Thursday, July 15, 2010

மான்குட்டியைக் கைவிட்ட பின்


கனவுகளின் பிறழ்வுகளுக்குள்
மான்குட்டிகளை ஓடவிட்டபடி
பெருநகரத்துத் தெருவழியே
மேய்ப்பாளன் நடந்தான்
அழகழகாய்ப் புள்ளிகளிட்ட மான்கள்
அமைதியாக
அவன் காட்டிய திசை நடந்தன
ஆஸ்திகளனைத்தையும் அவனிடம் கொடுத்து
ஓர் மான்குட்டி வாங்கினேன்
என்னிடமிருந்து துள்ளிப்பாய்ந்த மான்
எங்கோடிற்றென நினைவில்லை
மான்குட்டியும் ஆஸ்திகளும்
கனவுகளின் பிறழ்வுகளினிடையிருந்து
இன்னும் மீளவேயில்லை
நானும்

- எம்.ரிஷான் ஷெரீப்
இலங்கை


நன்றி
# அம்பலம் கலை இலக்கிய இதழ் - ஜனவரி, 2010
# சொல்வனம் இதழ் - 28
# உயிர்மை

Thursday, July 1, 2010

எனது 'வீழ்தலின் நிழல்' கவிதைத் தொகுப்பு வெளியீடு மற்றும் வானொலி அறிமுகம்

அன்பின் நண்பர்களுக்கு,

காலச்சுவடு பதிப்பகம் வெளியிடும் எனது 'வீழ்தலின் நிழல்' கவிதைத் தொகுப்பின் வெளியீட்டுவிழா எதிர்வரும் சனிக்கிழமை (ஜூலை 03, 2010) மாலை ஆறு மணிக்கு, இந்தியா, சென்னை, எழும்பூர், இக்சா மையத்தில் நிகழவிருக்கிறது.

எனது கவிதைத் தொகுப்பை கவிஞர் சுகிர்தராணி வெளியிட கவிஞர் உமா ஷக்தி பெற்றுக் கொள்கிறார். எனது தொகுப்புடன் சேர்த்து மொத்தம் எட்டு ஈழத்து நூல்கள் அந் நாளில் வெளியிடப்படவிருக்கின்றன.

இது சம்பந்தமாக காலச்சுவடு பதிப்பக உரிமையாளர் திரு.கண்ணன் சுந்தரம், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கிய அறிமுகம் கீழே...



திரு.கண்ணன் சுந்தரம், கவிஞர் சுகிர்தராணி, கவிஞர் உமா ஷக்தி, நேர்காணல் அறிவிப்பாளர் திரு.கானா பிரபா மற்றும் எனது கவிதைகளோடு இங்கு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

விழாவுக்கு உங்கள் வருகையையும் நல்லாசிகளையும் பெரிதும் எதிர்பார்க்கிறேன்.

என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்


Tuesday, June 15, 2010

உஷ்ண வெளிக்காரன்

கொதித்துருகும் வெயிலினை
ஊடுருவிக் காற்றெங்கும்
பரந்திடா வெளி

வியாபித்து
ஊற்றுப் பெருக்கும் புழுக்கம்

வெப்பம் தின்று வளரும்
முள்மரங்கள்
நிலமெங்கிலும்
கனிகளைத் தூவுகின்றன

உச்சிச் சூரியனுக்கும்
வானுக்கும் வெற்றுடல் காட்டி
நிழலேதுமற்று கருகிய புல்வெளியில்
ஆயாசமாகப் படுத்திருக்கும்
சித்தம் பிசகியவன்
புழுதி மூடிய பழங்களைத் தின்று
கானல் நீரைக் குடிக்கிறான்

கோடை
இவனுக்காகத்தான் வருகிறது போலும்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


நன்றி
# காலச்சுவடு இதழ் 123, மார்ச் - 2010
# எங்கள் தேசம், மே 15 - 31 இதழ் 
# உயிர்மை
# திண்ணை




Wednesday, June 2, 2010

நள்ளிரவின் பாடல்


நடுத்தெருவில் விளையாடும்
பூனைக்குட்டிகளைப் பார்த்திருக்கும்
இரவொன்றின் பாடலை
நான் கேட்டேன்

மோதிச் செல்லக் கூடிய நகர்வன பற்றிய
எந்தப் பதற்றமுமின்றி
துள்ளுமவற்றைத் தாங்கிக்
கூட விளையாடுகிறது
சலனமற்ற தெரு

யாருமற்ற வீட்டின் கதவைத் தாளிட்டு
அந்த நள்ளிரவில் தெருவிலிறங்கி
நடக்கத் தொடங்குகையில்
திசைக்கொன்றாகத் தெறித்தோடி
எங்கெங்கோ பதுங்கிக் கொள்கின்றன
மூன்று குட்டிகளும்

நான் நடக்கிறேன்
தெரு சபிக்கிறது
நிசி தன் பாடலை
வெறுப்போடு நிறுத்துகிறது

இந்தத் தனிமையும்
இருளும் தெருவும்
வன்மம் தேக்கி வைத்து
எப்பொழுதேனுமென்னை
வீழ்த்திவிடக் கூடும்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# வல்லினம் கலை இலக்கிய இதழ் - 15, மார்ச் - 2010
# உயிர்மை
# திண்ணை

Thursday, May 20, 2010

தொலைவானில் சஞ்சரிக்கும் ஒற்றைப் பறவை

வளைதலும்
வளைந்து கொடுத்தலுமான
நாணல்களின் துயர்களை
நதிகள் ஒருபோதும்
கண்டுகொள்வதில்லை

கூடு திரும்பும் ஆவல்
தன் காலூன்றிப் பறந்த
மலையளவு மிகைத்திருக்கிறது
நாடோடிப் பறவைக்கு

அது நதி நீரை நோக்கும் கணம்
காண நேரிடலாம்
நாணல்களின் துயரையும்

சிறகடித்து அவற்றைத் தடவிக்கொடுத்து
தான் கண்டுவந்த
இரயில்பாதையோர நாணல்களின் துயர்
இதைவிட அதிகமென
அது சொல்லும் ஆறுதல்களை
நாணல்களோடு நதியும் கேட்கும்
பின் வழமைபோலவே
சலசலத்தோடும்

எல்லாத்துயர்களையும்
சேகரித்த பறவை
தன் துயரிறக்கிவர
தொலைவானம் ஏகும்
அப்படியே தன் கூடிருந்த மரத்தினையும்
கண்டுவரக் கூடும்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# மறுபாதி - கவிதைகளுக்கான காலாண்டிதழ் - 02
# சிக்கிமுக்கி இதழ் - 4 பெப்ரவரி, 2010
# உயிர்மை
# நவீன விருட்சம்

Saturday, May 1, 2010

மின்னல்களில் கைவிடப்பட்டவர்கள்

இருப்புக்கருகே
மூர்க்கத்தனத்தோடு
பெரும் நதி நகரும்
ஓசையைக் கொண்டுவருகிறது
கூரையோடுகளில் பெய்யும்
ஒவ்வோர் அடர்மழையும்

வீரியமிக்க
மின்னலடிக்கும்போதெல்லாம்
திரள்முகில் வானில்
இராநிலாத் தேடி யன்னலின்
இரும்புக் கம்பிகளைப் பற்றியிருக்கும்
பிஞ்சு விரல்களை அழுது கதற
விடுவித்துக் கொண்டோடுகிறாள்
குழந்தையின் தாய்

தொடர்ந்து விழும் இடி
ஏதோ ஒரு
நெடிய மரத்தை எரித்து அணைய
நீயோ
இடி மின்னலை விடவும் கொடிய
காதலைப்  பற்றியிருந்தாய்
துயருற்றவரைக் காப்பாற்றக் கூடும்
கருணை மிகுந்த ஓர் கரம்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# சொல்வனம் இதழ் - 19
# உயிர்மை
# நவீன விருட்சம்
# தமிழ் எழுத்தாளர்கள் 
# திண்ணை

Thursday, April 15, 2010

வண்ணத்துப்பூச்சிகளைச் சூடிக்கொண்டவள்


அவன் தன்
வேட்டைப்பற்களை மறைக்க
தேவதூதனையொத்தவொரு
அழகிய முகமூடியைத் தன்
அரக்க முகத்தில் மாட்டிக்கொண்ட
பின்னரான பொழுதொன்றில்தான்
அவள் அவனைப் பார்த்தாளெனினும்
ஒரு செங்கழுகின் சூட்சுமத்தோடலையும்
அவனது விஷப்பார்வையை அறிந்திட்டாளில்லை

அக்கழுகு
அழகிய பெண்களின் மாமிசப்பட்சி
அவர்தம் வாழ்வினைக் கொழுவி
உயிர் எஞ்சத் துண்டுகளாய்
வெட்டியெடுத்துச் சப்பிச் சிரிக்கும்
கோரங்களைக் கொண்டவை அதனது நாட்கள்

அவள்
செந்தாமரை மலரொத்தவொரு
தேவதைக்குப் பிறந்தவள்
ஏழ்மையெனும் சேற்றுக்குள்
வனப்பு நிறைக்க மலர்ந்தவள்
அன்பைத்தவிர்த்து ஏதொன்றும் அறியா
அப்பாவிப்பெண்ணக் கழுகின்
கூர்விழிகளுக்குள் விழுந்தவள்

சுவனக் கன்னியையொத்த
தூய்மையைக் கொண்டவளின்
கவனம் பிசகிய கணமொன்றிலவன்
கவரும் இரையுடனெறிந்த காதல் தூண்டிலின் முள்
மென்தொண்டையில் இலகுவாக இறங்கிற்று
என்றுமே உணர்ந்திராதவொரு
விபரீதக் குருதிச்சுவையை நா உணர்ந்திற்று

நேசத்தினைச் சொல்லிச் சொல்லி
அவளது சதைகளை அவ்விஷப்பட்சி
தின்றரித்து முடிந்தவேளையில்
வாழ்வில் காணாவொரு துயரத்தை
அவள் கண்கள் விடாதுசொரிந்திட
எந்நாள்பொழுதும் தீராப்பசியோடவன்
வேறொரு அழகியை ஈர்க்கச் சென்றான்
இயல்பை மறந்த நாட்கள் தொடர்ந்து வர
அவளது தேவதைப்பாடல்கள் சோரலாயின

ஆழி நடுவிலொரு ஒற்றைப்படகிலமர்ந்து
சூழ்ந்த தனிமைக்கும் துயருக்கும்
மீளப்பெறமுடியா இழப்புக்குமாக
வசந்தகாலத்து வனங்களின்
வண்ணத்துப்பூச்சிகளைத் தன்
அரணாக அவள் சூடிக் கொண்டாள்
இன்று
மீட்டமுடியாக் காலத்தின் வினைகளைத்
தம் இச்சையால் உணர்ந்த பல திமிங்கிலங்கள்
இடையறாது படகை
வட்டமிட்டுக் கொண்டேயிருக்கின்றன

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# வடக்குவாசல் - ஜனவரி, 2010 இதழ்
# தமிழ் எழுத்தாளர்கள்
# நவீன விருட்சம்
# வார்ப்பு

Monday, April 5, 2010

அகதிப் பட்சி

அப்பாரிய மலைகளைத் தாண்டிய வனாந்தரத்தின்
பெரு விருட்சமொன்றின் பரவிய கிளைகளில்
குச்சுக்களால் வேயப்பட்டு
எமக்கென்றொரு அழகிய கூடிருந்தது
இணைப்பறவைகள் சேர்த்துக் கட்டிய வீட்டில்
அழகாய்ப் பிறந்து கீச்சிட்டேனாம்

இரை திரட்டி வந்த அன்னைப் பட்சி
தொண்டைக்குள் வைத்தழுத்திய உணவு காயும் முன்
வேட்டைப் பறவையொன்றின்
வஞ்சகம் சூழ்ந்த விழிகளிலே விழுந்திட்டேன்

இறகுகள் இருக்கவில்லை
வில்லங்கங்கள் தெரியவில்லை
விசித்திர வாழ்க்கையிதன்
மறைவிடுக்குகள் அறியவில்லை
அன்னை அருகிலாப் பொழுதொன்றில்
சாத்தானியப் பட்சி காவிப்பறந்திற்று என்னை

கூரிய சொண்டுக்குள் என்
தோள் கவ்விப் பறக்கும் கணம்
மேகங்கள் மோதியோ
தாயின் கண்ணீர்ப் பிரார்த்தனையோ
எப்படியோ தவறிட்டேன்
கீழிருந்த இலைச் சருகுக்குள்
வீழ்ந்து பின் ஒளிந்திட்டேன்

அடை காத்தவளும் வரவில்லை - பின்னர்
காவிச் சென்றவனும் வரவில்லை
எப்படி வளர்ந்தேனென்று
எனக்கும் தெரியவில்லை
இறகுகள் பிறந்தன
தத்தித் தத்திப் பறக்கக் கற்றேன்

இன்று புராதன நினைவுகளைத் திரட்டியெடுத்து
வலிமையான குச்சிகள் கொண்டு
எனக்கொரு வீடு கட்டுகிறேன்
விஷப் பறவைகள் காவிப்பறக்க இயலா
உயரத்தில்  உருவத்தில்
விசித்திரமான கூடொன்று கட்டுகிறேன்
கூரிய சொண்டுகளால் தோள் கவ்வும் வலி
என் குஞ்சுகளுக்கு வேண்டாம்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.

நன்றி
# கலைமகள் - ஜனவரி, 2009 இதழ்
# உயிர்மை
# தமிழ் எழுத்தாளர்கள்

# வார்ப்பு
# ஓவியர் ஷ்யாம்



Monday, March 15, 2010

முக்காட்டு தேவதைகள்

தீயெரித்த வனமொன்றின்
தனித்த பறவையென
வரண்டு வெடித்த நிலமொன்றின்
ஒற்றைச் செடியென
சாக்காட்டுத் தேசமொன்றிலிருந்து
உயிர் பிழைத்தவள்
நிறைகாதலோடு காத்திருக்கிறாள்
அவன் சென்ற அடிச்சுவடுகளில் விழிகள்
சோரச் சோரச் சொட்டுச் சொட்டாய்க்
கண்ணீர் தூவி நிறைத்து
பொழுதனைத்தும் துயர்பாடல்கள் இரைத்து
எண்ணியெண்ணிக் காத்திருக்கிறாள்

பிரவாகங்கள் சுமந்துவரும் வலிய கற்களும்
ஒலிச் சலனத்தோடு நகர்கையில்
தொன்ம விடியலொன்றில் நதியோடு மிதந்த
இலையொன்றின் பாடல்கள் குறித்துக்
காற்றிடமோ நீரிடமோ குறிப்புகளேதுமில்லை
அவளது தூய காதல் குறித்தும்
அவளைத் தவிர்த்துக்
குறிப்புகளேதுமற்றவளானவளிடம்
ஏதும் கேட்டால்
வெட்கம் பூசிய வதனத்தை
திரையை இழுத்து மூடிக் கொள்கிறாள்
நிரம்பி வழியத் தொடங்கும் கண்களையும்

அவன் போய்விட்டிருந்தான்
அச்சாலையில் எவரும் போய்விடலாம்
மிகுந்த நம்பிக்கைகளைச் சிதைத்து
ஏமாற்றங்களை நினைவுகளில் பரப்பி
துரோகங்களால் போர்த்திவிட்டு
அவனும் போய்விட்டிருந்தான்
அதைப் போல எவரும் போய்விடலாம்
தூய தேவதைகள் மட்டும்
என்றோ போனவனை எண்ணிக்
காத்திருப்பார்கள் என்றென்றும்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


நன்றி
# வல்லினம் - மலேசிய கலை இலக்கிய இதழ் 12- டிசம்பர், 2009
# நவீன விருட்சம்
# திண்ணை

Tuesday, March 2, 2010

தொலைந்த பாதங்களின் சுவடுகளேந்தி...

பார்வைக்குப் புலப்படாப்
பாதங்களைக் கொண்டது
நீருக்குள் அசைந்தது
சிற்பங்களெனக் கண்ட
உயிர்த் தாவரங்கள்
ஒளித்தொகுக்கும் வழியற்று
மூலைகளை அலங்கரித்திட
விட்டுவந்த துணையை
குமிழிகள் செல்லும்
பரப்பெங்கிலும் தேடியது

எல்லாத் திசைகளின் முனைகளிலும்
வாழ்வின் இருளே மீதமிருக்க
காணும் யாரும் உணராவண்ணம்
மூடா விழிகளில் நீர் உகுத்து
அழகுக் கூரை கொண்ட
கண்ணாடிச் சுவர்களிடம்
தன் இருப்பை உணர்த்த
கொத்திக் கொத்தி நகர்ந்திற்று
செம்மஞ்சள் நிற தங்கமீனொன்று
அது நானாகவும் இருக்கக் கூடும்

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# வல்லினம் - மலேசிய கலை இலக்கிய இதழ் 12- டிசம்பர், 2009 
# நவீன விருட்சம்
# திண்ணை


Tuesday, February 23, 2010

பெருநகரப் பூக்கள்

தனித்தனியாகப் பிரிந்துசெல்லும்
பாதைகள் வழியும்
அடர்காட்டுக்குள்ளும்
பூத்துக்கிடக்கின்றன
சில வனாந்தரப்பூக்கள்

வாசத்தைப் பரப்பும்
பூக்களை ரசிக்கவோ
பூசைக்கென்று கொண்டாடவோ
யாருமற்ற வெளியிலும்
இயல்பினை மறக்காமல்
தத்தம் பாதையில் வெகு ஆனந்தமாக
பூத்துக்கொண்டே இருக்கின்றன

இயற்கையின் பன்னீர்த்தூவல்
ஒளிக்கீற்றின் களி நர்த்தனம்
இலை மிகுக்கப் பச்சையங்கள்
வட்டமிட்டபடியே சுற்றிவரும் தேன்குருவி
அனைத்தும் மிகைத்துக் கிடக்க
காட்டுப் பூக்களுக்குக் கவலையேதுமில்லை

ஒளி மறுக்கப்பட்டுக்
குளிர்விக்கப்பட்ட அறையில்
பூ மலர்ந்தபொழுதில்
தொட்டிச் செடிக்கு மனதும் வலித்தது
மூன்றாவதாகப் பிறந்ததும் பெண்ணாம்

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


நன்றி
# அகநாழிகை கலை இலக்கிய இதழ் 01 - அக்டோபர், 2009
# தமிழ் எழுத்தாளர்கள்
# திண்ணை
# வார்ப்பு


Thursday, February 11, 2010

இடர்மழை

நமக்கிடையே வான் தெளித்த
அடர்த்தியான மழையைத் தவிர்த்து
வேறெவருமிருக்கவில்லை
தூறல் வலுத்த கணமது
வீதியின் ஒரு புறத்தில் நீ
இதுவரை கவிழ்ந்திருந்த தலையை
முக்காட்டுக்குள்ளிருந்து நிமிர்த்தி
எதிரே வருமென்னைப் பார்க்கிறாய்

காற்றடித்து வலுத்த மழைக்குத் தப்பியோட
நானிருக்கும்போது நீ முயற்சிக்கவில்லை
உன் நாணத்தை முழுமையாக வழித்தெறியத்
தூறலுக்குத் தெரியவுமில்லை

உன்னிடமோ என்னிடமோ
அந்திவேளையின் மழையை எதிர்பார்த்த
குடைகள் இல்லை
வானிலிருந்து பொழியும் நீர்த்துளிகளைத் தடுக்க
மேனிகளுக்குத் தெரியவுமில்லை

இத்தனைகள் இல்லாதிருந்தும்
ஆண்மையென்ற பலமிருந்து நான்
அருகிலிருந்த என் வீட்டிற்கு ஓடுகிறேன்
காற்சட்டையில் சேறடித்திருக்கக்
கவலையேதுமில்லை
தேய்த்துக் கழுவ அம்மா இருக்கிறாள்
நான் மறையும்வரை காத்திருந்து நீயும்
புத்தகங்களை நெஞ்சில் அணைத்து
பேருந்து நிறுத்தம் நோக்கி
ஓடத்துவங்குகிறாய்

திரைக்காட்சிகளில் வரும்
அழகிய இளம்பெண்களின்
மழை நடனங்கள் பற்றிய கனவுகளோடு
யன்னல் வழியே பார்க்கிறேன் உன்னை

ஆங்காங்கே ஒழுகிவழியும்
பேரூந்து நிறுத்தத்துக்குள்
நீ முழுவதுமாக நனைந்திருக்க
அடிக்கடி பின்னால் திரும்பி
சேற்றோவியம் வரைந்திருந்தவுன்
நீண்ட அங்கியைக் கவலையுடன்
பார்த்தவாறிருக்கிறாய்
தேய்த்துக் கழுவுவது நீயாக இருக்கக்கூடும்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# வடக்குவாசல் - டிசம்பர், 2009
# நவீன விருட்சம்
# தமிழ் எழுத்தாளர்கள்
# கீற்று
# திண்ணை
# வார்ப்பு



Monday, February 1, 2010

அரசியல்

வண்ணத்துப்பூச்சியொன்றின்
ஒரு இறகில் நீயும்
மறு இறகில் நானும் ஏறிக் கொண்டு
உலகம் முழுதும் சுற்றிப்பார்ப்போம்

நான் ஆளும் தேசம் பற்றிய
பஞ்சப்பாட்டுக்களைத் தவிர்த்து
என் பற்றிச் சிலாகித்துப்பாடு
அது நான் செய்யாததாக இருப்பினும்
நிறைந்த நற்செயல்களாலும்
அருள்மிகுந்த கீர்த்திகளாலும் -எனது
நீண்ட ஆயுளுக்கான பிரார்த்தனைகளாலும்
ஆனதாக இருக்கட்டும்

காலம் காலமாகப் பிரிந்தே பயணித்த
இரு சமாந்தரத் தண்டவாளங்களை
சூடாகித் தெறித்துப் பின் காய்ந்து போன
சிவப்புவர்ணத்தைப் பூசி இணைத்தது
தலையற்ற முண்டமொன்று
அது பற்றி உனக்கென்ன கவலை?
வா

வண்ணத்துப்பூச்சி வேண்டாம்
தும்பிக்கு நான்கு சிறகுகளாம்

அதன்
ஒரு இறகில் நீயும்
மறு இறகில் நானும்
மற்ற இரண்டில்
எதிர்த்துக் கேள்விகளெதுவும் கேட்கவிழையாத
மேலுமிரு அப்பாவிக் குடிமகன்களையுமேற்றி
என் புகழ் பாடியபடி
உலகம் முழுதும் சுற்றிப்பார்ப்போம்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


நன்றி
# உன்னதம் இதழ், டிசம்பர் 2009
# திண்ணை

# ஒளி ஓவியம் - நண்பர் ஜீவ்ஸ் ஐயப்பன்

Wednesday, January 20, 2010

நீ விட்டுச் சென்ற மழை




எனது மௌனத்தின் பின்புறத்தில்
ஒளிந்திருந்தன
உனது சலனங்கள் குறித்து எழுதப்பட்ட
கதையொன்றின் மிச்சங்கள்

அதனூடு
இருப்பின் மகிழ்வுகளை எங்கோ
தொலைதூரத்துக்கு ஏகிவிட்டு
தீராப்பளுவாய் வந்தமர்ந்திருக்கிறது
தனிமை

செடி
பூக்களை உதிர்த்து
மழையைச் சூடிக்கொள்கிறது
வழமைபோலவே
மழைக்கு நனைந்த வீட்டை
வெயிலுலர்த்திப் போகிறது
வீழ்ந்த சாரல் போல
நிரம்பி உருண்டையாகி
உடைந்துவிழுகிறது
ஆற்றுப்படுத்தப்படாத
ஒரு விழிநீர்த் துளி

எல்லாமறிந்தும்
ஏதுமறியாய் நீ

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# உயிர் எழுத்து இலக்கிய இதழ் - அக்டோபர், 2009
# நவீன விருட்சம்
# திண்ணை






Monday, January 11, 2010

ஈழம்


ஒவ்வொரு துகளும்
செஞ்சாயம் பூசிக்கொள்ளக்
கடுங்குருதி நில மணலில் ஊர்ந்துறைகிறது

இடையறாப் பேரதிர்வு
நிசப்தங்கள் விழுங்கிடப்
பேச்சற்று மூச்சற்று
நாவுகள் அடங்குகையில்
விழித்தெழாப்பாடலொன்றைக்
கண்டங்கள் தோறும் இசைத்தபடி
அநீதங்கள் நிறைந்த
வாழ்வின் கொடிபிடித்துப்
பேய்கள் உலாவருகின்றன

இருக்கட்டும்
புத்தர் உறங்கும் விகாரைக்கு நீ
வெண்ணலறிப் பூக்களொடி

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை



நன்றி
# உன்னதம் இதழ் - டிசம்பர்,2009



Friday, January 1, 2010

குழந்தைகள்... கோப்பைகள்...

(உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை)

அறைகள் தோறும்
தரை முழுதும்
இரைந்துகிடந்தன கோப்பைகள்
ஊர்வன ஜந்தொன்றைப் போல
வயிற்று மேட்டினால்
ஊர்ந்துவந்த குழந்தை
முதலெடுத்த கோப்பையினை
வாயிலிட்டு நக்கிப் பின்னர்
பிடிக்காத பாண்டமெனத் தூக்கியெறிந்தது
கண்ணாடிச் சன்னலில் பட்டுச்
சிதறியன இரண்டும்
குழந்தைக் காப்பாளி வந்தாள்
சபிக்கப்பட்ட அசுத்த வார்த்தைகளை
எஞ்சிய கோப்பைகளில் நிறைத்துக்
குழந்தை முன் நீட்ட
புது மொழியொன்றினைக் கற்றுக்கொண்டது
காப்பரணில் விடப்பட்ட தூய குழந்தை

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை




Sunday, December 20, 2009

பாவப்பட்ட அது


கடவுள் தந்த பொழுதிலிருந்து
காயங்களெதுவும் கண்டிரா
பரிபூரணத் தூய்மையோடு துடித்திட்ட அது
மழலை வாடையை எங்கும் பரப்பும்
பூக்களை இறுக்கமாகப் பொத்திவைத்திருக்கும்
ஒருநாள் குழந்தையின்
உள்ளங்கையினைப்போலவும்
மொட்டவிழக் காத்திருக்கும்
தாமரையொன்றின் உட்புற இதழைப்போலவும்
மிகவும் மென்மையானது
சில சலனங்களை
பின்விளைவறியாது ஏற்றுப்பின்
கலங்கியது துவண்டது
வாடிச் சோர்ந்தது
ஞாபக அடுக்குகளில்
சேமித்துக் கோர்த்திருந்த
எனதினிய பாடல்களின் மென்பரப்பில்
உன் கால்தடங்களை மிகுந்த
அதிர்வோடு ஆழமாய்ப் பதித்தவேளையில்
ஏமாளியாய் நின்றதைத்தவிர்த்து
வேறென்ன பாவம்தான் செய்தது
வதைக்கவென நீ தேர்ந்தெடுத்த
என் ஒற்றை மனது

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


நன்றி
# வடக்கு வாசல் - செப்டம்பர், 2009 இதழ்
# வல்லினம் - மலேசிய கலை இலக்கிய இதழ் -10, அக்டோபர் 2009






Thursday, December 10, 2009

நிச்சயமாக உனதென்றே சொல்




உன் வரண்ட தொண்டைக்குழிக்கு
தண்ணீரை எடுத்துச் செல்கையில்
ஈரலித்துக்கொள்கிறது
பின்னும்
இரையும் வயிற்றுக்கென நீ
உள்ளே தள்ளிடும்
எல்லாவற்றையும் சுவைத்துப்பார்க்கிறது
எதையும் தனக்கென வைத்துக்கொள்ளாமல்
தானும் உபயோகித்துக்கொண்டு
முழுதாக உனக்கே தருவதென்பது
ஆச்சரியம் தானென்ன

எல்லோரையும் தூற்றியபடியும்
எச்சிலில் குளித்தபடியும்
தினமொரு ஆளைத்தேடி
உன் கண்களால் செவிகளால் வார்த்தைகளால்
அலையுமது
ரோசா வண்ணத்திலல்லது இளஞ்சிவப்பில்
மிகவும் திமிர்பிடித்துக்
கொழுத்துப் போய்க்கிடக்கிறது
அதற்கு மெல்லவென நான் சிக்கியபொழுதில்
மேலண்ணத்துக்கும் கீழண்ணத்துக்குமிடையிலதனைத்
துடிதுடிக்கவைத்து
கட்டற்ற பொய்களை
அவதூறுகளை வசைமொழிகளை
வெளியெங்கும் இறைத்தது
தேளுக்கில்லை
அரவத்துடையது மிகவும்
மெல்லியது, பிளந்தது, கூரியது
இரண்டெனவும் கூறலாமெனினும்
அதனைப் போன்றதல்ல

உன்னுடையது
தீண்டப்பட்ட எல்லா மனங்களையும்
கொல்லும்
கொடிய விஷத்தினைக் கக்கியபடி
வழியெங்கும் தொடரும்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# வல்லினம் - மலேசிய கலை இலக்கிய இதழ் -10, அக்டோபர் 2009
# தமிழ் எழுத்தாளர்கள்
# தினகரன் வாரமஞ்சரி (27.12.2009)




Tuesday, December 1, 2009

பேரன்பின் தேவதை வருகை


பிரபஞ்ச வெளியெங்கும்
சுகந்தம் நிறைக்கும்
அழகிய பூவொன்றை
வசந்தநாளொன்றில் எதிர்கொள்ள
தன்
பரப்பெங்கிலும் பாசம் நிரப்பி
நெடுநாளாகக் காத்திருந்ததோர்
பச்சை இல்லம்

மெதுவாக நகர்கையில்
பெருஞ்சலனத்தில்
சிதறச் செய்த கரும்பாறைகள்
மேலிருந்த சினமோர் யுகமாய்த் தொடர்ந்தும்
தன் பழஞ்சுவடுகளில் நலம் விசாரிக்கும்
எளிய நாணல்களை
மீளவும் காணவந்தது
நீர்த்தாமரை

விரிசல்கள் கண்ட மண்சுவர்
மழையின் சாரலை
தரையெங்கும் விசிறும்
ஓட்டுக் கூரை சிறிய வீடு
தொடரும்
புராதன இருளின் ஆட்சி மறைக்க
தன் கீற்றுக்களைப் பரப்பி
பரிபூரணத்தை எடுத்துவந்தது
பேரன்பின் தேவதை

மெல்லிய வண்ணத்துப் பூச்சியென
பொக்கிஷங்களைச் சுமந்து வந்த தன்
சிறகுகளைச் சிறிதேனும்
இளைப்பாறவிடாமல்
வந்தது என்றுமழியாப் புன்னகையோடு
யாவர்க்கும் மகிழ்வைத் தரும்
மந்திரங்களை உதிர்த்தது
பின்னர்
தவறவிட்ட விலைமதிக்கமுடியாதவொன்றை
தேடிச் செல்வது போல
மிகத் துரிதமாகத் தன் நிலம் நாடி
தொன்ம பயிர்நிலங்கள் தாண்டி
மீண்டும் பறந்தது

ஆத்மாக்களனைத்திற்கும்
இனி வாழப்போதுமான
சுவாசத்தை விட்டுச் சென்ற
அத் தூய காற்றினூடே
அந்தகாரத்தைப் பரப்பி
தைத்திருந்த கருங்குடையை திரும்பவும்
விரித்தது மழை இரவு

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


@ அன்புச் சகோதரி ஃபஹீமா ஜஹானின் வருகை ( 03-11-2009)

நன்றி
# சொல்வனம் இதழ் 13 (27-11-2009)


Monday, November 23, 2009

அவகாசம்


சற்று இடமும், நேரமும் கொடு
எனைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி
இளைப்பாறிக் கொள்கிறேன்

ஒரு பெரும் புதைகுழியிலிருந்து
மீண்டு வந்திருக்கிறேன்
சூழ்ந்தேயிருந்தன
நச்சில் தோய்ந்த நாக்குகளோடு
சீறும் பாம்புகள் பல

கொடும்வெப்பம் உமிழும்
விஷக் காற்றினை மட்டும் சுவாசித்தபடி
மூர்ச்சையுற்றுக் கிடந்ததென் வெளியங்கு
வண்ணத்துப் பூச்சிகள் தொட்டுச் சென்றன
அனல் கக்கும் தணல் கற்றைக்குள்
ஒரு பூப்போல இருந்தேனாம்
சிறகுகள் கருகி அவையும்
செத்துதிரும் முன் இறுதியாகச் சொல்லின

அரசகுமாரனாகிய அவனையேதான்
தன்னலவாதியென்றும் துரோகியென்றும்
சனியனென்றும் சாத்தானென்றும்
பிடாரனென்றும்
பேய் பிசாசுகளின் தலைவனென்றும்
உண்மைகளை உரக்கச் சொல்வேன்
மீளவும் கண்களைக் கட்டிக்
கடத்திப் போகும் வரையில்

அதுவரையில்
உன் கையில் ஆயுதம் ஒதுக்கி
பார்வையில் குரூரம் தவிர்த்து
சற்று இடமும் நேரமும் கொடு
எனைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி
இளைப்பாறிக் கொள்கிறேன்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# உன்னதம் செப்டம்பர், 2009 இதழ்
# உயிர்மை
# திண்ணை