Wednesday, May 8, 2013

தெளிதல்




ஏமாற்றத்தின் சலனங்களோடு
மெல்லிய வேனிற்காலம் தொடர்ந்தும்
அருகாமையை எண்ணச் செய்தவண்ணம் தேய்கிறது
மழை பெய்யலாம் அல்லது பெய்யாது விடலாம்
இரண்டையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்
எல்லாவற்றையும் அதிர்ந்துபோகச் செய்த இறுதிக் கணங்கள்
மிகப் பற்றுதலோடு என்னைப் பிடித்திருந்தன
வாழ்வைப் பற்றிய பற்றுதல் குறித்து இனி எதுவும் எழுதுவதாயில்லை

மகிழ்ச்சி ததும்பிய நேற்றின் தருணங்கள்
ஒரு புகையென மறைந்து அழிந்துவிட்டன
நூதனங்களை மிஞ்சிய பழங்காலத் தடயமொன்றைப் பேணிக் காக்கும்
மூதாட்டியொருத்தியைப் போல எல்லாவற்றையும் சுமந்து திரிவதில்
விசனப்படத்தான் வேண்டியிருக்கிறது

மிக எளிய ஆசைகள் கொண்டு
நான் பூட்டிய குதிரைகள் தப்பியோடினவோ
புழுதி மட்டுமே எஞ்சியிருக்கிறது
வெளிச்சம் எதிலுமில்லை

கடற்கரையெங்கிலும் மணற்துகள்கள்
அகலும்போது உறுத்துவதைத் தட்டிவிடத்தான் வேண்டியிருக்கிறது
ஊரில் கடலற்ற சிறுவனின் பாதம் நனைக்க
அலைகளும் எங்குமில்லை
நேற்றைய சமுத்திரத்தோடு அது ஓய்ந்துவிட்டது

எந்த நேசமுமற்று எப்பொழுதும்
உனது தேவைகளுக்காக மட்டுமே நான் பயன்படுத்தப்பட்டேன் எனும்
ஏமாற்றத்தின் முதல் தளிரோடு
ஒரு கவிதை எஞ்சியிருக்கிறது தலைப்பேதுமற்று

நாளைக்கு இருக்கும் முகம் உனதானதில்லை

- எம்.ரிஷான் ஷெரீப்
13202320130501

நன்றி
# உயிர்மைதிண்ணை, பதிவுகள்

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// மூதாட்டியொருத்தியைப் போல எல்லாவற்றையும் சுமந்து திரிவதில்
விசனப்படத்தான் வேண்டியிருக்கிறது ///

இராய செல்லப்பா said...

“மிக எளிய ஆசைகள் கொண்டு /நான் பூட்டிய குதிரைகள் தப்பியோடினவோ/ புழுதி மட்டுமே எஞ்சியிருக்கிறது/வெளிச்சம் எதிலுமில்லை” என்ற வரிகளை மிகவும் ரசித்தேன். துயரச்சுவை நெஞ்சை நெகிழவைக்கிறது. - நியுஜெர்சியிலிருந்து கவிஞர் இராய. செல்லப்பா.

M.Rishan Shareef said...

அன்பின் திண்டுக்கல் தனபாலன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் கவிஞர் இராய. செல்லப்பா,

//“மிக எளிய ஆசைகள் கொண்டு /நான் பூட்டிய குதிரைகள் தப்பியோடினவோ/ புழுதி மட்டுமே எஞ்சியிருக்கிறது/வெளிச்சம் எதிலுமில்லை” என்ற வரிகளை மிகவும் ரசித்தேன். துயரச்சுவை நெஞ்சை நெகிழவைக்கிறது.//

நிஜமாகவே வாழ்க்கையானது ஒவ்வொரு விடயத்திலும் துயரச்சுவை பூசப்பட்டதுதான் இல்லையா? :-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

Subashini Tremmel said...

அருமை ரிஷான்,

வரிகளில் சோகம் ஆழப்பதிந்திருப்பதாகத் தோன்றுகின்றது.

சுபா said...

//ஒரு கவிதை எஞ்சியிருக்கிறது தலைப்பேதுமற்று//

//நாளைக்கு இருக்கும் முகம் உனதானதில்லை//

மனதைத் தொட்டன இவ்வரிகள்.

பவளா said...

உண்மை, முத்து முத்தான வரிகள்! வாழ்த்துக்கள் ரிஷான்!

M.Rishan Shareef said...

அன்பின் சுபாஷினி ட்ரெம்மல்,

//அருமை ரிஷான்,

வரிகளில் சோகம் ஆழப்பதிந்திருப்பதாகத் தோன்றுகின்றது.//

:-)
கருத்துக்கு நன்றி தோழி !

M.Rishan Shareef said...

அன்பின் சுபா,

////ஒரு கவிதை எஞ்சியிருக்கிறது தலைப்பேதுமற்று//

//நாளைக்கு இருக்கும் முகம் உனதானதில்லை//

மனதைத் தொட்டன இவ்வரிகள்.//

நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் பவளசங்கரி,

//உண்மை, முத்து முத்தான வரிகள்! வாழ்த்துக்கள் ரிஷான்!//

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !