Thursday, February 11, 2010

இடர்மழை

நமக்கிடையே வான் தெளித்த
அடர்த்தியான மழையைத் தவிர்த்து
வேறெவருமிருக்கவில்லை
தூறல் வலுத்த கணமது
வீதியின் ஒரு புறத்தில் நீ
இதுவரை கவிழ்ந்திருந்த தலையை
முக்காட்டுக்குள்ளிருந்து நிமிர்த்தி
எதிரே வருமென்னைப் பார்க்கிறாய்

காற்றடித்து வலுத்த மழைக்குத் தப்பியோட
நானிருக்கும்போது நீ முயற்சிக்கவில்லை
உன் நாணத்தை முழுமையாக வழித்தெறியத்
தூறலுக்குத் தெரியவுமில்லை

உன்னிடமோ என்னிடமோ
அந்திவேளையின் மழையை எதிர்பார்த்த
குடைகள் இல்லை
வானிலிருந்து பொழியும் நீர்த்துளிகளைத் தடுக்க
மேனிகளுக்குத் தெரியவுமில்லை

இத்தனைகள் இல்லாதிருந்தும்
ஆண்மையென்ற பலமிருந்து நான்
அருகிலிருந்த என் வீட்டிற்கு ஓடுகிறேன்
காற்சட்டையில் சேறடித்திருக்கக்
கவலையேதுமில்லை
தேய்த்துக் கழுவ அம்மா இருக்கிறாள்
நான் மறையும்வரை காத்திருந்து நீயும்
புத்தகங்களை நெஞ்சில் அணைத்து
பேருந்து நிறுத்தம் நோக்கி
ஓடத்துவங்குகிறாய்

திரைக்காட்சிகளில் வரும்
அழகிய இளம்பெண்களின்
மழை நடனங்கள் பற்றிய கனவுகளோடு
யன்னல் வழியே பார்க்கிறேன் உன்னை

ஆங்காங்கே ஒழுகிவழியும்
பேரூந்து நிறுத்தத்துக்குள்
நீ முழுவதுமாக நனைந்திருக்க
அடிக்கடி பின்னால் திரும்பி
சேற்றோவியம் வரைந்திருந்தவுன்
நீண்ட அங்கியைக் கவலையுடன்
பார்த்தவாறிருக்கிறாய்
தேய்த்துக் கழுவுவது நீயாக இருக்கக்கூடும்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# வடக்குவாசல் - டிசம்பர், 2009
# நவீன விருட்சம்
# தமிழ் எழுத்தாளர்கள்
# கீற்று
# திண்ணை
# வார்ப்பு



16 comments:

தமிழினி said...

அருமையான கவிதை தோழர்,வாழ்த்துக்கள்.

naji deen said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அழகான கவிதை, நன்றாக எழுதுகிறீர்கள். உங்களை தொடர்ந்து உயிர்மை, கீற்று இணைய தளங்களில் பார்த்து வருகிறேன். வாழ்த்துக்கள்.

மாதவராஜ் said...

நல்ல சித்திரம் போல் இருக்கிறது கவிதை. அருமை. ரசித்தேன்.

பூங்குழலி said...

காற்சட்டையில் சேறடித்திருக்கக்
கவலையேதுமில்லை
தேய்த்துக் கழுவ அம்மா இருக்கிறாள்

சேற்றோவியம் வரைந்திருந்தவுன்
நீண்ட அங்கியைக் கவலையுடன்
பார்த்தவாறிருக்கிறாய்
தேய்த்துக் கழுவுவது நீயாக இருக்கக்கூடும்

இந்த இரு இடங்கள் கவிதையில் அழகு ரிஷான்

திரைக்காட்சிகளில் வரும்
அழகிய இளம்பெண்களின்
மழை நடனங்கள் பற்றிய கனவுகளோடு
யன்னல் வழியே பார்க்கிறேன் உன்னை

ஓஹோ ...

விஜி said...

//சேற்றோவியம் வரைந்திருந்தவுன்
நீண்ட அங்கியைக் கவலையுடன்
பார்த்தவாறிருக்கிறாய்
தேய்த்துக் கழுவுவது நீயாக இருக்கக்கூடும் //

இந்தவரிகளால்!! தலைப்பை உணர்த்திவிட்டீர்கள் ரிஷான்!!சபாஷ்!

ஸ்ரீ சரவணகுமார் said...

//உன் நாணத்தை முழுமையாக வழித்தெறியத்
தூறலுக்குத் தெரியவுமில்லை//

மிக அழகான வரிகள்

வல்லிசிம்ஹன் said...

வெகு அழகான மழைக் கவிதை ரிஷான். பல நினைவுகளைத் தட்டி எழுப்புகிறது.
சேற்றோவியம் என்றே பெயர் சூட்டலாமோ.

இடர் மழையில் பார்வைகள் சேர்ந்ததால் தொடர் மழையாகி இருக்குமோ.
.இந்த மாதிரி பல சாத்தியக் கூறுகள்.

M.Rishan Shareef said...

அன்பின் தமிழினி,

//அருமையான கவிதை தோழர்,வாழ்த்துக்கள்............//


கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் Naji Deen,

வ அலைக்கும் ஸலாம்.

//அழகான கவிதை, நன்றாக எழுதுகிறீர்கள். உங்களை தொடர்ந்து உயிர்மை, கீற்று இணைய தளங்களில் பார்த்து வருகிறேன். வாழ்த்துக்கள்.//

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் மாதவராஜ்,

//நல்ல சித்திரம் போல் இருக்கிறது கவிதை. அருமை. ரசித்தேன்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பு நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

///காற்சட்டையில் சேறடித்திருக்கக்
கவலையேதுமில்லை
தேய்த்துக் கழுவ அம்மா இருக்கிறாள்

சேற்றோவியம் வரைந்திருந்தவுன்
நீண்ட அங்கியைக் கவலையுடன்
பார்த்தவாறிருக்கிறாய்
தேய்த்துக் கழுவுவது நீயாக இருக்கக்கூடும்//

இந்த இரு இடங்கள் கவிதையில் அழகு ரிஷான்

//திரைக்காட்சிகளில் வரும்
அழகிய இளம்பெண்களின்
மழை நடனங்கள் பற்றிய கனவுகளோடு
யன்னல் வழியே பார்க்கிறேன் உன்னை//

ஓஹோ ...///

:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் விஜி,

////சேற்றோவியம் வரைந்திருந்தவுன்
நீண்ட அங்கியைக் கவலையுடன்
பார்த்தவாறிருக்கிறாய்
தேய்த்துக் கழுவுவது நீயாக இருக்கக்கூடும் //

இந்தவரிகளால்!! தலைப்பை உணர்த்திவிட்டீர்கள் ரிஷான்!!சபாஷ்!//

:)
கருத்துக்கு நன்றி தோழி :)

M.Rishan Shareef said...

அன்பின் ஸ்ரீ சரவணகுமார்,

////உன் நாணத்தை முழுமையாக வழித்தெறியத்
தூறலுக்குத் தெரியவுமில்லை//

மிக அழகான வரிகள்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பு நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் வல்லிசிம்ஹன்,

//வெகு அழகான மழைக் கவிதை ரிஷான். பல நினைவுகளைத் தட்டி எழுப்புகிறது.
சேற்றோவியம் என்றே பெயர் சூட்டலாமோ.

இடர் மழையில் பார்வைகள் சேர்ந்ததால் தொடர் மழையாகி இருக்குமோ.
.இந்த மாதிரி பல சாத்தியக் கூறுகள்.//

அழகான கருத்து.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

ஜெயலக்ஷ்மி said...

மிகவும் நன்றாக இருந்தது

M.Rishan Shareef said...

அன்பின் ஜெயலக்ஷ்மி,

கருத்துக்கு நன்றி சகோதரி !