Friday, September 28, 2007

நடுநிசியிலெனது தேசம்...!



















பகல் மறையும் பொழுதுகளில்
ஆரம்பிக்கும்
எம்மக்கள் பதற்றம்...
மெல்ல இருட்ட ஆரம்பிக்கும்-எங்கள்
உவகையெல்லாவற்றையும்
உள்வாங்கி...!

குண்டு விழும்,
விழுந்த இடத்தைச் சிதறடிக்கும்,
இடி போலச் சத்தங்கேட்கும்,
தூரத்து அவலக்குரல்கள்
குண்டு போடப்படுவதை
உறுதிப்படுத்தி-தொடர்ந்து
எதிரொலிக்கும் !

துப்பாக்கிகள்
வீட்டுக்கதவு தட்டும்,
சகல குடும்பத்தினரதும்
கதறலுக்கப்பாற்பட்டு-இளைஞர்கள்
கடத்தப்படுவர் !

பௌர்ணமியும்
பார்த்து அழும்
வதைப்படுதல் கண்டு !

தினந்தோறும்
கடற்கரை,வயற்காடு,
வீதியோரம், களத்துமேடு,
பொதுமயானம், புளியந்தோப்பு,
எங்கும் கண்டிடலாம்...

எவர்க்கேனும் மகனாக,
கணவனாக,தந்தையாக,
சகோதரனாக,சினேகிதனாக
வாழ்ந்து வந்தவர்களின்
சடலங்களை...!

'இன்றைக்கெவர்க்குச் சாவோ..?"
பதுங்கு குழியிலிருந்தவாறே
உறவினரை எண்ணிப்பார்த்து
உயிர்துடிக்கும்.
மூச்சடக்கி, மூச்சடக்கி
உள்நெஞ்சுக்கேவல் எழும் !

அனைத்தும் முடிந்தநேரம்
வீட்டுச்சுவர் மேல் - சத்தமின்றி
வெயில் ஏறும் !

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை

6 comments:

KARTHIK said...

ஷெரிப்

//பௌர்ணமியும்
பார்த்து அழும்
வதைப்படுதல் கண்டு//

இன் நிலை விரைவில் மாறவேண்டும்.மாறும் ஷெரிப்.

M.Rishan Shareef said...

நிச்சயமாக கார்த்திக்.நல்லதையே எண்ணுவோம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

பூங்குழலி said...

இதயத்தில் வலி ஏற்படுத்தும் வரிகள் ரிஷான்,என்றேனும் இவர்கள் விடியலும் நல்ல நிம்மதியான அசதி போக்கிய விடியல்களாக
விடிய என் பிரார்த்தனைகள்.

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

கருணை வாய்ந்த உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறட்டும்...!

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோதரி !

MSK / Saravana said...

//அனைத்தும் முடிந்தநேரம்
வீட்டுச்சுவர் மேல் - சத்தமின்றி
வெயில் ஏறும் !//

காட்சிகள் மாறும் நண்பரே..

M.Rishan Shareef said...

அன்பின் சரவணகுமார்,

// காட்சிகள் மாறும்....//

நிச்சயமாக நண்பரே :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)