Saturday, December 20, 2008

உன் பற்றிய கவிதைகள்

1.
மஞ்சள் பூக்களைப் பற்றிப் பேசியபடியும்
இலைகளிலிருந்து விழத்துடிக்கும்
மழைத்துளிகளைப் பாடியபடியும்
சாத்தான்களைத் தூதனுப்புமுன்
பாறாங்கல்லிதயத்திலிருந்து
நட்சத்திரமொன்றைத் தள்ளிவிட்டாய்
மனதின் முனையைப் பற்றியபடியது
இல்லாத உன் புகழ்பாடி வீணாகுகையில்
நீர்ப்பரப்பில் நத்தைகள்
நீந்துவதாகச் சொல்கிறாய்
ஓடு பொதுதானெனினும்
நத்தைகள் ஆமைகளாக முடியாது
எல்லாவற்றிலும்

2.
நீ உடைத்த வெளிகளில்
தூளாகிச் சிதறியது மனம்
சாத்தப்பட்ட கதவினைத் தட்டியபடி
கைகளில் விளக்கோடு காத்திருக்கிறாய்
அறை முழுதும் நிரம்பி
எக்காளமிடுகின்றன
உன் பற்றிய என் கவிதைகள்

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Wednesday, December 10, 2008

முடிவிலி

அடர்ந்த இருளின் கரங்களில்
இன்று நிலவில்லை
ஒற்றை நட்சத்திரம்
ஒற்றைப் பூவரசு
ஒற்றைக் கிணறு
தனித்த நான்

இன்னும் பார்வைப்புலத்துக்கெட்டாச்
சில பிசாசுகளும் இருக்கக் கூடும்

நண்ப,
உயிர் பிரியும் வரை வலிகொடுத்த
குருதி கசிந்த ஒரு இரவின் பாடலை
ஒரு குறிப்பாக நீ
எழுதிவைத்திருந்ததைக் கண்ணுற்றேன்

எல்லா எழுத்துக்களையும் மீள எழுதிடும் போது
அவர்களது ஆயுதம் எனை நோக்கியும்
நீளக்கூடும்

ஒற்றைக் கிணற்று நீரில் மிதக்கும்
ஒற்றை நட்சத்திரத்துக்குத் துணையாக
ஒற்றைப் பூவரசும்,
இன்னும் பார்வைப்புலத்துக்கெட்டாப் பிசாசுகளும்
நிச்சலன சாட்சியாய்ப் பார்த்திருக்க
குருதி கசிந்துகொண்டிருக்கும்
ஒரு புதுச் சடலமாக நாளை நானும் மிதப்பேன்

இவர்கள் நம்மை வைத்துக்
கவிகளும் காவியங்களும் படைக்கட்டும்

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.


( யுகமாயினி - டிசம்பர், 2008 இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள கவிதை )

Monday, December 1, 2008

நஞ்சூட்டியவள்

அவன் சோலைகள் பூத்த காலமொன்றில்
ஏகாந்தம் உலவி ஏழிசையும் இசைத்திற்று
காடுலாவி மணம் பூசித்தென்றலும்
கால்தொட்டுக் கெஞ்சிற்று

அப்பொழுதில்
சொல்லொணாப் பிரியத்தினைக் கொண்டு
சேமித்துப்பிதுங்கி வழிந்திடும் மன உண்டியலைப்
பலகாலங்களாகப் பத்திரப்படுத்திவந்தான்
எடுத்துச் செலவழிக்கவோ
எவர்க்கும் தானம் செய்திடவோ
உளமொப்பாமல் ஒரு துணைக்கு மட்டுமே
கொடுத்துக் களித்திடக் காத்திருந்தான்

சூழப் பெருவெளி,ஆழப்பெருங்கடலின்னும்
நீலவானெனப் பார்க்கும் அத்தனையிலும்
அதனையே நினைந்திருந்தான்
இராப்பொழுது தோறும்
விழிசோரும் கணம் தோறும்
முப்பொழுதும் ஒரு துணையே
தப்பாமல் கனாக் கண்டான்

இணையெனச் சொல்லிக் கொண்டு
நீ வந்தாய்
ஏழு வானங்கள், ஏழு கடல்கள்,
ஏழு மலைகளை விடப் பாரிய அன்பை
வழிய வழிய இரு கைகளில் ஏந்தி
உன்னிடம் தந்து பின் பார்த்து நின்றான்
பாழ்நதிக்கரையோரம் இரவுகளில்
கருங்கூந்தல் விரித்து ஓலமாய்ச் சிரிக்கும்
ஒரு பிடாரிக்கு ஒப்பாக
நீ சிரித்தாய் - பின்
அவனது அன்பையும் பிரியங்களையும் அள்ளியெடுத்து
ஊருக்கெல்லாம் விசிறியடித்தாய்

ஒரு கவளம் உணவெடுத்து
அதில் சிறிது நஞ்சூட்டிக்
கதறக் கதற அவன் தொண்டையில்
திணித்திடவெனத்துடித்தாய்
இன்று இடையறாது வீழும்
அவனிரு விழித்துளிகளில் உயிர் பெற்று
உனது ஆனந்தங்கள் தழைக்கட்டும்

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

(அநங்கம் - மலேசியாவின் தீவிர இலக்கிய  இதழில் நவம்பர் மாதம் வெளியான கவிதை )

Tuesday, November 18, 2008

தொடர்பு எல்லைக்கும் அப்பால்...!

தனிமை
ஓர் ஆலமரத்தைப் போலப்
பெருநிழல் தந்துகொண்டிருந்தவேளை
நீயழைத்தாய்

கைபேசியின் கண்ணாடிச்சதுரம்
மின்னி மின்னி உன் பெயருரைத்தது
ஏதோ ஒரு பாடலின் இசையை
நினைவுருத்திச் சோரும் தருணம்
மனச்சலனங்களேதுமற்று
உன் குரலை அனுமதித்தேன்

மிகுந்த ஆதூரமும் அன்பும் வழியும் குரலில்
எப்படியிருக்கிறாய் அன்பேயென்றாய்

உன்னையும்
தனிமையெனும் பெரும்பட்சி
கொத்திக் கொண்டிருந்தவேளையது
உன் சதையில் வலிக்கத் தொடங்கிய கணம்
என் நினைவு கிளர்ந்திருக்க வேண்டும்

இந்தத் தனிமையும் பேய்ப் பொறுமையும்
நீ தந்து சென்றதுதானே
நான் பதிலுரைக்க
என்ன எஞ்சியிருக்கிறதின்னும்

இப்போதைய
எனதெழுத்துக்கள் மட்டும் பாவம்
என் துயரத்தின் சுமைகளைச்
சுமந்தவாறு நாற்திசைகளிலும்
அலைந்து கொண்டேயிருக்கின்றன

எழுத்துக்களும் சோரும் காலம்,
உன் தொடர்பு எல்லைக்குமப்பால்
பாலைநிலம் தாண்டி- எனதான தேசம்
பாதங்களைச் சேர்க்குமென்
தூய இல்லத்தில் நானிருப்பேன்

அன்றுன் குளிர்காய்தலுக்கும்
தவிக்கும் தாகத்திற்கும்
ஆதியின் மூலமறுக்கும்
அத்தனை சந்தோஷங்களுக்கும்
என்ன செய்யப் போகிறாய்

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Saturday, November 1, 2008

கூழாங்கற் சினேகங்கள்

நீர்ச்சலனத்திற்கு ஏதுவான
ஒரு கூழாங்கல்லைப் போல
உருண்டு திரண்டு
பொலிவாகிவிட்டது இதயம்

திரவப்பரப்பினைத் தொட்டகலும்
நாணல்களுக்குத் தெரிந்திருக்கலாம்
அதிலொரு சிறு சிற்பம் வடிக்கும்
நோக்குடன் நீ வருகிறாயென

நீர் மாறி, நிறம் மாறி
சிற்பமாகலாம் இவ்விதயம் - அன்றி
சிதறியும் போய்விடலாம்

உனக்கென்ன
ஏராளமான கூழாங்கற்கள் உன் பார்வைக்கு
சில்லுச் சில்லாய்ச் சிதறிப்போவது
மென்னிதயங்கள் மட்டும் தான்...!

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Wednesday, October 15, 2008

மாய ஒளிசிதறும் திசை நோக்கிய பயணம்

அவளது பிரயாணத்தின் குறுக்கீடான
அகன்ற வாயிலைத் திறந்தபோது
சுவாசத்திலடித்தது சாத்தானின் வாடை

வேட்டை நாயொன்றைப் போலவந்து
சதைகள் கவ்வமுயன்ற பொழுது
வேடிக்கை காட்டித்
தப்பிக்கத் தெரியவில்லை அவளுக்கு
தூக்கிப் போட்டு இரை நோக்கவைக்க
இறைச்சித் துண்டுகளும் கைவசம் இல்லை
அவளுடல் பாகங்கள் குறித்தே
சாத்தானுக்குக் குறியிருந்தது

சூழச் சூழ வந்து அவளைத்
தொட்டணைத்துத் தன்
பற்தடங்களைப் பதிக்கமுயன்றகணம்
தேவதூதனொருவனின் மெல்லிறகுக் காற்று
இருவருக்குமிடையே ஓர் அணையை எழுப்பிற்று
மாயக்கரமொன்று அவளதிர்ந்த நெஞ்சை
ஆறுதல்படுத்தி விழிநீர் துடைத்திற்று

கீறல்கள் மட்டும் சுமந்து
எப்படியோ சாத்தானைக் கூண்டொன்றிலடைத்திட்டாள்
எம்பி எம்பியது அவளிடம் வர
முயற்சித்தபடியேயிருக்க
அவளது பயணம் தேவதூதனை நோக்கித்
திசைமாறிற்று

இன்று
தூரத்து ஒளியொன்று பார்வையில் இடறிட
நெடுஞ்சோலைகள் தாண்டிப்
பசும்வெளிகள் தாண்டி
வற்றாத அழகிய நீர்வீழ்ச்சிகள் தாண்டி
நிலவற்ற நடுநிசிகளில் கூட
அவனது மெல்லிறகுகள் கொண்ட
அருட்கரங்களைத் தேடியே
அவள் பாதங்கள் தொலைந்தபடியிருக்க

அணையெழுப்பிய மெல்லிறகுக் காற்றே
நீயறியாயோ வெந்துருகும் அவள் சுடுமூச்சை ?
விழிநீரழித்த மாயக்கரமே
நீயறியாயோ பிரவகிக்கும்
அவள் துயரங்களின் மூர்க்கத்தை ?

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Wednesday, October 1, 2008

பசித்தலையும் சுயம்

நான் பசியிலிருக்கிறேன்
எந்தத் துதிபாடல்களும்
என் பசியினை ஆற்றா.

உனக்குத் தெரிந்த கல்நெஞ்சுக்காரன் நீ
எனது கூடாரங்களில் விளக்கெரித்தாய்
தீப்பற்றியது எனதெளிய இருப்பிடம்
சற்று நகர் - அனல் தெறிக்கும்
என் கண்களிலிருந்தும்

வாகை சூழ்ந்த பார்வை
வஞ்சனை சூழ்ந்த நெஞ்சு
நெஞ்சின் மேலொரு மழலை
யார் கண்டது
நாளை அதுவுமுனக்கு இரையாகலாம்
இப்பொழுதைப் போல அப்பொழுதும்
அப்பாவியாக நடித்தபடியிருப்பாய்

ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொன்றாயுனக்கு
ஆயிரத்தெட்டுப் பெயர்கள்
அதிலொன்றைத்தான் - என்னை
உருகி உருகி அழைக்கவைத்தாய்
எனதுருக்கத்தில் எனதிரக்கத்தில்
கானகங்கள் பூத்திருக்கும்
வானம் சடாரெனப் பொழிந்திருக்கும்
தேசாந்திரிகளைத் தேடிப் பாசங்கள் நகர்ந்திருக்கும்

கபடங்களைச் சுற்றிச் சுற்றி இப்பொழுது
யாருக்கெல்லாம் பகிர்ந்தபடியிருக்கின்றாய் ?
உன் மிதியடியாக மட்டும்
என் பூக்களை விரித்திருக்கிறாய்

நான் பசியிலிருக்கிறேன்
பூக்களை இழந்த செடியின் மௌனத்தோடு
உனது அல்லது உன்னைப்பற்றிய
எந்தத் துதிபாடல்களும்
என் பசியினை ஆற்றாப் பொழுதொன்றில்

ஆமாம்
தனித்திருக்கிறேன்..!

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Saturday, September 20, 2008

என் நேசத்துக்குரிய எதிரிக்கு...!


ஒரு கோதுக்குள்
என் மௌனத்தைக் கருக்கொண்டுள்ளேன்
அதனை ஓட்டையிட்டு
வார்த்தைகளை உறிஞ்சத் துடிக்கிறாய்

மூங்கிலைத் துளையிட்டாய்
புல்லாங்குழலாகினேன்
வேரினைக் குழிதோண்டிப் புதைத்தாய்
பெருவிருட்சமானேன்
கையிலேந்திய மழைத்துளிகளை விசிறியடித்தாய்
ஓடையாய் நதியாய்க் கடலாய்ப் பெருக்கெடுத்தேன்

இவ்வாறாக
எனக்கெதிரான உனதொவ்வொரு அசைவிற்கும்
விஸ்வரூபம் எடுத்துத் தொலைக்கிறேன்
அதிர்ச்சியில் அகலத்திறந்தவுன் வாயினை
முதலில் மூடுவாயாக !

இந்த வெற்றிகளை எனக்குச் சூடத் தந்தது
என் நேசத்துக்குரிய எதிரியான
நீயன்றி வேறெவர் ?

ஆனாலும் எனை என்ன செய்யச் சொல்கிறாய் ?
அமைதி தவழும் ஒரு மரணத்தைப்போல
அழகிய மௌனத்துடன் நானிருக்கிறேன்
பூச்சொறிவதாய்ச் சொல்லி
எதையெதையோ வாரியிறைக்கிறாய்
நான் தவம் கலைக்கவேண்டுமா என்ன ?

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Wednesday, September 10, 2008

ஒரு தற்கொலைக் குறிப்பு !

துரோகத்தைப் போர்த்தி வந்தது
பொய்யானதொரு நேசம்,
அதனிசை மிகப் பிடித்தமானதாகவும்,
சாத்தியப்படாச் சுவைகளைப் பூசி வந்ததாகவும்
இருந்ததைக் கவனித்தபோதே
சுதாகரித்திருக்க வேண்டும் !

நீர்வீழ்ச்சிக்குள் தூண்டிலிட்டுக் காத்திருந்த
மடத்தனத்தை என்சொல்ல ?
நேசங்களின் மையப்புள்ளி
தொலைபேசித் துளைகள் வழியே கசிந்திட,
இணையமும் வாழ்க்கையும்
பேருவகையைத் தருவதாகத் தோன்றிட
எல்லைகளுக்குள்ளேயே சுழலச் செய்தது காலம் !

வார்த்தைகளால்
பார்த்துப் பார்த்துக் கட்டிய
அன்பின் மாளிகையை உடைக்க
கலவரத்தைக் காலத்தின் கரங்கள்
பொத்திவந்தன ;
ஒரு நெஞ்சம் ஏமாந்து நின்றநேரம்
பிளந்து உள்ளே எறிந்திட்டன !

மறு நெஞ்சம் சிரித்தவாறே
அதனைப்பார்த்து ரசித்திருந்தது
சிரித்த அதன் பற்களிடையே
முன்பு தின்றொழித்த நெஞ்சங்களின்
சதைத்துணுக்குகள் எஞ்சியிருந்தன !

செத்துப்போகிறேன் ;
நாளைய உதடுகளில் நல்லதாகவோ தீயதாகவோ
என் பெயர் உச்சரிக்கப்படக் கூடும்..
உடலைப் புதைகுழி
முற்றாகத் தின்றுமுடித்ததன் பிற்பாடு
அதுவும் மறக்கடிக்கப்படலாம் !

இனிமேலும்,
துரோகத்தைப் போர்த்திப்
பொய்யானதொரு நேசம் வரும்பொழுதின்
இசையில் மயங்காமலும்,
அதன் சுவைகளில் உறையாமலும்
கவனமாக இருப்பீராக !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Monday, September 1, 2008

கனவு முகங்களில் தொலையும் இரவு !

வெள்ளைப் பூனையின் மென்மயிரென
இலகுவாக உதிர்ந்துவிடுகிறதா என்ன
என் நிராசைக் கனவுகளின் நீட்சி ?

ஒரு சவத்தைப் பின்பற்றுகின்றது
என் பாதங்களின் அடிச்சுவடு ;
பின்னால் வருகின்றாயென்பதை
உணர்ந்து நடந்து மண்டியிட்டு
பிணத்துக்காகப் பிரார்த்திக்கையில்
சவப்பெட்டியில் படுத்திருப்பதுவும்
நீதானெனக் கண்டதிர்ந்து
துயில் கலைகிறேன் !

கனவுகளுக்குள்ளான போலிமுகத்தின்
புருவத் தீற்றலைக் கண்டறியும்
சாஸ்திரங்களைக் கற்றவனல்ல நான் ;
எனவே சொல்...
பிணத்தின் முகம்தனை
எவ்வாறு சூடிக் கொண்டாய் ?
உடலசையா உறக்கத்தினை
எங்கிருந்து கற்றறிந்தாய் ?

உனது நினைவுகளைச் சேர்த்துக்
கொழுவி வைத்திருக்கிறேன்,
ஒவ்வொரு கண முகங்களிலும்
வித்தியாசமாகவே தெரிகிறாய் !

கண்ணாடி விம்பம்தனில்
கண்ணீர் மிதந்திருக்கும்
இரு விழிகளைக் காண்கிறேன் ;
நிராதரவாகிப் போன
நந்தவனத்து மான்குட்டியொன்றின்
மருண்ட பார்வைகளைத் தாங்கிக்
கண்ணீர் மிதந்திருக்கும்
இரு விழிகளைக் காண்கிறேன் !

அந்த விழிகளை மூடித் துயிலுறுமிரவினில்
இன்றெந்த முகத்தைத் தாங்கிக்
கனவினில் வருவாயோ ?

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Friday, August 15, 2008

புதைகுழி வீடு !

அத்திவாரத்தை
வெடிபொருட்களால் நிரப்பி
அது இறுகிச் சேர்ந்திட
மனிதக் குருதி சேர்த்து
நெருப்புக்களால் ஆன
வீடொன்று கட்டு உனக்கு.
பேய்களே அதற்குக் காவலிருக்கட்டும் !

முன்பு புதைத்த
சவங்களைத் தோண்டியெடுத்து
அதன் எலும்புகளால் சில யன்னல்களும் வை.
இரவானாலும் - எந்த
இருளானாலும்
அவை மூடப்படாமலே கிடக்கட்டும் ;
அனல்காற்றும்,
அரைவேக்காட்டுப் பிணவாடையும்
மட்டுமே சுமந்தது உள்ளே வரட்டும் !

உருகிச் சிவந்து சூடு சுமக்கும்
தட்டை இரும்பினாலோர்
ஒற்றைக் கதவு வை.
வெப்பத்திறவுகோலால்
சாத்தான்களுக்கு மட்டுமதனைத்
திறந்து வழிவிட்டு நகர் !

பிணக்கால்களின் மூட்டுக்கள் கொண்டு
உன் சிம்மாசனம் அமையட்டும்,
மண்டையிலடித்துக் கொன்றொழித்த
பெண்களின் முத்துப் பற்களை
அழகுக்காகப் பதி ;
சிறு மழலையின் மண்டையோடு
செங்கோலின் கைப்பிடியை அலங்கரிக்கட்டும் !

இளம்பெண்களின் அலறலும்,
குழந்தைகளின் அழுகையும்,
மனிதர்களின் ஓலமும்
துயர் சுமந்த ஒப்பாரிகளும்
உன் வீட்டை இசையாக
நிரப்பட்டும் !

விருந்தினர் வருகையில்-கொதிக்கும்
விஷபானம் குடிக்கக் கொடு ;
அவர்கள் தொண்டை வழியே உருகிவழிகையில்
உன் வீரவாள் கொண்டு
வெட்டிக் கறி சமை !

அவர்கள் கண்களைத் தோண்டி-அதில்
ஆயிரம் அலங்காரம் பண்ணி,
நாக்குகளை அறுத்துத் துணைக்குத்
தொட்டுக் கொள்ளவை !

உன் பசி தீர்ந்ததா?
இப்பொழுது சொல்.
நான் சொன்னபடி கட்டிய
உன் வீட்டுக்கும்
என் தாய்தேசத்துக்கும்
என்ன வித்தியாசம் இன்று?

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.


இணைய வானொலியில் ஒலிபரப்பான இக்கவிதையை பிரபல அறிவிப்பாளர் அப்துல் ஜப்பார் அவர்களது குரலில் கேட்க...

rishan.mp3 -

Friday, August 1, 2008

நேசத்தை விழிநீரில் அழித்து...!


வீடு முழுவதிற்குமான
மகிழ்ச்சியின் ஆரவாரத்தினை
ஒரு புகைப்படம் கொண்டுவந்தது ;
இதைப் போலப்
பேருவகையொன்றைத் தவிர்த்து
நிராகரிப்பின் பெருவலியை
அவள் அவனுக்குத் தரவிரும்பவில்லை !

அவளது வீடு வளர்கிறதா என்ன ?
அவனது காதலை ஏற்க மறுத்து
உள்ளுக்குள் புதைந்து
மனம் குறுகி நின்றவேளை
குறுகுறுப்பாகப் பார்த்து
குறுகிச் சிறுத்த அதே வீடு - இன்று
சொந்தங்களின் கிண்டல்களுக்குத்
துள்ளிக்குதித்து ஓடும் போதெல்லாம்
இத்தனை காலமும்
ஒளித்து வைத்திருந்த
நீண்ட புதுப்புதுப் பாதைகளை
அகன்று விரிக்கிறது !

சாஸ்திரங்கள்,சம்பிரதாயங்கள்,
வீட்டிற்கான பழம்பெரும் கலாச்சாரங்கள்
அவளது கரம்பிடித்து
இறுக்க நெருக்குகையில்,
வெட்கத்தைப் போர்த்திய சாலைவழியே
அவனது காதலைப் பாடிச்செல்வாளென
அவனெப்படி எண்ணலாம் ?

சமுத்திரங்கள் பிரித்த
பெருங்கண்டங்களிரண்டில்
நீந்தத் தெரியாமல் அவன்களும்
நீர் வற்றுமென அவள்களும்
பார்த்தவாறு காத்திருக்கையில் ,
காதலும் , நேசங்களும்
அவன்களுக்குள்ளேயே
புதையுண்டு போகட்டும் - அவ்வாறே
அவள்களது நிலவெரிந்த
நடுநிசிகள் கண்ணீரால் நனையட்டும் !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Tuesday, July 15, 2008

உன்னைப் புலம்பும் எனது பாடல் !


அதுவொரு பெருமழைக்காலம் !
வனாந்தரங்களின் பசுமையை,
பனிக்கால நீரோடைகளின் குளிர்ச்சியை,
பூஞ்சோலைகளின் பேரழகை,
ஆலப்பெரு மரங்களின் நிழல்களை
அவள் கொண்டிருந்ததாக
நீ எண்ணி எண்ணித் திளைத்த காலம் !

ஒரு துர்தேவதையின் பாடல்கள் மட்டுமுன்
செவிகளை நிரப்பிய காலம் ,
அவளுக்கான சாபங்களனைத்தும்
உன்னைப் பீடித்தலையத்
தருணம் பார்த்துக் காத்திருந்த காலம் ;
அத்தனையையும் அறியாது - நீ
அவளுக்கு நேசனானாய் !

அவளது அழகிய மாயநதியில்
நீ மூழ்கிச் சுவாசம் மறந்தாய் ;
உன் இமைகளைப் பிடுங்கி
அது கொண்டவளை
ஓவியங்கள் வரைந்திட்டாய் !

அவளது ஆன்மாவின் சலனங்கள்
நாணத்தைத் தொலைத்தன,
பாதங்களை முக்காடுகள்
போர்த்திக் கொண்டன ;
அன்றுதான் நண்பனே - நீ
பைத்தியமானாய் !
பறவையொன்று சத்தமிட்டுச் சிரித்ததென
அவள் சொல்லிப் போனாலும்
நம்பிப் புருவமுயர்த்தி ரசித்து மகிழ்ந்தாய் !

முகவரியற்ற சுவர்களையுன்
இருப்பிடமாக்கிக் காலம் பார்த்தது ;
அவளது காலடிச் சுவடுகளிலுன்
உயிரினைத் தேடிய நீ
காலத்தைப் பார்க்கமறந்திட்டாய் !

அந்தக் காலம்தான்
உன்னைக் கல்லறையிலும்,
அவளை மணவறையிலும்
இருத்தி அழகுபார்க்கிறதின்று !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Tuesday, July 1, 2008

எரிக்கிறாய் ; எரிகிறேன் !


எனதுயிருருக்கும் பாடலைப்
பின்பற்றி வந்த உன் நேசம்
எனக்கென்றிருந்த
ஒரேயொரு கேடயத்தையும்
மூலைக்கொன்றாக உடைத்துப் போட்டதில்
வருத்தம்தான் எனக்கு..!

ஆதியின் மூலங்களறுத்து,
சார்ந்திருந்த அரண்களையுடைத்து
உனை நம்பி வந்த நான்
காணும் எல்லாவற்றிலும்
நீ மட்டுமே
காட்சிப் பொருளாக வேண்டுமென்கிறாய்

நட்சத்திரங்களை எனக்காக
வளைப்பதாகச் சொன்ன நீ
எனதழகு மின்னிடும் பொழுதுகளில்
பீதியுடன் முறைக்கிறாய்
எனது குரல்வளையினை நெரித்து
உனது நிம்மதிக்கான
பிரார்த்தனை கீதங்களைப்
பாடச் சொல்கிறாய்

என் நெற்றியில் தொடங்கியுன்
கூராயுதங்கள் கீறுகின்றன,
உயிருருகி வழியும் குருதியில்
தாகம் தணித்துக்கொள்கிறாய்
என் உயிரின் மூலங்களை
உன் வார்த்தைகளால் வேரறுக்கிறாய்
என் வாழ்வின் தீர்ப்பினை
இவ்வாறு நீயே எழுதுகிறாய் !

சிம்மாசனங்கள் வேண்டவில்லை
செங்கோலையும் தீண்டவில்லை
ஆட்சிகள்,ஆகிருதிகள் அத்தனையும்
உன்னுடையதாகவே இருக்கட்டும் ;
நானென்ன கேட்கிறேன் ?
பறவையின் உதிர்ந்த சிறு இறகினைப் போல
எடைகளற்றுத்தானே
இருக்கின்றன என் தேவைகள் !

இறுதியாக,
வாழ்வுக்கு ஒளியூட்டுவதாகச் சொல்லி
என் நெஞ்சின் ஓரத்தில்
தீச்சுடரை வைத்து - அது
பற்றி எரியும் போதினில் குளிர்காய்கிறாய்.
பரவாயில்லை.
உனது சந்தோஷங்களுக்காக நானெரிகிறேன்.
இப்படியே விட்டுவிடலாமென்னை !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Sunday, June 15, 2008

துயர் துடைக்கும் விரல்கள் கொடு !


இறகுகளற்ற தேவதையவள்;
அள்ளிச் சூடும் ஆபரணங்களோ,
அலங்கார வார்த்தைகளோ,
தனித்த பூஞ்சோலையொன்றின் புல்வெளியில்
மீட்டப்படும் மெல்லிசையொன்றோ
அவளெழிலில் தோற்றுத்தான் போகும் !
ஆனால்...

அவள் பிரசவித்த விழிநீரே
துளித்துளியாய்ச் சேர்ந்து,
நாணல்கள் வளைத்துக் கரையுடைத்து,
அவளுக்கான எல்லைகளுடைத்து
அலையாய்,நதியாய்ப் பெருக்கெடுக்க
மீண்டும் மீண்டும்
சாட்டையாலடித்து வதை செய்யவென்றே
நாற்திசைகளிலும் காத்திருக்கிறது
சாத்தான்களுக்குப் பிறந்த கூட்டமொன்று !

தனிமையின் கொடுவாய்க்குள்
தன்னைத் தின்னக் கொடுத்துவிட்டு
காயங்களைப் போர்த்தி
ஆகாயம் பார்த்தபடி நடுநடுங்கி நிற்குமவளைக்
கொண்டு போ ராசகுமாரனே
அந்த மலைகளைத் தாண்டி...!

மாய உலகின் கரங்களை விலக்கி
மரங்களுக்கும் அதனுடனான தென்றலுக்கும்
தூதனுப்புகிறேன்
தூய பனிபடர்ந்த தேசமொன்றின்
குளிர்ந்த சோலைகளின்
அழகிய பெருவாழ்வை
அவளுக்குத் தருவாய்தானே நீ ?!

சாபங்கள் சூழ்ந்த
அவளது துயர வாழ்வைப் பாடுவதால்
ஆகப்போவது ஏதுமில்லையெனக்
கூறுபவர்கள் முன்னால் வரலாம் !

அலறல் மட்டுமே சுமக்கும் அவளது இசை
காற்றுடன் கலந்து போயொரு நாள்
சூரியனை விழுங்கிவிடும்,
நிலமிருட்டிப் பாதம் உதைக்க
எரிமலைகள் வெடித்துப் பிளக்கும்
நாளது வெகுதொலைவிலில்லையென்ற
அச்சத்தில் நடுநடுங்கியே
நானிதனை எழுதுகிறேன் !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Sunday, June 1, 2008

என்னைத் தொலைத்த நான்...!


யுத்தப் பெருவெளியொன்றின்
விஷக்காற்றினைச் சுவாசித்தபடி
பேருவகை ஏதுமற்ற வாழ்வின்
கடைசிச் சொட்டில் உயிர் வழிய
காற்றின் துவாரங்களெங்கிலும்
ஒழுகும் எனது பாடல்கள்
துயரத்தைச் சோர்கின்றன !

எனது கழுத்தை நெரிக்க
நீளும் கைகள்
எனது நண்பனுடையதாக இருக்கின்றன,
எனது சுவாசம் பறித்துக்
காறியுமிழும் வாயும் அவனுக்கிருக்கிறது,
சுயநலத்தின் உள்ளங்கை
அவன் தலைதடவி
எனை நோக்கி அனுப்பியிருக்கிறது
அவன் உறிஞ்சி விழுங்கிச் சிரிக்கும்படியாகவே
என் உயிரும் நிரம்பி
வழிந்து கொண்டிருக்கிறது இப்போது !

ஒரு காலம் இருந்தது,
அன்று நாம் அழகாயிருந்தோம்,
இனிமையான பாடல்களும்,
தென்றலும்,வாசனையும்
எம்மைச் சூழ்ந்திருந்தது
எந்தவித அச்சங்களுமற்று
கனவுகளின் நீள்பாதை நீண்டுகிடக்க
மின்னலைப் பேசிய வானத்தின் கீழ்
நானுமவனும் மட்டும்
நடைபயின்று களிப்புற்றோம் !

ஒன்றான ரசனை எமை இணைத்த
நாட்களின் முடிவில்
ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவனானான்
அப்பொழுதுதான் முதன்முதலாக
அவன் ஆயுதம் எனை நோக்கி நீண்டது !

நட்பின் இறுதிச் சொட்டு
நயவஞ்சகத்தைக் கோர்த்துவந்தது,
எனைக் கொல்லத் தேடிவந்தது தெரியாமல்
என் தாய் அவனுக்கு உணவிட்டாள் !

எந்தச் சூனியமுன்னை இடறச் செய்தது?
எந்தக் கணத்தில்
சுவடழிக்கப்பட வேண்டியவனானேன்?
எந்தக் கூர்நகங்கள் கொண்ட கரங்கள்
உனக்கந்தக் கொலைக்கருவிகளை
எனை நோக்கி நீளச்செய்தன ?
எதற்காக நானன்று ஓடினேன் ?

ஓடிச் சோர்ந்து,தவித்து,நின்று
பாலைநிலமது
பாதங்களை விழுங்கிக்கொள்ள,
உயிர் வழியும் இறுதிச் சொட்டில்
என்னையே தொலைத்த
நானாகி நிற்கிறேன் பார்..!

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை
.

Thursday, May 15, 2008

ஒரு தேவதையும் சில சாத்தான்களும்..!


எந்த ஆரூடங்களாலும்
ஊகிக்கவே முடியாத
திடுக்கிடும் துயரங்களுடனானவொரு
காலத்தை நீ கொண்டிருக்கிறாய் !

இதிகாசத்திலிருந்து நீ வாழ்ந்துவரும்
புராதனக் குடியிலிருப்பிலின்னும்
பூதங்களின் ஆட்சி தொடர்வதை - நீ
சொல்லிச் சொல்லியழுத வேளை,
எதைக் கொண்டும் அணைக்கமுடியாத
சினக் கனலொன்று என்னுள்
மூண்டு பொங்கிப் பிரவகித்திற்று !

உனது விரல்கள் வடிக்கும்
உக்கிர ஓவியங்களைப்
பார்த்து,ரசித்து - உன்னை
உச்சத்தில் வைத்திடக் காலம்
பலபேரைக் கொண்டிருக்கையில் ;

எந்தச் சத்தியங்கள்
சகதிக்குள் புதைந்தனவோ...
எந்த வீரப்பிரதாபங்கள்
வெட்டவெளியிலலைந்தனவோ...
எந்த சுபவேளை கீதங்கள்
ஒப்பாரிகளாக மாறினவோ...
எந்தப் பிசாசுகள் உன்னில்
விலங்கு பூட்டிச் சிரித்தனவோ...
அத்தனையும் இன்னுமேன்
உன் நினைவுக்குள் இடறவேண்டும் ?

உன் விழி துடைக்க - பிற
தேவ தூதர்களின் சிறகுகளிலிருந்து
ஒற்றை இறகாவது நீளும் ;
உன்னை உறங்கச் செய்யும்
மந்திர வித்தையொன்றைக்
காற்றும் ஒருநாள் ஏகும் !

நம்பு !
அன்றைய தினமதில்
பூதங்களும் அவற்றின் அடிமைகளும்
பேரதிர்ச்சியில் பார்த்துநிற்க
சவால்களனைத்தையும் விழுங்கி
உன் மேனி சிலிர்த்து
ஆதிகாலந்தொட்டு வரும்
அத்தனை காயங்களையும்
ஒரு கணத்தில் உதறுவாய் !

வீழும் வலியனைத்தும் படபடத்துச்
செத்துமடியும் - பிசாசுகளின்
எல்லை தாண்டிப் பறந்த உன்னை
நண்பர்களின் உலகம்
கைகோர்த்து வரவேற்கும்
அப்பிரகாச நாளில்
என்னை மறந்திடுவாயா சினேகிதி?

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Thursday, May 1, 2008

எனக்கே எனக்கானதாக மட்டும்..!


உடைந்த வானத்தின் கீழ்
நிலவு சலித்தனுப்பிய
வெளிச்சத்தினூடு,
உறுதியற்ற தேசத்தினொரு மூலையில்
உடையாத வெட்கத்தை
உறுதியான இறகுகளால் போர்த்தியபடி
முன் காலமொன்றில்
அழகிய வண்ணத்துப்பூச்சிகள் சூழ
தேவதையாக நான் நின்றிருந்தேன் !

வேட்டைக்காரனாக நீ வந்தாய் ;
என்னையும்,வெட்கத்தையும்
மூடியிருந்த சிறகதனைக்
கத்தரித்துக் காதில் சொன்னாய்-இனிக்
காலம் முழுதும்
உன் சிறகுகள் மட்டுமே
போதுமெனைச் சுமக்கவென
அழகிய வாக்குறுதிகள் தந்தாய் !

அன்றிலிருந்துதான்
உனது வலிமை மேலோங்கிய
வேட்டைக்கரங்கள்,
எனது சுவாசங்களையும்
சிறிதுசிறிதாகக் கொடுக்கத்தொடங்கின !

எனக்குப் பல்முளைத்த அன்றின் இரவில்
தனியாக மெல்ல முடியுமினியென்றேன்,
உனது அத்தனை அகோரங்களும்
ஒன்றாய்ச் சேர்ந்து
அன்றுதான் என் உதடுகளைத்
தைக்க ஆரம்பித்தாய் !

எழுதவேண்டுமென்ற பொழுதில்
பேனாமுனை ஒடித்துச் சிரித்தாய்,
வரைவதற்கான வண்ணங்களைக்
கலந்த விரல்களை
வளைத்துச் சிதைத்தாய்,
பாடலுக்கான எண்ணமெழும் முன்னமே
நானூமை என
சொல்லிச் சொல்லி ரசித்தாய் !

இனிக் காலங்கள்
எனக்கே எனக்கானதாக மட்டும் இருக்கட்டும் !

இந்த வெடிப்புற்று வரண்டு,
கதிர்களேதுமற்ற வயல்வெளியில்
நேற்றிலிருந்து புதிதாக முளைக்க
ஆரம்பித்திருக்கும் பற்களால்
என் தீய கனவுகளை மென்று விழுங்கியபடி,
உச்சரிப்புப் பிழைகளோ,சுருதி விலகலோ
சுட்டிக்காட்ட யாருமின்றி...

ஒரு பக்கம் எனது கவிதைகள்,
மறு பக்கம் எனது வண்ணங்கள்
எனத் துணையாய்க் கொண்டு
பாடிக்கொண்டிருக்கிறேன் ;

ஆனாலும்,
என்னை விதவையென்கிறீர்கள் நீங்கள் !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Tuesday, April 15, 2008

காதலென்றும் தலைப்பிடலாமிதற்கு !


நெருப்பு விழுங்கும் பறவையொன்றென்
நிழலிலேயே
உட்கார்ந்திருக்கிறது !

உங்கள் கனல்களை
அதன்மேல் கொட்டலாம்,
சாபங்களை அள்ளியெறியலாம் ;
அத்தனையையும் விழுங்கியது - நிலம்
அதிர அதிரச் சிரிக்கும் !

அதன் அருகாமை
வெப்பம் பரவியென் உடலசையுமெனில்
ஒருகணம் உற்றுப்பார்க்கும்,
விழிகளிரண்டும் எரிகற்களென எச்சரிக்கும்
நொடியில் நான் பொசுங்கிப்போவேன் !

சீண்டிப்பார்க்கலாம் - அதனை
சிரிக்கவைக்கவும் முயற்சிக்கலாம்,
தலைகோதித் தடவலாம்,
செல்லமாய்ச் சிறிது தட்டக்கூடச் செய்யலாம்;
அத்தனையையும்
மெதுவாய்ப் பார்த்து வாய்திறந்து
உங்களை முழுதாக உள்வாங்கிக் கொள்ளும் !

நுனிவிரல் தீண்டி
உடல்முழுதும் பொசுங்கிக் கருகும்
வேதனையை சிரிப்பால் உதறுவீர்களாயின்...

இதுவரையில் காதலிக்காதவர் பட்டியலில்
நீங்கள் இருப்பதாக
உறுதிபட உரக்கச் சொல்வேன் !

நெருப்பு விழுங்கும் பறவையது
தொடர்ந்தும் தன் சிறகினை உதறும் !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Tuesday, April 1, 2008

பால்யம் நகரும் பொழுதை மிதி !


ஆலயங்களின் பெரும்பரப்பில்
அமைதி தேடிப் பாதங்கள் பதியும்
நாட்கள் நினைவில் இடற
ஒரு மலை போன்ற வேதனை,
ஒரு வனாந்தரப்பசுமை
அத்தனையும்
ஒருங்கே கொண்ட நெஞ்சுடன்
கனவாய்க் காற்றாய்
வாழ்க்கை தொலைத்தேன் ;
யாதுமாகி நின்ற உன்னையும்தான் !

பால்யத்துப் பள்ளிக்கூடங்களில்
ஒன்றாய்த் திரிந்தோம் ;
கூழாங்கற்கள்,ஓட்டுத் துண்டுகளைக்
கையால்,காலால் விளையாடிச் சோர்ந்துபின்
காட்டு இலைகளையும்,மணலையும்
சிரட்டையில் அள்ளிச் சோறாயெண்ணி உண்டோம் !

என் முழங்கால்ச் சிராய்ப்புக்கு
உன் எச்சில் தடவினாய்,
எவனோ உன் பட்டப்பெயர் சொல்லிக்கூவ
அவன் சட்டை கிழித்துச் சண்டை பிடித்தேன்
காதலில்லை,காமமில்லை
அறுவெறுக்கும் எந்த அசிங்கங்களும்
அதிலிருக்கவில்லை !

புது வயதுகள் பிறக்க,
பால்யம் பாதி கரைய,
வசந்தங்கள் உன் வாழ்வில் வர
நான் தனித்து வரண்டுபோனேன் ;
என் இரகசியச் சினங்களைத்
தூறலாய்ப்பொறுத்து
முக்காட்டுக்குள் நீ புகுந்தாய்,
நான் யாதாகித் திரிகிறேன்...?

நாடுதாண்டிக் கண்டம் தாண்டி,
செவியேற்க யாருமற்ற
பாழ்வீதியொன்றில்- நானின்று
நின்றுகொண்டேயிருக்கிறேன்
என் துயரங்களைப் பாடியபடி;
சாபங்கள் துரத்தித் துரத்தி விழுங்கி
பூமிக்குள் புதையுண்டிருக்குமெனது
பாதங்களை மீளப்பெறும் நாளில்
நாடேகுவேன் !

அன்று
வீதியில் உன் மழலைகள்
செம்மண் தூசு உடல் அப்ப
பால்யத்தில் திளைத்து விளையாடுவதைக்
காண நேரிடலாமெனக்கு..!

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Friday, March 21, 2008

மனவெடிப்பிலுன் தடம்பதித்து...!


ஒரு பெருவெளிப் போர்க்களத்தை
மனதுள் பரப்பிச்
சென்றதுன் வருகை
மீளவும் மீளவும்
சுடுகாடாய்ப் புகை கசிய
வெடித்துச் சிதறுகிறது மனம் !

அமைதி,அந்தஸ்து,
அத்தனை நிம்மதியும்
வாய்க்கப் பெற்றவன் நானென
இறுமாந்து நின்றவேளை
சலனமற்ற தூறலென
சப்தங்களை விழுங்கி,விழுங்கி
நீ வந்துநின்றாய்
உள்ளுக்குளென்ன வெள்ளமோ...
நானேதுமறியேன் !

வந்தாய் - விழியுரசிடச் சிலகணங்கள்
மௌனத்தை மொழியாக்கிப்
பார்த்தபடி நின்றாயதில்
சலனத்தையோ,சிவப்பையோ
நான் காணவில்லை !

கேள்விகளை மட்டுமே
வார்த்தைகளாக்கியுன்னிடம்
வருகையின் மூலத்தை - நான்
வினவிச் சோர்ந்தவேளையிலும்
என் நெஞ்சப்பரப்பில்
ஆழத்தடம் பதித்து,
மௌனத்தை மொழியாக்கி
ஓர் தென்றல் போல
நீ விலகிச்சென்றாய் !

உனது கருவிழிகள்
பயணிக்கும் திசையில்
மட்டுமே வாழ்ந்திடப்
பலர் காத்து நிற்கையில்...

எந்தக் கோலத்துக்கும்
வசப்படாப் புள்ளியொன்றிடம்
என்ன எதிர்பார்த்து நீ வந்தாய் ?
எந்தத்திசை நோக்கியும்
முடிவுறாப் பாதையொன்றில்
எங்கு பயணிக்கக் காத்திருந்தாய் ?

உன் வாசனை நிறுத்திச்சென்று
சிலபொழுது கடந்தவேளை,
தீயிடம் என் பெயரை - நீ
உச்சரித்து மாண்டதாக
வேதனை மிகும் செய்தியொன்று
காற்றோடு வந்தது !

ஒரு பெருஞ்சமுத்திரச்சோகத்தை
மனதில் ஓயாமல் அலையடிக்கச்
செய்ததுன்னிறப்பு.
மீளவும் மீளவும்
வசந்தங்களேதுமற்றவொரு
மயானத்து வனாந்தரமாய்
வெடித்துச் சிதறியும்
துடித்துக்கொண்டே
ஏனின்னும் இருக்கிறதுன்
நேசத்தை உணர்ந்திடா என் மனம் ?

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Saturday, March 1, 2008

மரணம் துரத்தும் தேசத்துக்குரியவனாக...!


எந்த தேவதைக்கதைகளும்
தேவையில்லை,
மெல்லிசைகளோ,சுகந்தங்களோ கூட
வேண்டவே வேண்டாம்,
பாவங்கள் சூழ்ந்த
இந்த யுத்தப்பிசாசினை மட்டும்
ஓட ஓட விரட்டி அதன்
ஓசைகளை நிறுத்தித் தாருங்கள் !

என் ஜன்னலில் தெரியும் வானம்
உங்களுடையதைப் போலவே
மேகம் தழுவும் மென் நீலமாயும்,
என் பாதங்கள் பயணிக்கும்
வயல்வெளி,வனாந்தரங்களத்தனையும்
உங்களுடையதைப் போலவே
அடர்பச்சை கலந்ததாயும்,
மழைநீரும்,நதியும்,நீர்வீழ்ச்சி,வாவிகளும்
நிறமற்றதாயும்,
வெயில் வெப்பம் சுமந்தலைவதாயுமே
இருக்கின்றதென்பதை மறுப்பீர்களாயினும்
உங்களைப் போலவே
காற்றைத்தான் நானும்
சுவாசித்துச் சீவிக்கிறேனென்பதை
மட்டுமாவது ஒத்துக்கொள்வீர்களா?

உங்களுக்கேயுரியதாக நீங்கள்
காவியங்களில் சொல்லிக்கொள்ளும்
சூரிய,சந்திர,நட்சத்திரங்கள்
எனக்கும் சில கிரணங்கள் மூலம்
வெளிச்சம் பாய்ச்சுவதோடு,
உங்கள் வியர்வையழிக்குமல்லது
மேனி சிலிர்க்கச் செய்யும் தென்றல்
எனக்காகவும் கொஞ்சம்
வீசத்தான் செய்கிறது !

உங்களுக்கேயுரியதான
இவ்வினிய பொழுதில்
எனதிப் புலம்பல் எதற்கெனில்
பசி,தாகம்,உறக்கமென
உங்களைப் போலவே
அத்தனை உணர்ச்சிகளும்
எனக்கும் வாய்த்திருக்கையில்...

பெரும் அடர்புற்றுப் போல்
என் தேசம் முழுதும்
வியாபித்துச் சூழ்ந்திருக்கும்
இந்த யுத்தப்பிசாசினை
ஓட ஓட விரட்டி அதன்
ஓசைகளை நிறுத்தித் தாருங்கள் !

உங்களைப் போலவே
எனக்கும்
எத்துயர் நிஜங்களோ,
தீய கனவுகளோ அற்றுக் கொஞ்சம்
நிம்மதியாக உறங்க ஆசை !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Monday, February 18, 2008

தடங்களழியும் பொழுதிலுன் நேசம் ...!


வெப்பக்கணப்பொழுதின்
ஆவியேற்றப்பட்ட மேகப்பொதியை
மண்டைக்குள் பிதுக்கியடைத்ததாய்
பேய்க்கனம் கனக்கும்
இருவிழியும் மிகக்கலங்கி
தலைக்குள் வலியெடுக்கும்
மரணத்தின் எல்லையில்
ஆரம்பிக்கும் பாடலெனது !

எந்தப்பொழுதொன்றில்
என் பெயர் சொல்லியழைக்கின்றாய் ?
ஒரு கோடிக்கீற்றுக்களும்
எனக்கு மட்டுமேயான
அந்தகாரத்திலொரு பகுதிக்கேனும்
ஒளியினை வழங்கமுடியாப்பட்சத்தில்
எந்த நம்பிக்கையிலெனை
வழி தொடருகிறாய்...?

ஒப்பாரிக்கவி மட்டுமே பாடும்
ஒரு குயிலின் ராகத்தை
எந்தக்காற்றின் தேசத்திற்குள்
சிறையடைக்கப் பார்க்கின்றாய்?
அல்லது
எந்தக்காலத்தினறைகளுக்குள்
ஒளித்து வைக்கப்போகின்றாய்...?

உலகத்திலெனதிருப்பு
இந்நாள் வரை மட்டும்தானென
முடிவானதன் பிற்பாடுமதனை
மாற்றமுடியுமெனில் மட்டுமிங்குனக்கு
இருதுளிக் கண்ணீர் விடலாம் !

எனினும்,
கரையானாய்க் குடிபுகுந்து
மூளைக்குள் அரித்தெடுக்கும்
வலியுணர்ந்தவன்(ள்) நீயல்ல !


-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Monday, February 11, 2008

நீ நிழலாய்ப் படரும் வெளிச்சம் !


விடிகாலைத் தூக்கம்,
மழைநேரத் தேனீர்,
பிடித்த செடியின் புதுமொட்டு,
புதுப்புத்தகக் காகிதவாசனை,
இமைதடவும் மயிலிறகு
மேலுரசிடச் சிலிர்க்கும்
ரோமமெனச் சுகமாய்
எனை ஏதும் செய்யவிடாமல்
நீ வந்து நிரப்புகிறாய்
எனதான பொழுதுகளை !

மூங்கில்களுரசிடக்
குழலிசை கேட்குமோ...?
உன் மொழியில்
தினம்தினமொரு இசை
எனைக்கேட்கச் செய்கிறாய் !

புருவம் தடவப் பூஞ்சிரிப்பு
தெற்றுப் பல்காட்டி மின்னும் ;
சிவந்த அழகுக் கன்னமென்
அழுத்தமான முத்தத்தில்
நிறம் மாறி நீலம்பூக்கும் !

விழிகளிரண்டும் மின்மினிப்பூச்சிகளென
விழித்திருந்து அலைபாய
என் தூக்கம் கரைத்துக்குடித்து
நீ புதிதாய் தினம் வளர்வாய் ;
உன்னிமையில் துயில் வளர்க்க
என் பொறுமை சோதிப்பாய் !

எனைப்பெற்றவளின் சுவாசங்களையும்
அத்தனை பதற்றங்களையும்
நானறியச் செய்தாயென்
பிரசவத்தின் இறுதிக்கணங்களில்
நீ வந்து அழுதாய் ;
நான் வலி நிறுத்திப் புன்னகைக்க...!

-எம். ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Friday, February 1, 2008

ஏழு ஜென்ம வதைப்படுத்தி...


உன் மௌனத்தில் வலியுணர்த்தி
எதுவும் பேசாமல்
நின்று நின்று பார்த்தபடியே
மெல்ல நகர்கிறாய் நீ !

காயப்பட்டவுன்னிதயத்துக்கு
ஆறுதலாகவொரு துளிக்கண்ணீரோ
ஒரு கண அரவணைப்போ
தரவியலாத் துயரத்தோடு நான் !

எந்த நம்பிக்கையிலுன் சிறு ஜீவனை
எனதூர்தியின்
நான்கு சக்கரநிழலுக்குள்
நீ வந்து உறங்கவைத்தாய் ?

நசுங்கிச் சிதைந்தவுன் வாரிசின்
சடலத்தைக் காணநேர்ந்த பிற்பாடும்
எந்தவொரு அனல்பார்வையோ,
சாபமிடலோ,வைராக்கியமோ இன்றி
ஒதுங்கிப் பார்த்திருக்கிறாய்
ஆறறிவாய் நீ !

கணங்களைச் சப்பிவிழுங்கும்
பணியின் அவசரநிமித்தம்
ஒரு நிமிடமொதுக்கி
வண்டியின் கீழ்ப் பார்க்கமறந்து
ஏழேழு ஜென்மத்துக்குமான
வேதனையில் சிக்கித் தவிக்கும்
ஐந்தறிவாய் நான் !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Monday, January 21, 2008

விதிக்கப்பட்ட மரணம் !


அது நீலமோ,சாம்பலோ
தெரியவில்லை
இரண்டும் கலந்தவோர்
அடர்நிறம் போர்த்திய அதிகாலை !

ஒரு பொழுதின் ஏக்கமும் ,
ஒரு பொழுதின் வசந்தங்களும்
பனியில் குழைக்கப்பட்டு
அந்நிறம் உருவாகியிருக்கக்கூடும் !

அடர்ந்த வனாந்தரத்துள்
மெல்லிய துயரத்தோடு
தனித்தாடும் ஆண்மயிலின்
இறகுகளின் முனையில்
அந்நிறத்தைக் காணலாம் !

அன்றியும் ,
மாலைவெயிலை
எதிர்கொண்டு நடக்கையில்
சட்டெனத் திரும்பிப்பார்ப்பீர்களாயின்
நிழலில் ஒரு கணம் - அந்
நிறம் தோன்றக்கூடும் !

வனம் கலைத்துச் செல்லும் பறவை
வான்வெளியில்
சிறகுதிர்த்துச் செல்வது போல
உங்கள் மனப்பரப்பில்
அந்நிறம் இப்பொழுது
கிளைபரப்பத் தொடங்கியிருக்கும் !

தொலைதூரப் பெருங்கடல்
தொடுவானுடன் சங்கமிக்கும்
புள்ளியொன்றில் தோன்றுமே...
அதே நிறம்தான் !

விடுங்கள் - உங்களுக்கு
ஆயிரம் வேலைகளிருக்கும் !
அன்றைய விடிகாலையில்
அவன் இறுதிமூச்சு விட்ட காற்றோடு
ஆயுதங்களால் விதிக்கப்பட்ட
அநீதியைப்பார்த்த சாட்சியாய்
அந்நிறம் மட்டுமேயிருந்தது !

- எம்.ரிஷான் ஷெரீப் ,
மாவனல்லை,
இலங்கை.

Thursday, January 10, 2008

தீயெனத் தனிமை சுட ...!


எந்தவொரு மேகக்கூட்டமும்
எனக்கென்று நிற்காதவொரு
பெரும்பரப்பில் நான்;
பேசக்கேட்க யாருமற்றுத்
தனித்திருக்கிறேன் !

இப்பொழுதுக்குச் சற்றுப்பின்
வலி மிகும் தொனியுடனான
எனது பாடல்
மணற்புயலடித்துக் கண்ணையுருத்தி
உடற்புழுதியப்பும்
இப்பாலைவனம் பூராவும்
எதிரொலிக்கக் கேட்கலாம் !

எனைச் சூழ ஒலித்தோயும்
எந்தவொரு அழைப்பும்
எனக்கானதாக இருப்பதில்லை ;
எனைச் சிதைத்து ஆளும்
இப் பெருவலியையும்
எவரும் உணர்வதில்லை !

இப்படியே போனாலோர் நாளென்
முதல்மொழியும் மறந்துவிடுமென
எண்ணிச் சோர்ந்த பொழுதொன்றில்
விழும் துளியொவ்வொன்றுமென்
செவிக்குள் ரகசியம் பேசித்
தசை தடவிக் கீழிறங்கி,
மணலுறிஞ்சி மறைந்து போக
சிறு தூறலாய் மழைத்துளி வீழ்ந்து
நெஞ்சம் நனைக்கக் காண்பேனா?

எனைச் சூழ்ந்திருக்கும்
தனிமையையும் , மௌனத்தையும்
பெரும் சாத்தான் விழுங்கிச்சாக - என்
தோள்தொட்டுக் கதை பேசவொரு
சினேகிதம் வேண்டுமெனக்கு.
நீயென்ன சொல்கிறாய் ?


- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை

Tuesday, January 1, 2008

பூக்களில் உறங்கும் மௌனங்கள்...!


பின்புலக்காட்சிகளெதுவும்
புலப்படாப்பொழுது கடந்து
பூனையாய் நிலவலையும் தெருவொன்றின்
வெளிச்சம் குவியும் மையத்தில்
நீயும் நானும் மட்டும்
நின்றிருந்தோம் !

விரக்தியும்,பசியின் வீம்பும்
நிர்க்கதி நிலையும்,விழிநீரும்
நிறைந்திருந்தவுன்
நயனங்களைச் சிமிட்டிச்சிமிட்டி
சக்கையாய்ப் பிழியப்பட்டவுனது
வாழ்வினொரு பக்கத்தை - நீ
திறக்கப்போவதாயெண்ணிக் காத்திருந்தேன் !

என்ன காண நேர்ந்ததுவோ...?
எதைக் கதைக்க வந்தாயோ...?
எதனையுமுன் இதழ் திறக்கவில்லை ;
தோள் தொட்டுக்கேட்டேன்,
விழிநீர் துடைத்துக் கேட்டேன்.
விம்மித்தவித்துத் துடித்து
விளங்காப் பொருளாய்
மௌனம் உதிர்த்தாய் !

வழித்துணை மறுத்து
நீ தனியாய் வீடு சென்றாய் ,
முதுகு காட்டி நான் நகர
பெயர் சொல்லியழைத்து
கையசைத்து விடைபெற்றாய் ;
கண்ணீர் நிரம்பியவுன் செவ்விழிகளினூடு
கலங்கலாய் நான் தெரிந்தேனா?

உதிரும் வரையில் மிக ஆழமான
மௌனத்தை மட்டுமே மொழியாய்ப்பேசும்
மலர்களுக்கு ஒப்பாக
மறுநாளின் விடியலில்
உன் வளவுப்பாசிக்கிணற்று நீரைக்
குருதி நிறமாக்கி
வல்லுறவுக்கும்,வதைப்படுத்தலுக்கும்
ஆற்பட்டுக் கொல்லப்பட்டவுன்
சடலம் மிதந்தது !

நினைத்த பொழுதுதோறும் வந்து
காத்துக் கிடக்கிறோம்
உன்னிடம் கேட்கவென
ஓராயிரம் கேள்விகளோடு
நானும்,நீ துயிலுறுமுன்
கல்லறை மௌனப் பூக்களும்...!

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.