Sunday, September 13, 2009

சிதைந்த நாட்களோடு ஓய்தல்


எல்லாமாயும் ஓய்ந்துபோயிற்று
காலத்தின் நோய்ச் சக்கரம்

கரும்புகைகளில் சிக்குண்ட
வாழ்வினை மீட்டாயிற்று
சாத்தான் கரும்புள்ளிகளிட்டுக் கனத்த
இதயத்தோடு சேர்த்து வாழ்வினையும் கழுவி
தூய்மைப்படுத்தியுமாயிற்று

நீ அதிரவிட்ட
குரூர வார்த்தைகளின் பெருமதிர்வு
சுழன்று சுழன்று பரப்பெங்கும் மேவி
இருந்த ஆரோக்கியத்தையெல்லாம்
அள்ளிப்பறந்தது ஓர்பொழுது

நச்சுப்பரவிய தோல்மட்டும் இப்பொழுதும்
கருந்தழும்புகளைத் தாங்கியிருக்கிறது

வேறெதுவும் வேண்டேன்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி 
# நடுகை - கவிதைகளுக்கான இதழ் - ஆகஸ்ட் 2009
# ஓவியம் - நஜி அல் அலி (கொலை செய்யப்பட முன்னரான இறுதி ஓவியம்)
# திண்ணை இணைய இதழ்

35 comments:

ஃபஹீமாஜஹான் said...

அன்பின் ரிஷான்,

ஒரு மரணப் போராட்டத்தின் பின்னர் எழுதப் பட்ட கவிதை இது என்பதை அறிவேன்.

பயன்படுத்தப் பட்டுள்ள ஓவியம் கவிதையை மேலும் உயர்த்துகின்றது.

"எல்லாமாயும் ஓய்ந்துபோயிற்று
காலத்தின் நோய்ச் சக்கரம்"

நஜி அல் அலியின் ஓவியங்களைப் போலவே உங்கள் குரலும் அமைந்துள்ளது.
"நடுகை" இதழும் இதே ஓவியத்தையே உங்கள் கவிதைக்காகப் பயன்படுத்தியுள்ளது. ஓவியத்தைத் தெரிவு செய்தது தற்செயல் நிகழ்வு.ஆனால் இந்த ஓவியம் உங்களது கவிதையின் ஒவ்வொரு வரிக்கும் ஆழமான பொருளைக் கூறி நிற்கின்றது. வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

சிதைந்த நாட்ளைப் பற்றி என்ன சிந்தனை???விட்டுத் தள்ளுங்கள் ரிஷான்...

பா.ராஜாராம் said...

அடர்த்தி தாங்கமுடியாததாய் இருக்கு ரிஷான்.

Anonymous said...

மீண்டெழுந்த பின் நினைவுகளோடு ..ம்ம்..
இனி நல்லவை மட்டுமே உங்களோடு உடன் வரட்டும் .. வாழ்த்துக்கள் தோழரே..
மன்னிக்கவும் .. யாரது நஜி அல் அலி ?

நட்புடன் ஸ்நேகிதி
சக்தி ராசையா

மாதவராஜ் said...

வரிகளெல்லாம் வலி கொண்டதாயிருக்கின்றன.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அன்பு நண்பர் ரிஷான்,
உங்களின் மரணப் போராட்டத்தின் கொடும் நிகழ்வுகளை மறந்து விட்டு இனிவரப்போகும் வசந்த நாட்களை வரவேற்க தயாராகுங்கள். தாயகம் வேறு சென்றிருக்கிறீர்கள். பழையன கழிதல் நன்று நண்பா. உங்களின் கவிதை நன்றாக இருக்கின்றது.
"இருப்புக்கு மீள்தல்" மூலம் மஹ்மூத் தர்வீஷை எனக்கு அறிமுகப்படுத்தியமைக்கும், கேலிச்சித்திரம் மூலம் அதிகார வர்க்கத்தை குலை நடுங்க வைத்த நஜி அல் அலி அவர்களை அறிமுகப்படுத்தியமைக்கும் மிக்க நன்றி நண்பா.

ராமலக்ஷ்மி said...

இனி என்றென்றைக்கும் ஆரோக்கியம் உங்களை விட்டு விலகாதிருக்கும் ரிஷான்!

சிவா said...

வழமை போல் அருமை ரிஷான்

பூங்குழலி said...

// நச்சுப்பரவிய தோல்மட்டும் இப்பொழுதும்
கருந்தழும்புகளைத் தாங்கியிருக்கிறது//

தழும்புகளை காலம் மாற்றும்

//வேறெதுவும் வேண்டேன்//

சுகமாக மருந்திட கரங்கள் வேண்டாமா ?உங்கள் வழக்கமான கவிதைகள் போலல்லாது நேரிடையான
கவிதை ரிஷான் .நன்றாக இருக்கிறது .

சாந்தி said...

//தழும்புகளை காலம் மாற்றும்//



அதே காலமே நல்மருந்து... காயப்படுத்தும் எதையும் மனதில் வைக்க வேண்டியதில்லை.

தமிழன் வேணு said...

வார்த்தைகளுக்குள்ளே வலிகளைப் பொதிந்து எழுதுகிற வல்லமை! வாசிக்கிற போது சற்றே ஊசி இறங்குவது போல...! அதுவே வலியின் வலிமை போலும்.

ஷைலஜா said...

கவிதை எதையோ உணர்த்துகிறது. காயங்கள் ஆறட்டும். மனம் வலிமை பெறட்டும்! வார்த்தைகளைதேர்ந்த்டுத்து வலி(மை)மிகு கவிதை படைப்பதில் ரிஷான் திறமையானவர் என்பதை நிரூபிக்கும் அவரது இன்னொரு படைப்பு இது!

விஜி said...

//எல்லாமாயும் ஓய்ந்துபோயிற்று
காலத்தின் நோய்ச் சக்கரம்//

”காலமே நோயா?!! அத்தனை வலியா?



//கரும்புகைகளில் சிக்குண்ட
வாழ்வினை மீட்டாயிற்று
சாத்தான் கரும்புள்ளிகளிட்டுக் கனத்த
இதயத்தோடு சேர்த்து வாழ்வினையும் கழுவி
தூய்மைப்படுத்தியுமாயிற்று

நீ அதிரவிட்ட
குரூர வார்த்தைகளின் பெருமதிர்வு
சுழன்று சுழன்று பரப்பெங்கும் மேவி
இருந்த ஆரோக்கியத்தையெல்லாம்
அள்ளிப்பறந்தது ஓர்பொழுது//


ஆரோக்கியத்தை விழுங்குமளவிற்கு நம்மை பலவீனப்படுத்தும் சொற்களை அனுமதிக்கவே கூடாது ரிஷான்.

சா.கி.நடராஜன் said...

அன்பு ரிஷான் நலமா
கவிதையில் மெல்லிய சோகத்தை இழையவிட்டுல்லாயே
களிப்போடு துள்ளி விழும் சொற்கள் கோர்த்து புன்னகையிழைய
கவிதை யொன்றினை விரைந்தெனுக்கு தா

ஈத் வாழ்த்தினை அனுப்பினேன்
இனிப்புத் தான் தரவில்லை நீஎன்றாலும்
நலமா என்றுகூட கேட்கமறந்ததேன் நண்பா ?

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
http://tamizhswasam.blogspot.com/

தேனுஷா said...

பல சமயங்களில் வார்த்தைகள் ஆயுதமாக்கப் படுகின்றன

அருமை ரிசான்

M.Rishan Shareef said...

அன்பின் ஃபஹீமாஜஹான்,

//நஜி அல் அலியின் ஓவியங்களைப் போலவே உங்கள் குரலும் அமைந்துள்ளது.
"நடுகை" இதழும் இதே ஓவியத்தையே உங்கள் கவிதைக்காகப் பயன்படுத்தியுள்ளது. ஓவியத்தைத் தெரிவு செய்தது தற்செயல் நிகழ்வு.ஆனால் இந்த ஓவியம் உங்களது கவிதையின் ஒவ்வொரு வரிக்கும் ஆழமான பொருளைக் கூறி நிற்கின்றது. வாழ்த்துக்கள்.//

நஜி அல் அலியின் ஓவியங்களனைத்துமே ஒரு அழகற்ற, முகமற்ற சிறுவனைக் கொண்டானவை. அவனின் பார்வையில் கிளர்ந்தெழும் சோகங்கள் கவிதைகளாகி இருக்கின்றன. அதுபோலவே எனதும் !

காத்திரமான இந்த ஓவியத்தை எனது கவிதைக்கெனத் தேர்ந்தெடுத்தமைக்கு 'நடுகை' இதழுக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் அருணா,

//சிதைந்த நாட்ளைப் பற்றி என்ன சிந்தனை???விட்டுத் தள்ளுங்கள் ரிஷான்...//

சில அனுபவங்களைக் குறித்துவைப்பது நல்லதுதானே? :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் பா.ராஜாராம்,

//அடர்த்தி தாங்கமுடியாததாய் இருக்கு ரிஷான்.//

உங்கள் முதல்வருகையும் கருத்தும் மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் சக்தி ராசையா,

//மீண்டெழுந்த பின் நினைவுகளோடு ..ம்ம்..
இனி நல்லவை மட்டுமே உங்களோடு உடன் வரட்டும் .. வாழ்த்துக்கள் தோழரே.. //

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி ஸ்னேகிதி !

//மன்னிக்கவும் .. யாரது நஜி அல் அலி ?//

அவர் ஒரு ஓவியர். அநீதங்களுக்கெதிராக அவரது தூரிகை அசைந்தது. அதனால் கொலை ஆயுதங்கள் அவரை நோக்கி நீண்டு, அமைதிப்படுத்தப்பட்டார். :(

M.Rishan Shareef said...

அன்பின் மாதவராஜ்,

//வரிகளெல்லாம் வலி கொண்டதாயிருக்கின்றன.//

நீண்ட நாட்களின் பிறகான உங்கள் வருகை பெரிதும் மகிழ்ச்சி தருகிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ஷேக் தாவூத்,

உங்கள் தொடர் வருகையும் ஊக்கமளிக்கும் கருத்துக்களும் மகிழ்ச்சியளிக்கின்றன.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா !

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//இனி என்றென்றைக்கும் ஆரோக்கியம் உங்களை விட்டு விலகாதிருக்கும் ரிஷான்!//

உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும். :)

வருகைக்கும் அன்பான வார்த்தைகளுக்கும் நன்றி சகோதரி !

சங்கர் குமார் said...

நேற்றுவரை கரும்பாக இனித்த சொற்கள், இன்று கசக்கிறது என்றால், நம்மால் அவர்களைச் சரியாக எடை போடத் தெரியவில்லை எனத்தான் பொருள். அப்போது வானளாவப் புகழ்ந்துவிட்டு, இப்போது இகழ்வதும் மனிதக்குணமே! சராசரி உள்ளத்தின் வெளிப்பாடு இப்படித்தான் இருக்கும் என மனோதத்துவம் சொல்கிறது. தப்பில்லை! ஆனால், இதிலிருந்து உயரப் பார்க்கணும். அதுவே மனிதம்!

மல்லிகை said...

கவிதையில் ஒரு கதையையே படிச்சு முடித்த திருப்தி வருகிறது...
"All is well that ends well" சொல்லுவாங்க இல்ல...அந்த மாதிரி இருக்கு..விழுந்து எழுந்திரிப்பவர்கள்தான்
அதிக வேகத்துடன் செயல்படுவார்களாம்...

உங்கள் வாழ்விலும் அப்படியே நடக்க வேண்டும் என்ற வாழ்த்துக்களுடன்...


அன்புடன்...
வாணி

M.Rishan Shareef said...

அன்பின் சிவா,

//வழமை போல் அருமை ரிஷான் //


நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//எல்லாமாயும் ஓய்ந்துபோயிற்று

காலத்தின் நோய்ச் சக்கரம்

கரும்புகைகளில் சிக்குண்ட
வாழ்வினை மீட்டாயிற்று

சந்தோசம்

சாத்தான் கரும்புள்ளிகளிட்டுக் கனத்த
இதயத்தோடு சேர்த்து வாழ்வினையும் கழுவி
தூய்மைப்படுத்தியுமாயிற்று

நீ அதிரவிட்ட
குரூர வார்த்தைகளின் பெருமதிர்வு
சுழன்று சுழன்று பரப்பெங்கும் மேவி
இருந்த ஆரோக்கியத்தையெல்லாம்
அள்ளிப்பறந்தது ஓர்பொழுது
:(((
நச்சுப்பரவிய தோல்மட்டும் இப்பொழுதும்
கருந்தழும்புகளைத் தாங்கியிருக்கிறது
தழும்புகளை காலம் மாற்றும்
வேறெதுவும் வேண்டேன்

சுகமாக மருந்திட கரங்கள் வேண்டாமா ?உங்கள் வழக்கமான கவிதைகள் போலல்லாது நேரிடையான
கவிதை ரிஷான் .நன்றாக இருக்கிறது .
(நலம் தானே ?வெகு நாட்களாக காணவில்லையே ?)//


நலம் சகோதரி.
வேறு வேலைகள் குறுக்கிட்டதால் எழுத நேரம் வாய்க்கவில்லை :(

கருத்துக்கும் அன்பான விசாரிப்புக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் சாந்தி அக்கா,


//அதே காலமே நல்மருந்து... காயப்படுத்தும் எதையும் மனதில் வைக்க வேண்டியதில்லை. //


நிச்சயமாக சகோதரி.
நோய் நீங்கிய பின்னர் விஷக் கிருமிகள் எதற்கு? அழித்துவிட வேண்டியதுதான் :)

நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் வேணு,

//வார்த்தைகளுக்குள்ளே வலிகளைப் பொதிந்து எழுதுகிற வல்லமை! வாசிக்கிற போது சற்றே ஊசி இறங்குவது போல...! அதுவே வலியின் வலிமை போலும். //


சில வலிகள் எழுத வைக்கின்றன :(

கருத்துக்கு நன்றி அன்பு நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ஷைலஜா அக்கா,


//கவிதை எதையோ உணர்த்துகிறது. காயங்கள் ஆறட்டும். மனம் வலிமை பெறட்டும்! வார்த்தைகளைதேர்ந்த்டுத்து வலி(மை)மிகு கவிதை படைப்பதில் ரிஷான் திறமையானவர் என்பதை நிரூபிக்கும் அவரது இன்னொரு படைப்பு இது! //


:)
நன்றி அன்பு அக்கா !

M.Rishan Shareef said...

அன்பின் விஜி,


//நீ அதிரவிட்ட

குரூர வார்த்தைகளின் பெருமதிர்வு
சுழன்று சுழன்று பரப்பெங்கும் மேவி
இருந்த ஆரோக்கியத்தையெல்லாம்
அள்ளிப்பறந்தது ஓர்பொழுது//

//ஆரோக்கியத்தை விழுங்குமளவிற்கு நம்மை பலவீனப்படுத்தும் சொற்களை அனுமதிக்கவே கூடாது ரிஷான்.//


சரிதான் தோழி.
ஆனால் சில சொற்கள் நாம் எதிர்பார்க்காதவர்களிடமிருந்து பெரும்விசையுடனும் வீச்சுடனும் வந்து விழுந்துவிடுகின்றன அவர்களது வெளிப்புற முகமூடிகளைக் கிழித்தபடி. உட்புற அசிங்கங்களைக் கண்ட மனம் அதிரத்தானே செய்யும்? :(

கருத்துக்கு நன்றி தோழி !

M.Rishan Shareef said...

அன்பின் சா.கி.நடராஜன் ஐயா,

//அன்பு ரிஷான் நலமா
கவிதையில் மெல்லிய சோகத்தை இழையவிட்டுல்லாயே
களிப்போடு துள்ளி விழும் சொற்கள் கோர்த்து புன்னகையிழைய
கவிதை யொன்றினை விரைந்தெனுக்கு தா //


நிச்சயம் விரைவில் தருகிறேன் ஐயா :)
கருத்துக்கு நன்றி ஐயா :)


//ஈத் வாழ்த்தினை அனுப்பினேன்
இனிப்புத் தான் தரவில்லை நீஎன்றாலும்
நலமா என்றுகூட கேட்கமறந்ததேன் நண்பா ?


உடனே பதிலனுப்பினேன். கிடைக்கவில்லையா நண்பரே?
இனிப்பும் தருகிறேன். பிரியாணியும் தருகிறேன்..நேரில் வாருங்கள் :)

M.Rishan Shareef said...

அன்பின் தேனு,

//பல சமயங்களில் வார்த்தைகள் ஆயுதமாக்கப் படுகின்றன

அருமை ரிசான் //


ஆமாம்..நன்றி தோழி :)

M.Rishan Shareef said...

அன்பின் சங்கர் குமார்,

//நேற்றுவரை கரும்பாக இனித்த சொற்கள், இன்று கசக்கிறது என்றால், நம்மால் அவர்களைச் சரியாக எடை போடத் தெரியவில்லை எனத்தான் பொருள். அப்போது வானளாவப் புகழ்ந்துவிட்டு, இப்போது இகழ்வதும் மனிதக்குணமே! சராசரி உள்ளத்தின் வெளிப்பாடு இப்படித்தான் இருக்கும் என மனோதத்துவம் சொல்கிறது. தப்பில்லை! ஆனால், இதிலிருந்து உயரப் பார்க்கணும். அதுவே மனிதம்!//


கவிதையின் எந்த இடத்திலும் நீங்கள் சொல்லியிருக்கும் பொருளில் (நேற்று வரை கரும்பாக இனித்த சொற்கள் இன்று கசக்கிறது) எந்த வரியும் வரவில்லையே. தவறாகப் புரிந்துகொண்டீர்களா?

கருத்துக்கு நன்றி நண்பரே !

இறக்குவானை நிர்ஷன் said...

//நச்சுப்பரவிய தோல்மட்டும் இப்பொழுதும்
கருந்தழும்புகளைத் தாங்கியிருக்கிறது/

அழுத்தமான அர்த்தங்களைத் தருகிறது ரிஷான். படைப்புகள் தொடரட்டும்.

M.Rishan Shareef said...

அன்பின் நிர்ஷா,

நலமா? என்ன நீண்ட நாட்களாக உங்களைக் காணவில்லை?

////நச்சுப்பரவிய தோல்மட்டும் இப்பொழுதும்
கருந்தழும்புகளைத் தாங்கியிருக்கிறது/

அழுத்தமான அர்த்தங்களைத் தருகிறது ரிஷான். படைப்புகள் தொடரட்டும்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா !