Thursday, April 15, 2010

வண்ணத்துப்பூச்சிகளைச் சூடிக்கொண்டவள்


அவன் தன்
வேட்டைப்பற்களை மறைக்க
தேவதூதனையொத்தவொரு
அழகிய முகமூடியைத் தன்
அரக்க முகத்தில் மாட்டிக்கொண்ட
பின்னரான பொழுதொன்றில்தான்
அவள் அவனைப் பார்த்தாளெனினும்
ஒரு செங்கழுகின் சூட்சுமத்தோடலையும்
அவனது விஷப்பார்வையை அறிந்திட்டாளில்லை

அக்கழுகு
அழகிய பெண்களின் மாமிசப்பட்சி
அவர்தம் வாழ்வினைக் கொழுவி
உயிர் எஞ்சத் துண்டுகளாய்
வெட்டியெடுத்துச் சப்பிச் சிரிக்கும்
கோரங்களைக் கொண்டவை அதனது நாட்கள்

அவள்
செந்தாமரை மலரொத்தவொரு
தேவதைக்குப் பிறந்தவள்
ஏழ்மையெனும் சேற்றுக்குள்
வனப்பு நிறைக்க மலர்ந்தவள்
அன்பைத்தவிர்த்து ஏதொன்றும் அறியா
அப்பாவிப்பெண்ணக் கழுகின்
கூர்விழிகளுக்குள் விழுந்தவள்

சுவனக் கன்னியையொத்த
தூய்மையைக் கொண்டவளின்
கவனம் பிசகிய கணமொன்றிலவன்
கவரும் இரையுடனெறிந்த காதல் தூண்டிலின் முள்
மென்தொண்டையில் இலகுவாக இறங்கிற்று
என்றுமே உணர்ந்திராதவொரு
விபரீதக் குருதிச்சுவையை நா உணர்ந்திற்று

நேசத்தினைச் சொல்லிச் சொல்லி
அவளது சதைகளை அவ்விஷப்பட்சி
தின்றரித்து முடிந்தவேளையில்
வாழ்வில் காணாவொரு துயரத்தை
அவள் கண்கள் விடாதுசொரிந்திட
எந்நாள்பொழுதும் தீராப்பசியோடவன்
வேறொரு அழகியை ஈர்க்கச் சென்றான்
இயல்பை மறந்த நாட்கள் தொடர்ந்து வர
அவளது தேவதைப்பாடல்கள் சோரலாயின

ஆழி நடுவிலொரு ஒற்றைப்படகிலமர்ந்து
சூழ்ந்த தனிமைக்கும் துயருக்கும்
மீளப்பெறமுடியா இழப்புக்குமாக
வசந்தகாலத்து வனங்களின்
வண்ணத்துப்பூச்சிகளைத் தன்
அரணாக அவள் சூடிக் கொண்டாள்
இன்று
மீட்டமுடியாக் காலத்தின் வினைகளைத்
தம் இச்சையால் உணர்ந்த பல திமிங்கிலங்கள்
இடையறாது படகை
வட்டமிட்டுக் கொண்டேயிருக்கின்றன

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# வடக்குவாசல் - ஜனவரி, 2010 இதழ்
# தமிழ் எழுத்தாளர்கள்
# நவீன விருட்சம்
# வார்ப்பு

17 comments:

பனித்துளி சங்கர் said...

ஆஹா அருமை . வாரிகள் ஒவ்வொன்றும் ஒரு புதுமை .

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

பூங்குழலி said...

நேசத்தினைச் சொல்லிச் சொல்லி
அவளது சதைகளை அவ்விஷப்பட்சி
தின்றரித்து முடிந்தவேளையில்
வாழ்வில் காணாவொரு துயரத்தை
அவள் கண்கள் விடாதுசொரிந்திட
எந்நாள்பொழுதும் தீராப்பசியோடவன்

கவரும் இரையுடனெறிந்த காதல் தூண்டிலின் முள்

இந்த வரி அதி அற்புதம் ரிஷான்
பல செய்திகளை தன்னுள் எடுத்துக் கொண்ட தொடர் ...

எனக்கும் ஏதோ தொண்டையில் முள் சிக்கியது போலவே தோன்றுகிறது கவிதையை படிக்கையில் ....

kulirthazhal said...

அழகான வார்த்தைகள், நெருக்கமான வர்ணனை. ஒரு பெண் எழுதியதாய் தோன்றச்செய்யும் பாலுணர்வு.. சிறப்பு... தொடருங்கள்.......

இளசு said...

''காதல்'' தோல்வி
கட்டாயக் கன்னி..

குழந்தைகள், ஆதரவற்றோர் பணியில் மூழ்கி வாழுங்காலம்..
இன்னும் இருக்கும் இளமை உண்ண இங்கும் ஒரு கூட்டம்..

களம் ஒரு வித கனம்..

சொன்ன விதம் மிக மிக அதிகக் கனம்.

சிலர் வித்தியாசமாய் எழுத முயல்வார்கள்.

உங்கள் இயல்பான எழுத்தே வித்தியாசமாய்..

பாராட்டுகள் ரிஷான்.

mohamedali jinnah said...

வண்ணத்துப்பூச்சி,பெண் ,கவிதை எல்லாம் . அழகு ,அருமை

இரசிகை said...

purinthum puriyaamalum.....!


//
கவரும் இரையுடனெறிந்த காதல் தூண்டிலின் முள்
//

:)

கீதம் said...

பேதையின் அவலநிலையை படம்பிடித்துக் காட்டுகின்றன, கவிதை வரிகள். வண்ணத்துப்பூச்சி அரணை திமிங்கலங்களின் பசப்பு வார்த்தைகள் உடைத்துவிடக்கூடாதே என்று மனம் ஏங்குகிறது. பாராட்டுகள் ரிஷான் ஷெரீப் அவர்களே.

Govindh said...

"வசந்தகாலத்து வனங்களின்
வண்ணத்துப்பூச்சிகளைத் தன்
அரணாக அவள் சூடிக் கொண்டாள்...."

அவள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்...
கவி அருமை...பாராட்டுக்கள்...

M.Rishan Shareef said...

அன்பின் பனித்துளி சங்கர்,

//ஆஹா அருமை . வாரிகள் ஒவ்வொன்றும் ஒரு புதுமை .

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//நேசத்தினைச் சொல்லிச் சொல்லி
அவளது சதைகளை அவ்விஷப்பட்சி
தின்றரித்து முடிந்தவேளையில்
வாழ்வில் காணாவொரு துயரத்தை
அவள் கண்கள் விடாதுசொரிந்திட
எந்நாள்பொழுதும் தீராப்பசியோடவன்

கவரும் இரையுடனெறிந்த காதல் தூண்டிலின் முள்

இந்த வரி அதி அற்புதம் ரிஷான்
பல செய்திகளை தன்னுள் எடுத்துக் கொண்ட தொடர் ...

எனக்கும் ஏதோ தொண்டையில் முள் சிக்கியது போலவே தோன்றுகிறது கவிதையை படிக்கையில் ....//

:-)
முழுமையாக உணர்ந்து படித்திருக்கிறீர்களென நினைக்கிறேன். அதனால்தான். :-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் குளிர் தழல்,

//அழகான வார்த்தைகள், நெருக்கமான வர்ணனை. ஒரு பெண் எழுதியதாய் தோன்றச்செய்யும் பாலுணர்வு.. சிறப்பு... தொடருங்கள்.......//

உங்கள் பெயர் அழகாக இருக்கிறது.
கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் இளசு,

//''காதல்'' தோல்வி
கட்டாயக் கன்னி..

குழந்தைகள், ஆதரவற்றோர் பணியில் மூழ்கி வாழுங்காலம்..
இன்னும் இருக்கும் இளமை உண்ண இங்கும் ஒரு கூட்டம்..

களம் ஒரு வித கனம்..

சொன்ன விதம் மிக மிக அதிகக் கனம்.

சிலர் வித்தியாசமாய் எழுத முயல்வார்கள்.

உங்கள் இயல்பான எழுத்தே வித்தியாசமாய்..

பாராட்டுகள் ரிஷான்.//

அழகான வரிகளில் தெளிவான கருத்து மகிழச் செய்கிறது.

கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் முஹமதலி ஜின்னாஹ்,

//வண்ணத்துப்பூச்சி,பெண் ,கவிதை எல்லாம் . அழகு ,அருமை//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பு நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் இரசிகை,

உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் கீதம்,

//பேதையின் அவலநிலையை படம்பிடித்துக் காட்டுகின்றன, கவிதை வரிகள். வண்ணத்துப்பூச்சி அரணை திமிங்கலங்களின் பசப்பு வார்த்தைகள் உடைத்துவிடக்கூடாதே என்று மனம் ஏங்குகிறது. பாராட்டுகள் ரிஷான் ஷெரீப் அவர்களே.//

வண்ணத்துப் பூச்சிகளின் அரண் உடைபடாமல் காப்பது அவளிடமே தங்கியிருக்கிறது. திமிங்கிலங்களின் பசப்பு வார்த்தைகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். :-(

அருமையான கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் கோவிந்த்,

//"வசந்தகாலத்து வனங்களின்
வண்ணத்துப்பூச்சிகளைத் தன்
அரணாக அவள் சூடிக் கொண்டாள்...."

அவள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்...
கவி அருமை...பாராட்டுக்கள்...//

உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும்.
கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே !

பிரவின்ஸ்கா said...

நல்லாருக்கு

--பிரவின்ஸ்கா