காற்றுக் குதிரைகள் கிளர்ந்து கிளப்பிய
தூசுப் படலத்தினுள்
சேர்த்து வைத்திருந்த இனிய பாடல்களும்
அந்தி விசும்போடு சிதைந்தழிந்தன
பகல் முழுதும் தீக் கண்களால்
பார்த்திருந்த வெயில்
மேகக் கூட்டத்துக்கு
மேலும் நீர் கோர்த்தது
கதவுகளைத் திறந்தேதான்
வைத்திருக்கிறேன்
எந்த ஓவியனாவது வந்து
வெயிலைப்போல
அல்லது சாரலைப்போல
ஏதேனும் கிறுக்கிச் செல்லட்டும்
ஒரு தபால்காரனாவது வந்து
ஏதேனும் தந்துசெல்லட்டும்
ஒரு வண்ணத்துப்பூச்சி
பூக்களின் வாசனைகளோடு
வந்துசெல்லட்டும்
அன்றேல்
மெதுநடைப் பூனையொன்றேனும்
- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
# யாத்ரா இதழ் - 20, ஜனவரி 2012
# எதுவரை இதழ் - 03, ஜூலை 2012
# உயிர்மை
# திண்ணை
Monday, July 16, 2012
Sunday, July 1, 2012
நினைவுகள் மிதந்து வழிவதானது
இருளின் மொழியைப் பேசும்
தண்ணீர்ச் சுவர்களை ஊடறுக்கும்
வலிமைகொண்ட நீர்ப் பிராணிகளை உள்ளடக்கிய
வனத்தின் நீரூற்றுக்கள்
பெரும்பாலும் மௌனமானவை
எப்பொழுதேனும் வனம் பற்றும் நாளில்
பரவியணைக்கப் போதா நீர்
நதியாகிப் பெருக்கெடுத்தோடுவதில்
யாது பயன்
காலம் காலமாக அழிந்த மர விலங்குடல்களை
செரித்து
தேயாப் பசி கொண்ட கானகத்தின்
எப் பெருவிருட்சத்தின் வேர்
அகன்ற வாயைக் கொண்டதுவோ
புராதனச் சிதிலங்கள் தொக்கி நிற்கும்
இக் காட்டிலெது நீ
அண்டும் குருவிகள் எக்கணமும்
குருதி சிந்தப் பறக்கக் கூடுமான
முற்செடியொன்றின் ஒற்றைப் பூ
விஷமெனப் பலரும்
விட்டொதுங்கக் கூடுமான
பாம்புப் புற்றருகில் தனித்த காளான்
இக் காட்டிலெது நீ
உள்ளே செல்ல எப்பொழுதும்
அனுமதி மறுக்கப்படக் கூடுமான
மாளிகை வாசல் யாசகன்
எவராலும் கரை சேர்க்கப்படாமல்
பயணம் தொடரக் கூடுமான
நதி முதுகின் இலை
மற்றுமோர் அழியா மேகமும் நான்
தவிர்ப்புக்களுக்கு வசப்படா
நினைவுகள் மிதந்து வழிவதானது
மெதுவாய்க் கொல்லும் நச்சு
இப்பொழுதும்
உள்ளிருந்து விழிகளுக்கு
தாவித் தீர்க்கும் உள்ளாழ்ந்த நிறைகனல்
உன்னால் தோன்றியதுதான்
- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
# அம்ருதா இதழ் - பெப்ரவரி, 2012
# எதுவரை இதழ் - 02, ஜூன், 2012
# உயிர்மை
# திண்ணை
- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
# அம்ருதா இதழ் - பெப்ரவரி, 2012
# எதுவரை இதழ் - 02, ஜூன், 2012
# உயிர்மை
# திண்ணை
Wednesday, June 13, 2012
பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில்
வானக் கரிய வாவியில் மின்னி நீந்திடும்
நன்றி
# அம்ருதா இதழ் - பெப்ரவரி, 2012
சிலவேளை
வீழ்வதாய்ப் போக்குக் காட்டும்
ஊணுண்ணிப் பட்சியென மீன்கொத்தி நிலா
மேற்கிலிருந்து கிழக்காய் நகர்ந்து நகர்ந்து கொத்திட
காலையில் செவ்வாகாயம் வெறிச்சோடிக் கிடக்கும்
இடித்திடித்துக் கொட்டிய
நேற்றின் இரவை நனைத்த மழை
உனதும் எனதுமான ஏகாந்தப் பொழுதொன்றை
நினைவுறுத்திக் கொண்டேயிருந்ததில்
அச்சமுற்றிருந்தேன் நான்
மின்சாரம் தடைப்பட்டெங்கும்
அந்தகாரம் மேவிய பொழுதில் கண்மூடி
விழித் திரைக்குள் உனையிறக்கியிருந்தேன்
உதறப்பட்ட காலத்தின் துளிகளோடு
உன் மீதான எனது சினங்களும்
ஆற்றாமைகளும் வெறுப்பும்
விலகியோடிப் போயிருக்கவேண்டும்
நினைத்துக் கொண்டேயிருந்தேன் உன்னையே
அப் பாடலைப் பாடியபடி
அச் செல்லப் பெயரால் எனை விளித்தபடி
பிரகாசத்தையள்ளி வீசுமுன் குரலையும் கேட்டேன்
அங்குமிங்குமசையும் ஊஞ்சல்
அந்தரத்தில் சரணடையும் ஆவல்
அக் கணத்து மனநிலையை என்சொல்வேன்
அகழ்வுகளுக்குள் தேடினால் அர்த்தமற்ற நம்
சச்சரவுகளின் நூலாம்படை திரண்டுகிடக்கும்
எமக்கெதிரான
எல்லாப் புழுதிகளுமெழும்பிக் கட்டிய மதிலதன்
அத்திவாரத்தில் இருவரில்
எவரது அன்பைப் போட்டு மூடினோம்
இனித் தவறியும் ஒருவரையொருவர்
நினைத்தலோ பார்த்தலோ கதைத்தலோ
ஆகாதெனும் விதியை நிறுவிச் சலனங்களை
விழுங்கிச் செறிக்க முடியாது
விழி பிதுங்கி நிற்கும் நம் துயர் பொழுதுகள்
யுகங்களாகத் தொடர
வேண்டியிருந்தோமா
பிரிவின் அன்றை
இருவரும் எப்படியோ வாழ்ந்து கடந்தோம்
சர்வமும் நிகழ்ந்து முடிந்தது பூமியில் அன்றும்
பின்வாசல் சமதரைப் புல்வெளி
நிலவின் பால் குடித்தரும்பிய
பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயிலில்
இரவின் சாயல் துளியேதுமில்லை
- எம்.ரிஷான் ஷெரீப்
- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
# அம்ருதா இதழ் - பெப்ரவரி, 2012
# எதுவரை இதழ் - 02, ஜூன்,2012
# நவீன விருட்சம்
# திண்ணை
Labels:
அம்ருதா,
எதுவரை,
கவிதை,
சமூகம்,
திண்ணை,
நவீனவிருட்சம்,
நிகழ்வுகள்
Saturday, May 12, 2012
ஈரக் கனாக்கள்
ஈரம் கசியும் புல்வெளியெங்கிலும்
நீர்ப்பாம்புகளசையும்
தூறல் மழையிரவில் நிலவு
ஒரு பாடலைத் தேடும்
வௌவால்களின் மெல்லிய கீச்சிடலில்
மூங்கில்கள் இசையமைக்கும்
அப் பாடலின் வரிகளை
முகில்கள் மொழிபெயர்க்கக் கூடும்
ஆல விருட்சத்தின்
பரந்த கிளைக் கூடுகளுக்குள்
எந்தப் பட்சிகளின் உறக்கமோ
கூரையின் விரிசல்கள் வழியே
ஒழுகி வழிகின்றன
கனாக்கள்
நீர்ப்பாம்புகள் வௌவால்கள்
இன்னபிறவற்றை
வீட்டுக்குள் எடுத்துவரும் கனாக்கள்
தூறல் மழையாகிச் சிதறுகின்றன
ஆவியாகி
பறவைகளோடு சகலமும் மௌனித்த இரவில்
வெளியெங்கும்
- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
# அம்ருதா இதழ் - பெப்ரவரி, 2012
# எங்கள் தேசம் இதழ் - மே 01 - 15, 2012
# மலைகள் இணைய இதழ் - 01
# திண்ணை
நன்றி
# அம்ருதா இதழ் - பெப்ரவரி, 2012
# எங்கள் தேசம் இதழ் - மே 01 - 15, 2012
# மலைகள் இணைய இதழ் - 01
# திண்ணை
Labels:
அம்ருதா,
எங்கள் தேசம்,
கவிதை,
சமூகம்,
திண்ணை,
நிகழ்வுகள்,
மலைகள்
Saturday, April 7, 2012
சிலை உயிர்த்தெழும் ஓர் கணம்
பாகங்களாக உடைந்திருக்கிறது
அவ் வனத்தின் பட்டுப்போன மரமொன்றினூடு
தென்படும் முழு நிலவு
விருட்சங்களால் ஈரலிப்போடு உறிஞ்சப்படுகின்றன
வனத்தின் எல்லை மர வேர்களை
தழுவும் சமுத்திரத்தின் அக் கணத்து அலையில்
இருளை ஊடறுத்துச் சிதறும் ஒளிக் கிரணங்கள்
காற்று அணைக்கப் பாடுபடும் அந்த ஓடத்து விளக்கினை
ஏற்றியவன் கரங்களிலிருந்து விசிறப்படும்
வலையினில் சிக்கிக் கொள்கிறது
தண்ணீரில் முளைத்த பௌர்ணமி
வேட்டைக்காரனுக்குத் தப்பிய தேன்கூடொன்று
ஒளிந்திருக்கும் மலைக்குன்று இதுவல்லவோ
எந்தப் பாதச் சுவடுகளும் தொட்டிராச் சருகுக் குவியல்
சலசலத்து எழுப்பும் இசை
தேனீக்களுக்குத் தாலாட்டோ
எத்தனையோ நிலவுகளை ரசித்த புத்தர்,
சிலையாகித் தனித்திருக்கும் வனத்தின் விகாரைக்கு
தூய மலர்களோடு அணிவகுக்கும்
வெண்ணிற ஆடை பக்தர்களுக்கு
வழிகாட்டும் நிலவின் விம்பம்
அவர்கள்தம் நகங்களில் மின்னுகிறது
நீரின் மேல் மிதந்த நிலவு
அசைந்து அசைந்து மூழ்கும் காலை
தீக்குழம்பாய் உருகும் ஆகாயத்தில்
தொலைதூரச் செல்லும் பறவைகள்
தனித்த புத்தர் சிலையையும் விருட்சமெனக் கொண்டு
தரித்துச் செல்லும் அக் கணம் மட்டுமேதான்
சிலை உயிர்த்தெழும் ஓர் கணம்
- எம்.ரிஷான் ஷெரீப்
110811
நன்றி
# கலைமுகம் - கலை இலக்கிய இதழ்
# உயிர்மை
# நவீன விருட்சம்
# திண்ணை
# உயிர்மை
# நவீன விருட்சம்
# திண்ணை
Labels:
உயிர்மை,
கலைமுகம்,
கவிதை,
சமூகம்,
சிறப்பு,
திண்ணை,
நவீனவிருட்சம்,
நிகழ்வுகள்
Monday, March 5, 2012
கடிகாரத்திலிருந்து உதிரும் காலம்
காற்றசைத்துப் பார்க்கும் காலம்
பட்டுத் தெறிக்கும் வெளிச்சப் புள்ளியில்
துளித் துளியாய் திணறும்
ஓவியம் தீட்டும்
தூரத்து மின்னல்
ஆகாயம் கிழித்துக் குமுறிட
அதிவேக விலங்கொன்றென
மழை கொட்டும் பொழுதொன்றில்
வனாந்தரங்களைத் திசைமாற்றவென
எத்தனிக்கும் அதே காற்று
செட்டைகளைத் தூக்கி நகரும்
வண்ணத்துப் பூச்சிக்கு
ஏரி முழுவதும் குடித்திடும் தாகம்
சோம்பலில் கிடத்தியிருக்கும்
உடலுக்குள் உணர்த்தப்படும்
தூரத்து ரயிலினோசை
மழை, காற்று, குளிர்
விழிகள் கிறங்கியே கிடக்கும்
பணி நாள் காலை
கடிகாரத்திலிருந்து உதிர்கின்றன
காலத்தின் குறியீடுகள்
துளித் துளியாய்
- எம்.ரிஷான் ஷெரீப்
20100715
நன்றி
# காலச்சுவடு இதழ் - 142, அக்டோபர் 2011
# உயிர்மை
# நவீன விருட்சம்
# காற்றுவெளி
நன்றி
# காலச்சுவடு இதழ் - 142, அக்டோபர் 2011
# உயிர்மை
# நவீன விருட்சம்
# காற்றுவெளி
Labels:
உயிர்மை,
கவிதை,
காலச்சுவடு,
காற்றுவெளி,
சமூகம்,
நவீனவிருட்சம்,
நிகழ்வுகள்
Subscribe to:
Posts (Atom)




