Wednesday, December 10, 2008

முடிவிலி

அடர்ந்த இருளின் கரங்களில்
இன்று நிலவில்லை
ஒற்றை நட்சத்திரம்
ஒற்றைப் பூவரசு
ஒற்றைக் கிணறு
தனித்த நான்

இன்னும் பார்வைப்புலத்துக்கெட்டாச்
சில பிசாசுகளும் இருக்கக் கூடும்

நண்ப,
உயிர் பிரியும் வரை வலிகொடுத்த
குருதி கசிந்த ஒரு இரவின் பாடலை
ஒரு குறிப்பாக நீ
எழுதிவைத்திருந்ததைக் கண்ணுற்றேன்

எல்லா எழுத்துக்களையும் மீள எழுதிடும் போது
அவர்களது ஆயுதம் எனை நோக்கியும்
நீளக்கூடும்

ஒற்றைக் கிணற்று நீரில் மிதக்கும்
ஒற்றை நட்சத்திரத்துக்குத் துணையாக
ஒற்றைப் பூவரசும்,
இன்னும் பார்வைப்புலத்துக்கெட்டாப் பிசாசுகளும்
நிச்சலன சாட்சியாய்ப் பார்த்திருக்க
குருதி கசிந்துகொண்டிருக்கும்
ஒரு புதுச் சடலமாக நாளை நானும் மிதப்பேன்

இவர்கள் நம்மை வைத்துக்
கவிகளும் காவியங்களும் படைக்கட்டும்

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.


( யுகமாயினி - டிசம்பர், 2008 இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள கவிதை )

18 comments:

ஃபஹீமாஜஹான் said...

"ஒற்றைக் கிணற்று நீரில் மிதக்கும்
ஒற்றை நட்சத்திரத்துக்குத் துணையாக
ஒற்றைப் பூவரசும்,
இன்னும் பார்வைப்புலத்துக்கெட்டாப் பிசாசுகளும்
நிச்சலன சாட்சியாய்ப் பார்த்திருக்க
குருதி கசிந்துகொண்டிருக்கும்
ஒரு புதுச் சடலமாக நாளை நானும் மிதப்பேன்"

இந்தத் துயர நிகழ்வுகள் இன்னும் எங்கள் நாட்டில் தொடர்ந்தவாறே உள்ளன.

கவிதகளும் காவியங்களும் மட்டுமல்ல மனிதப் பேரழிவுகளிடையே பட்டாசு கொளுத்தி மகிழும் மக்கள் கூட்டத்தையும் நாம் காண்கிறோம்.

ராமலக்ஷ்மி said...

//எல்லா எழுத்துக்களையும் மீள எழுதிடும் போது
அவர்களது ஆயுதம் எனை நோக்கியும்
நீளக்கூடும்//

முடிவின்றி தொடரும் யுத்தத்தின் கோரம்.
தொடர்ந்த வரிகளில் வலி நிரம்பிய நிஜம்.

//இவர்கள் நம்மை வைத்துக்
கவிகளும் காவியங்களும் படைக்கட்டும்//

செய்வார்கள்:(!

M.Rishan Shareef said...

அன்பின் ஃபஹீமா ஜஹான்,

//இந்தத் துயர நிகழ்வுகள் இன்னும் எங்கள் நாட்டில் தொடர்ந்தவாறே உள்ளன.

கவிதகளும் காவியங்களும் மட்டுமல்ல மனிதப் பேரழிவுகளிடையே பட்டாசு கொளுத்தி மகிழும் மக்கள் கூட்டத்தையும் நாம் காண்கிறோம்.//

நிச்சயமாக சகோதரி..எங்கும் வன்முறை..எதிலும் வன்முறை. ஏனென்று கேட்க ஆளில்லை. கேட்டால் ஆளில்லை.

பட்டாசு வெடித்து, பாற்சோறு சமைத்துக் கொண்டாடும் கூட்டங்களுக்கு காலத்தின் பதில் எதுவோ? :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

////எல்லா எழுத்துக்களையும் மீள எழுதிடும் போது
அவர்களது ஆயுதம் எனை நோக்கியும்
நீளக்கூடும்//

முடிவின்றி தொடரும் யுத்தத்தின் கோரம்.
தொடர்ந்த வரிகளில் வலி நிரம்பிய நிஜம். //

தினந்தோறும் பெய்கிறது குண்டுமழை..ஆறாய்ப் பெருகுகிறது குருதிப் புனல்...உயிர்களின் தோள்களில் அமர்ந்திருக்கிறான் எமன்..தனக்கான வாய்ப்பு வரும் வரையில் :(

//இவர்கள் நம்மை வைத்துக்
கவிகளும் காவியங்களும் படைக்கட்டும்//

செய்வார்கள்:(!

செய்கிறார்கள்..செய்துகொண்டே இருக்கிறார்கள் :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

Sakthy said...

திணிக்கப் பட்ட போரினால் நித்தம் கருகுகிறது மனித உயிர்கள்...
போர் இல்லா ஒரு பூமி வேண்டும் .. எமக்கு இல்லயேல் நாளைய தலைமுறைக்காவது ...
மாறும் என நம்புவோம் .. வேறென்ன செய்வது ...

Sakthy said...

மனித உயிர்கள் மலிந்து விட்ட நேரமிது... நித்தம் கருகுகிறது மனிதம் எதோ ஒரு வகையில் ...உங்கள் வரிகளிலும் வலிக்கிறது நிஜம் ...

மாறும் என நம்புவோம் .. வேறென்ன செய்வது ...

ARV Loshan said...

சில விஷயங்களை கவிதைகளில் சொல்லிவிடுவது சிறந்தது.. உண்மையில் புரிய வேண்டியோருக்கும், உணர்வுகளை அறிந்துகொள்ள வேண்டியோருக்கும் மட்டும் புரியும்..

முடிவிலி சில உண்மைகளை முகத்தில் அறைகிறது.. பாராட்ட வார்த்தைகள் இல்லை..

பத்திரம்.. உங்கள் உணர்வுகளின்,உடமைகளும்..

ARV Loshan said...

சில விஷயங்களை கவிதைகளில் சொல்லிவிடுவது சிறந்தது.. உண்மையில் புரிய வேண்டியோருக்கும், உணர்வுகளை அறிந்துகொள்ள வேண்டியோருக்கும் மட்டும் புரியும்..

முடிவிலி சில உண்மைகளை முகத்தில் அறைகிறது.. பாராட்ட வார்த்தைகள் இல்லை..

பத்திரம்.. உங்கள் உணர்வுகளின்,உடமைகளும்..

MSK / Saravana said...

//அடர்ந்த இருளின் கரங்களில்
இன்று நிலவில்லை
ஒற்றை நட்சத்திரம்
ஒற்றைப் பூவரசு
ஒற்றைக் கிணறு
தனித்த நான்//

//ஒற்றைக் கிணற்று நீரில் மிதக்கும்
ஒற்றை நட்சத்திரத்துக்குத் துணையாக
ஒற்றைப் பூவரசும்,
இன்னும் பார்வைப்புலத்துக்கெட்டாப் பிசாசுகளும்
நிச்சலன சாட்சியாய்ப் பார்த்திருக்க
குருதி கசிந்துகொண்டிருக்கும்
ஒரு புதுச் சடலமாக நாளை நானும் மிதப்பேன்//


மிகவும் விக்கித்து போனேன் ரிஷான்..

பூங்குழலி said...

கவிகளுக்கும் காவியங்களுக்கும் பாடு பொருளாக்க மட்டுமன்றி உண்மையான நேசத்தோடு துயர் துடைக்க நீளும் கரங்கள் உங்களை தேடி வரட்டும் ....உணர்வு குவியலாய் கவிதை ....

Kavinaya said...

//"ஒற்றைக் கிணற்று நீரில் மிதக்கும்
ஒற்றை நட்சத்திரத்துக்குத் துணையாக
ஒற்றைப் பூவரசும்,
இன்னும் பார்வைப்புலத்துக்கெட்டாப் பிசாசுகளும்
நிச்சலன சாட்சியாய்ப் பார்த்திருக்க
குருதி கசிந்துகொண்டிருக்கும்
ஒரு புதுச் சடலமாக நாளை நானும் மிதப்பேன்"//

வலிக்கிறது ரிஷான் :(

M.Rishan Shareef said...

அன்பின் சக்தி,

//மனித உயிர்கள் மலிந்து விட்ட நேரமிது... நித்தம் கருகுகிறது மனிதம் எதோ ஒரு வகையில் ...உங்கள் வரிகளிலும் வலிக்கிறது நிஜம் ...

மாறும் என நம்புவோம் .. வேறென்ன செய்வது ...//

ஆமாம் சினேகிதி..நம்புவோம். நம்பிக்கை பொய்க்காத நாளொன்று வரும்வரை நம்புவோம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சினேகிதி..!

M.Rishan Shareef said...

அன்பின் லோஷன்,

//சில விஷயங்களை கவிதைகளில் சொல்லிவிடுவது சிறந்தது.. உண்மையில் புரிய வேண்டியோருக்கும், உணர்வுகளை அறிந்துகொள்ள வேண்டியோருக்கும் மட்டும் புரியும்.. //

ஆமாம் லோஷன். கவிதை முகத்தை அணிந்துகொண்டு சில விடயங்களை வெளிப்படுத்துவது இலகுவாக இருக்கிறது. மனதின் எல்லாப் பாரங்களையும் எழுத்தின் முதுகில் ஏற்றிவிடலாம் பாருங்கள். அத்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு அவை இலகுவாகப்புரியும். அதுவும் கவிதை முகத்தில் இலகு.

//முடிவிலி சில உண்மைகளை முகத்தில் அறைகிறது.. பாராட்ட வார்த்தைகள் இல்லை..

பத்திரம்.. உங்கள் உணர்வுகளின்,உடமைகளும்..//

அன்பான உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் சரவணகுமார்,

//மிகவும் விக்கித்து போனேன் ரிஷான்..//

இது போல இன்னும் எழுதப்படா விடயங்கள் அனேகமுள்ளன. இதற்கே விக்கித்தால் எப்படி நண்பரே ? :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//கவிகளுக்கும் காவியங்களுக்கும் பாடு பொருளாக்க மட்டுமன்றி உண்மையான நேசத்தோடு துயர் துடைக்க நீளும் கரங்கள் உங்களை தேடி வரட்டும் ....உணர்வு குவியலாய் கவிதை ....//

அழகான, அன்பான பிரார்த்தனை உங்களுடையதாக இருக்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் கவிநயா,

//வலிக்கிறது ரிஷான் :(//

என்ன செய்ய? எங்கள் வாழ்க்கை சகோதரி :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

Anonymous said...

வணக்கம் ரிஷான் அவர்களே..

ஈழக்கவிதைகள் எத்தனை சிறப்புற படித்து மகிழ்ந்ததுண்டு. பல கவிதைகள் சலிப்பாகவும், பல கவிதைகள் வலிப்பாகவும் இருக்கும்.. ஈழசகோதரர்களின் நிலையை எண்ணியெண்ணி மனதுருகிட என்னால் சில கவிதைகளின் மூலம் முடியலாம்.. பெரும்பாலானவைகள் கோபத்தையே வரவழைக்கும்..

ஏளனப்படுத்துதல், அல்லது அதன் விளைவினால் ஏற்படும் அவமானம் குறித்த உங்கள் பார்வை,வித்தியாசமான கோணம்.

எழுதப்பட்ட சூழல், அல்லது வருணிக்கப்பட்ட சூழலின் கனம், தனித்தன்மை மிக்க சொல்லாளுமையால் இன்னும் கனமாகி நெஞ்சை சுடவைக்கின்றது. இருளெனும் இயற்கையை மெய்யாக்கி, கையாக்கி, நிலவைப் பொத்திய வரிகள் மிக அருமையானவை.

தனித்தமனத்தின் எண்ணப் பாய்ச்சலுக்கு ஒத்த வரிகளாக, பார்வைக்கெட்டா பிசாசுகள் நெளிந்துகொண்டிருக்கின்றன. அதற்கு தனி சபாஷ்.

நண்பன் விட்டுச் சென்ற பணி, குருதி முறுக்கத்தில் சுருக்கேறி, ரணப்பாடலின் ராகம் வழியே வெளியேற, சுண்டித் தெறித்த நாணயம் எப்பக்கம் வீழும் எனும் முடிவில்லாத வாழ்வுப்பக்கத்தைப் பாடிக்கொண்டிருக்கும்... சிலருக்கு மரணம் என்பது கொள்கை, சிலருக்கு அது வாழ்க்கை.

//எல்லா எழுத்துக்களையும் மீள எழுதிடும் போது //

எல்லா எழுத்துக்களையும் எழுதி பாடல் முடிவுபெறுகிறதா இல்லையா? இன்று அதுதானே முக்கியம்.. சுரம் குறைந்த ஒலியை எந்த ரசிகனும் விரும்பாத நிலையில், முடிவில்லா பாடலைத்தான் காலம் எழுதப் பயணித்திருக்கிறதோ? வீழ்ச்சி என்பது மற்றொன்றின் எழுச்சி. அந்த மற்றொன்று வீழ்ச்சியின் அடிபாதத்தில் இருக்கவேண்டும்... இக்கவிதை நாயகனின் வீழ்ச்சி, நாளைய ஈழப்பிறப்பின் பின்புலம் முழுக்க நிறைந்திருக்கும்... மரணத்தில் நிம்மதி அங்கே முழுமையாகும்.

இறுதி வரிகளான ஏளனம், இருக்கவே செய்கிறது. ஒன்றை மிதித்து ஒன்று எழுவது ஆதிகாலம் தொட்டு பூமி காணும் வரலாறு. போராளிகள் உயிரை எனும் சொல்லை மெய்யிலிருந்து பிரிக்கிறார்கள் அதன் வலியை கவிஞர்கள் எழுத முனைகிறார்கள்.

வாழ்த்துக்கள் ரிஷான்...

M.Rishan Shareef said...

அன்பின் ஆதவா,

கவிதை குறித்து நீண்டதொரு வசன கவிதையாக உங்கள் தெளிவான கருத்தும், பார்வைக் கோணமும் என்னை மகிழ்விக்கின்றது. தொடர்ந்தும் எழுத ஊக்கப்படுத்துகிறது.

கருத்துக்கு நன்றி நண்பரே !