Wednesday, January 1, 2014

இடையனின் கால்நடை


காலை வெயில் அலைமோதும்
பனியில் குளித்த விருட்சங்களைச் சுற்றிய பசும்புல்வெளியில்
மேய விட்டிருந்தாய் உன் கால்நடையை

ஒழுகி அசைபோடச் செய்தபடியிருக்கும்
தனித்திருந்த கொட்டகையின் கூரைகள்
பகல் பொழுதின் மேய்ச்சல் நினைவுகளை
வைகறைவரை இரவிடம் கிசுகிசுக்கும்

வேட்டை விலங்குகளின் பார்வைக்குத் தப்பிய
கால்நடையின் சதைப் பூரிப்பில் மின்னும் அதன் சருமம்
உன் ப்ரியத்தில் உறைந்திருந்த அது
எங்கும் தப்பிப் போய்விடாது எனினும்
வேலியை இறுக்கிக் கட்டினாய் நீ
அதனையும் அறியாது அசைபோட்டபடியிருந்தது அது

மேய்ச்சலுக்கு இட்டுச் செல்ல முடியாத அடைமழை நாட்களில்
எங்கெங்கோ அலைந்து
தீனிச் செடி குலைகளை எடுத்து வருவாய்
உன் தலை தடவலில் உயிர்த்திருக்கும் அதனுலகம்
தீனிக்கென நீ வைத்திடும் எல்லாவற்றையும்
அன்பென எண்ணிச் சுவைக்கும்
அதட்டலுக்குப் பயந்து அடிபணியும் - பிறகும்
அகலாதிருக்க இவ் வாழ்வும்
உன் பரிவும் நிலைத்திடக் கனவு காணும்

தசை, தோல், எலும்பென கூறிட்டுப் பணம்பார்க்க
அதன் எடை கூடும் காலமெண்ணிக் காத்திருக்கும் உன்
கத்தியைக் கூர் தீட்டும் நாளில்
அதன் மேனியிலிருந்து எழக் கூடும்
விடிகாலைத் தாரகையோடு
பசும்புல்வெளியில் உலர்ந்த உன் பாசத்தின் வாசம்

- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
# அம்ருதா இதழ், அக்டோபர் 2013நவீன விருட்சம்திண்ணைபதிவுகள், காற்றுவெளி இதழ்