Thursday, December 1, 2011

தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்

தோட்டத்துக் காவல்காரன்
நித்திரையிலயர்ந்த கணமொன்றில்
தனித்துவிழும் ஒற்றை இலை
விருட்சத்தின் செய்தியொன்றை
வேருக்கு எடுத்துவரும்

மௌனத்திலும் தனிமையிலும்
மூழ்கிச் சிதைந்த உயிரின் தோள்களில்
வந்தமர்ந்து காத்திருக்கிறான்
இறப்பைக் கொண்டுவரும்
கடவுளின் கூற்றுவன்

நிலவுருகி நிலத்தில்
விழட்டுமெனச் சபித்து
விருட்சத்தை எரித்துவிடுகிறேன்

மழை நனைத்த
எல்லாச் சுவர்களின் பின்னிருந்தும்
இருளுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கிறது
ஈரத்தில் தோய்ந்த
ஏதோவொரு அழைப்பின் குரல்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# வடக்குவாசல் - நவம்பர், 2011
# மறுபாதி - கவிதைகளுக்கான இதழ்
# விடிவெள்ளி
# தமிழ் எழுத்தாளர்கள்
# திண்ணை