச் சொல்லலாமா, அந்த வரியைச் சொல்லலாமா என்று தவிக்க வைப்பதே வழக்கமாகிவிட்டது உங்கள் கவிதைகளுக்கு.//

அழகிய கவிதையாக உங்கள் கருத்தும் அமைந்திருக்கிறது பாருங்கள்.மிகவும் மகிழ்வாக உணர்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் தூயா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

வாங்க தமிழன் ,

//ரிஷான் நல்லாயிருக்கு சொல்ல வந்த விடயமும் புரிகிறது...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

இறக்குவானை நிர்ஷன் said...

எந்த வரியையும் சுட்டிச்சொல்ல முடியவில்லை. அனைத்துமே அருமை.. நல்ல கற்பனை.

தொடருங்கள் ரிஷான்.

ராமலக்ஷ்மி said...

கவிநயா said://இந்த வரியைச் சொல்லலாமா, அந்த வரியைச் சொல்லலாமா என்று தவிக்க வைப்பதே வழக்கமாகிவிட்டது உங்கள் கவிதைகளுக்கு.//

வழி மொழிகிறேன் நானும்.

கவிதையில்...//எந்தக் கணத்தில்
சுவடழிக்கப்பட வேண்டியவனானேன்?//

நண்பன் காரணமேயின்றி துரோகியாகும் போது எல்லோரையும் கலங்க வைக்கும் வரிகள் அவை!

மெளலி (மதுரையம்பதி) said...

உங்கள் நிலை புரிகிறது ரிஷான்....கேட்கலாமா என தெரியவில்லை ஆனாகும் கேட்கிறேன் இது உங்கள் சொந்த அனுபவமா?

Sakthy said...

"எந்தச் சூனியமுன்னை இடறச் செய்தது?
எந்தக் கணத்தில்
சுவடழிக்கப்பட வேண்டியவனானேன்?"

really niceeee

கற்பனையோ நிஜமோ... எதுவாக இருந்தாலும் ரிஷானின் வரிகள் ஒவ்வொன்றும் அழகான , ஆழமான அர்த்தத்துடன்.. அருமை ரிஷான் வாழ்த்துக்கள் தோழரே..

Divya said...

ஆழமான கருத்துக்களுடன் கவிதை மனதை நெகிழச்செய்தது ரிஷான்!

M.Rishan Shareef said...

அன்பின் நிர்ஷன்,

//எந்த வரியையும் சுட்டிச்சொல்ல முடியவில்லை. அனைத்துமே அருமை.. நல்ல கற்பனை.

தொடருங்கள் ரிஷான்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//நண்பன் காரணமேயின்றி துரோகியாகும் போது எல்லோரையும் கலங்க வைக்கும் வரிகள் அவை!//

சரியாகச் சொன்னீர்கள்.
யார் யாருக்கோ பிறந்து,எப்படியெப்படியோ வளர்ந்து நண்பர்களாகிப் பின் பிரிவதென்பது மிகவும் வருத்தத்திற்குரிய விடயம்.உயிர் நிற்க உடல் உருக்குலையும் வதையது.. :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

வாங்க மதுரையம்பதி :)

//உங்கள் நிலை புரிகிறது ரிஷான்....கேட்கலாமா என தெரியவில்லை ஆனாகும் கேட்கிறேன் இது உங்கள் சொந்த அனுபவமா?//

நிச்சயமாகக் கேட்கலாம்..
நிஜம்தான்..ஒரு நண்பன் நம் மனது வலிக்க வலிக்க எனக்கும் என் குடும்பத்திற்கும் துரோகியானார்.
என் வீட்டுச் செல்லப்பிள்ளை போல இருந்தவர் அனைவரையும் ஒருநாளில் வதைப்படுத்திச் சென்றார்.அதன் பின்னர் நாங்கள் ஒருவரும் அவரையிதுவரை பார்க்கவில்லை இன்னும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் சக்தி,

//கற்பனையோ நிஜமோ... எதுவாக இருந்தாலும் ரிஷானின் வரிகள் ஒவ்வொன்றும் அழகான , ஆழமான அர்த்தத்துடன்.. அருமை ரிஷான் வாழ்த்துக்கள் தோழரே..//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சினேகிதி :)

M.Rishan Shareef said...

அன்பின் திவ்யா,

//ஆழமான கருத்துக்களுடன் கவிதை மனதை நெகிழச்செய்தது ரிஷான்!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி :)

கோகுலன் said...

நன்றாக எழுதியிருக்கிறாய் நண்பா..

அனைத்து வரிகளையும் மிக ரசித்தேன்..

வார்த்தைகள் நல்ல பிரயோகம்.. தொடர்ந்து கலக்கு நண்பா.

கோகுலன் said...

நன்றாக எழுதியிருக்கிறாய் நண்பா..

அனைத்து வரிகளையும் மிக ரசித்தேன்..

வார்த்தைகள் நல்ல பிரயோகம்.. தொடர்ந்து கலக்கு நண்பா.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

ரிஷான்,

இதை நான் வாசிக்கும்போது நேரம் நடுநிசியை நாடிக்கொண்டிருக்கிறது. கவிதை குறிக்கும் சம்பவம் நடக்கும்போது நான் நாட்களின் வேறுபாடுகளை அறியாது விளையாடித் திரியும் பருவம். சம்பவம் நிகழ்ந்ததற்கான நினைவுகள் எங்கோ அடிமனதில் கலங்கலாய்....

நிறையப் பேர் சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன். வாசிக்கும் நேரமும் கவிதையின் வரிகளும் சம்பவத்தின் தாக்கத்தின் வலியை இதயத்தில் மீண்டும் பரவச்செய்கிறது.

நடந்த சம்பவம் சரியா, தவறா என பலமுறை நினைத்து போராடியிருக்கிறேன். ஏதோ சிலர் செய்த தவறுக்காக ஏன் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என கலங்கியிருக்கிறேன். பூமி சுழல்கிறது...வரலாறுகளில் ஏதேதோவெல்லாம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

ரிஷான்...ஏலவே உங்கள் மீது எனக்கு அதிகப்படியான மதிப்பு உள்ளது. கவிதையின் வரிகள் அதை இன்னும் அதிகமாக்கியிருக்கிறது.

நடந்த சம்பவம் ஒருபுறமிருக்க அது திரிக்கப் பட்டு அதன் காரணம்(பிழைதான் எனினும்)கூட திரிக்கப்பட்டு மக்களைச் சென்றடைந்துகொண்டிருப்பதுதான் மனதை கனக்கச் செய்கிறது.

இன்னொரு அது இனியும் வேண்டாம்.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

ரிஷான் இது பிரசுரிக்கவல்ல,

உங்கள் about me இற்கு கீழே உள்ள வரிகளில் சாறலோடு என்பதை சாரலோடு என மாற்றிவிடுங்கள். இரு இடங்களில்..

இது பிரசுரிக்கவல்ல. அழித்துவிடுங்கள்.

Unknown said...

Why so negative? These are best forgiven and forgotten.why not write about soemthing happy/good/ joyful? about thepossibility of your frined regrettign it? ask duwa forhim.
That is islam. That is sunna.
"Mudivilladha thunbam athilum inbam veredhu? - so said kannadasan. that is not what we shoud practice; we forgive, say "qaddarallahu masha allah fa'ala" and carry on with life.

M.Rishan Shareef said...

அன்பின் கோகுலன்,

//நன்றாக எழுதியிருக்கிறாய் நண்பா..

அனைத்து வரிகளையும் மிக ரசித்தேன்..

வார்த்தைகள் நல்ல பிரயோகம்.. தொடர்ந்து கலக்கு நண்பா.//

வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பா :)

M.Rishan Shareef said...

அன்பின் மதுவதனன்,

மிக நீண்ட ஆழமான,உண்மையான கருத்து உங்களுடையது.நானென்ன மனதில் கொண்டிருக்கிறேனோ,அதையெல்லாம் அப்படியே சொல்லிவிட்டீர்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் மதுவதனன்,

//ரிஷான் இது பிரசுரிக்கவல்ல,

உங்கள் about me இற்கு கீழே உள்ள வரிகளில் சாறலோடு என்பதை சாரலோடு என மாற்றிவிடுங்கள். இரு இடங்களில்..

இது பிரசுரிக்கவல்ல. அழித்துவிடுங்கள்.//

மன்னிக்கவும்.அழிக்கவில்லை.
பிற்காலத்தில் ஓர் நாள் 'நானிப்படி எழுத்துப்பிழையோடு எழுதியிருந்தேன்.ஒரு நண்பர் தான் அன்பாகத் திருத்தித்தந்தார்' என நினைவுபடுத்திக் கொள்ள இந்தக் கருத்து வேண்டும் நண்பரே. :)

வருகைக்கும் அக்கறையோடு சுட்டிக்காட்டுதலுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

Dear Sister Dr.Reffai,

//Why so negative?//

Its only for the poems.I like to write my own experience without any lies..Sometimes the truth is negative.

//These are best forgiven and forgotten.why not write about soemthing happy/good/ joyful?//

Sure..I will write soon.
Alhamdhulillah My life is Happy,good & Joyful now.So You can expect my Joyful poems soon I hope.

//about thepossibility of your frined regrettign it? ask duwa forhim.
That is islam. That is sunna.//

I didnt see him after this happening.Im always asking dua for him.Because He was my friend.

//"Mudivilladha thunbam athilum inbam veredhu? - so said kannadasan. that is not what we shoud practice; we forgive, say "qaddarallahu masha allah fa'ala" and carry on with life.//

Correct sister.Im following this same idea.

Thanks a lot for the visit and comments Sister.

Jazakkallahu hairan.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

பிற்காலத்தில் ஓர் நாள் 'நானிப்படி எழுத்துப்பிழையோடு எழுதியிருந்தேன்.ஒரு நண்பர் தான் அன்பாகத் திருத்தித்தந்தார்' என நினைவுபடுத்திக் கொள்ள இந்தக் கருத்து வேண்டும் நண்பரே. :)

இறந்தகால நினைவுகளின் வித்தியாசமான விடங்களில் மனதைச் செலுத்துவது எனக்கும் பிடித்தமான ஒன்றுதான்.

தொடர்ந்து எழுதுங்கள்...

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.

M.Rishan Shareef said...

வாங்க மதுவதனன் :),

//இறந்தகால நினைவுகளின் வித்தியாசமான விடங்களில் மனதைச் செலுத்துவது எனக்கும் பிடித்தமான ஒன்றுதான்.//

எனக்கும் தான்.பல அனுபவங்களிலிருந்தும் பாடங்கள் கற்றுக்கொள்ளலாம். :)

//தொடர்ந்து எழுதுங்கள்...//

நிச்சயமாக நண்பரே :)

ஃபஹீமாஜஹான் said...

ரிஷான்

"எந்தச் சூனியமுன்னை இடறச் செய்தது?
எந்தக் கணத்தில்
சுவடழிக்கப்பட வேண்டியவனானேன்?
எந்தக் கூர்நகங்கள் கொண்ட கரங்கள்
உனக்கந்தக் கொலைக்கருவிகளை
எனை நோக்கி நீளச்செய்தன ?
எதற்காக நானன்று ஓடினேன் ? "

அப்போது எனக்கு இந்த வரிகளின் ஆழம் புரியவில்லை. இப்போது புரிகிறது.

அடுத்தவர் மனங்களில் இடம்பிடிக்கக் கூடிய வரிகளை எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

M.Rishan Shareef said...

வாங்க பஹீமா ஜஹான் :)

//"எந்தச் சூனியமுன்னை இடறச் செய்தது?
எந்தக் கணத்தில்
சுவடழிக்கப்பட வேண்டியவனானேன்?
எந்தக் கூர்நகங்கள் கொண்ட கரங்கள்
உனக்கந்தக் கொலைக்கருவிகளை
எனை நோக்கி நீளச்செய்தன ?
எதற்காக நானன்று ஓடினேன் ? "

அப்போது எனக்கு இந்த வரிகளின் ஆழம் புரியவில்லை. இப்போது புரிகிறது.

அடுத்தவர் மனங்களில் இடம்பிடிக்கக் கூடிய வரிகளை எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் //

நீண்ட நாட்களுக்குப்பிறகு வந்திருக்கிறீர்கள்.மகிழ்வாக இருக்கிறது.

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)