Sunday, July 1, 2012

நினைவுகள் மிதந்து வழிவதானது

இருளின் மொழியைப் பேசும்
தண்ணீர்ச் சுவர்களை ஊடறுக்கும்
வலிமைகொண்ட நீர்ப் பிராணிகளை உள்ளடக்கிய
வனத்தின் நீரூற்றுக்கள்
பெரும்பாலும் மௌனமானவை
எப்பொழுதேனும் வனம் பற்றும் நாளில்
பரவியணைக்கப் போதா நீர்
நதியாகிப் பெருக்கெடுத்தோடுவதில்
யாது பயன்

காலம் காலமாக அழிந்த மர விலங்குடல்களை
செரித்து
தேயாப் பசி கொண்ட கானகத்தின்
எப் பெருவிருட்சத்தின் வேர்
அகன்ற வாயைக் கொண்டதுவோ

புராதனச் சிதிலங்கள் தொக்கி நிற்கும்
இக் காட்டிலெது நீ
அண்டும் குருவிகள் எக்கணமும்
குருதி சிந்தப் பறக்கக் கூடுமான
முற்செடியொன்றின் ஒற்றைப் பூ
விஷமெனப் பலரும்
விட்டொதுங்கக் கூடுமான
பாம்புப் புற்றருகில் தனித்த காளான்
இக் காட்டிலெது நீ

உள்ளே செல்ல எப்பொழுதும்
அனுமதி மறுக்கப்படக் கூடுமான
மாளிகை வாசல் யாசகன்
எவராலும் கரை சேர்க்கப்படாமல்
பயணம் தொடரக் கூடுமான
நதி முதுகின் இலை
மற்றுமோர் அழியா மேகமும் நான்

தவிர்ப்புக்களுக்கு வசப்படா
நினைவுகள் மிதந்து வழிவதானது
மெதுவாய்க் கொல்லும் நச்சு
இப்பொழுதும்
உள்ளிருந்து விழிகளுக்கு
தாவித் தீர்க்கும் உள்ளாழ்ந்த நிறைகனல்
உன்னால் தோன்றியதுதான்

- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
# அம்ருதா இதழ் - பெப்ரவரி, 2012
# எதுவரை இதழ் - 02, ஜூன், 2012
# உயிர்மை
# திண்ணை

4 comments:

விஜி சுதன் said...

"கனம்" செறிந்த வார்த்டைப்பிரயோகங்கள் ரிஷான்.


நிறையப்புத்தகங்கள் வாசிப்பீங்களோ?

ஏ.தேவராஜன் said...

இறுக்கமும் அகப்பார்வையும் கொண்ட தங்களின் கவிதை வாசக மனத்துக்குள் விசேடப் பிரதேசங்களில் ஆழப் பிரவேசிக்கிறது! வாழ்த்துகள்!

M.Rishan Shareef said...

அன்பின் விஜி சுதன்,

//"கனம்" செறிந்த வார்த்டைப்பிரயோகங்கள் ரிஷான்.


நிறையப்புத்தகங்கள் வாசிப்பீங்களோ?//

நிச்சயமாக. புத்தகங்கள்தான் எனது நெருங்கிய தோழர்கள். :-)

கருத்துக்கு நன்றி தோழி !

M.Rishan Shareef said...

அன்பின் ஏ. தேவராஜன்,

//இறுக்கமும் அகப்பார்வையும் கொண்ட தங்களின் கவிதை வாசக மனத்துக்குள் விசேடப் பிரதேசங்களில் ஆழப் பிரவேசிக்கிறது! வாழ்த்துகள்!//

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !