Friday, September 28, 2007

நடுநிசியிலெனது தேசம்...!



















பகல் மறையும் பொழுதுகளில்
ஆரம்பிக்கும்
எம்மக்கள் பதற்றம்...
மெல்ல இருட்ட ஆரம்பிக்கும்-எங்கள்
உவகையெல்லாவற்றையும்
உள்வாங்கி...!

குண்டு விழும்,
விழுந்த இடத்தைச் சிதறடிக்கும்,
இடி போலச் சத்தங்கேட்கும்,
தூரத்து அவலக்குரல்கள்
குண்டு போடப்படுவதை
உறுதிப்படுத்தி-தொடர்ந்து
எதிரொலிக்கும் !

துப்பாக்கிகள்
வீட்டுக்கதவு தட்டும்,
சகல குடும்பத்தினரதும்
கதறலுக்கப்பாற்பட்டு-இளைஞர்கள்
கடத்தப்படுவர் !

பௌர்ணமியும்
பார்த்து அழும்
வதைப்படுதல் கண்டு !

தினந்தோறும்
கடற்கரை,வயற்காடு,
வீதியோரம், களத்துமேடு,
பொதுமயானம், புளியந்தோப்பு,
எங்கும் கண்டிடலாம்...

எவர்க்கேனும் மகனாக,
கணவனாக,தந்தையாக,
சகோதரனாக,சினேகிதனாக
வாழ்ந்து வந்தவர்களின்
சடலங்களை...!

'இன்றைக்கெவர்க்குச் சாவோ..?"
பதுங்கு குழியிலிருந்தவாறே
உறவினரை எண்ணிப்பார்த்து
உயிர்துடிக்கும்.
மூச்சடக்கி, மூச்சடக்கி
உள்நெஞ்சுக்கேவல் எழும் !

அனைத்தும் முடிந்தநேரம்
வீட்டுச்சுவர் மேல் - சத்தமின்றி
வெயில் ஏறும் !

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை

Tuesday, September 18, 2007

நான்கு மூலைகளிலும் சபிக்கப்பட்ட வாழ்க்கை...!


















கருணை வழிந்தோடும்
இடுங்கிய விழிகளினூடு
எதுவும் இயலாதவளாக
என்னைப் பார்க்கிறாய்!

காலம் சுழற்றியடித்துச்
சுருங்கிய உடலோடு,
விபத்துக்குள்ளான - உன்
பேரனைப் பார்த்துப்போக
கடன்வாங்கித் துரிதகதியில்
தலைநகர் வந்ததாக
காவல்துறையிடம் கெஞ்சுகிறாய்!

அழகாயிருந்த வாழ்க்கையின்
நான்கு மூலைகளும் சபிக்கப்பட்டு
நாறடிக்கப்பட்டிருக்கும் போது
மன்றாடியென்ன பயன்...?
மன்னித்துக்கொள் தாயே...!

உன் பனையோலைப்பையின்
ஒவ்வொரு இடுக்காய்த் தேடியும்
கைக்குட்டைச் சில்லறைகளையும்
பனங்கிழங்குகளையும் தவிர
வேறெந்த ஆயுதத்தையும்
இவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை...!

காவல்துறை வாகனத்தில்
கைப்பிடித்து ஏற்றப்படுகின்றாய்...
என்ன செய்ய...?
நீ மூதாட்டிதானெனினும்
அடையாளஅட்டையில்லையெனில்
உன்னை வதைப்படுத்தி விசாரிக்காமல்
விடமாட்டார்கள் - உன்
நெற்றியில் பொட்டிருக்கும் காரணத்தால்...!

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை

Thursday, September 13, 2007

வசந்தங்கள் வர வழி விடு











உனதிருண்ட வாழ்வில்
ஒரு பொழுதிலேனும்
ஒளிக் கீற்றொன்று
உட்பிரவேசிக்குமென்ற
நம்பிக்கையுடனாவது-கொஞ்சம்
நிம்மதியாய்
உறங்கக் கூடாதா தோழி?

விழிநீர் வற்றும் வரை
கதறியழுதுன்
காலத்தைப் போக்குவதாக
வாதம் புரிகிறாய்;
இருட்டு மட்டுமேயுன் எதிர்காலத்தைச்
சூழ்ந்துள்ளதென்று
ஏங்கித் தவிக்கிறாய்!

வசந்தம் - உன்
வாசலுக்கு மட்டும்
வரக்கூடாதென்கிறாய்.
வைகறை விடியலும் - உன்
வாழ்விலொருபோதும்
இல்லையென்கிறாய்!

உன்னிதயத்தைச் சிலுவையிலேற்றிச்
சித்திரவதை செய்யும்-அவன்
சம்பந்தப்பட்ட நினைவுகளை
மறக்க முடியாதென்கிறாய்.
மருந்து போடக்கூடாதென்கிறாய்!

உன்னால் உயிர் பிரிந்த-அவன்
உனக்கான நிம்மதியையும்
உருவிக்கொண்டு போனதாக
உள்ளம் குமுறுகிறாய்.
உச்சந்தலை மேல்
இடி வீழ்ந்துன் இதயம் நொருங்கியதாய்
எண்ணித்தவிக்கிறாய்!

உன் சுற்றமேயிப்போது
உனைச் சீறுகிறது.
வார்த்தை அம்புகளால்
வதைக்கிறது.-அவன்
காதலை ஏற்க மறுத்த
கர்வம் மிகுந்த அந் நாட்களில்
கணப் பொழுதிலேனும்
இப்படி நேருமென நீ
எண்ணிப் பார்த்ததுண்டா?

அவன் உறங்கும் கல்லறையில்
வீழ்ந்து கதறியழுதாவது
நீ செய்த பாவத்துக்கு
பரிகாரம் தேட முயற்சிக்கிறாய்!

உன்னிடம் அன்பை யாசித்து
அபயம் தேடிய அவனுக்குன்னால்
ஆறுதல்தான் கூற முடியவில்லை.
வார்த்தைகளால் காயப்படுத்தாமலாவது
இருந்திருக்கலாமல்லவா?

விதி உனக்கென்று
வரைந்த பாதையினூடு-உன்
வாழ்க்கை போகிறது.
நீ அதற்கென்
செய்வாய் தோழி?

நீ செய்த தவறுக்காக
காற்று – உனை மட்டும்
விட்டுவிட்டு வீசுகிறதா?
நிலா –தன்
பால் கிரணங்களை உன்மேல்
பொழிய மறுக்கின்றதா?
உனை நனைக்க
மழை தூற மாட்டேனென்கிறதா?

அவன் போய்விட்டான்
இனி உனக்கான தேசத்தில்
நிச்சயமாய் வாழ வரமாட்டானென்ற
நிதர்சனத்தை
நீயுணர்ந்த போதிலும்
நிம்மதியிழந்து தவிப்பதேன் தோழி?

கண்ணீரால் வரையப்பட்ட-உன்
காதல் சரித்திரம்
மறக்கவே முடியாததொன்றுதான்.
ஆனாலும் உனக்கான வாழ்க்கை
இன்னும் மிச்சமிருக்கிறதென்கிற
உண்மையை உணர்வாயா?

வசந்தத்தின் ஆணி வேர்கள்
உனை நோக்கி வருகிறது
இதய வாசலைத் திறந்துவிடு தோழி!
வாழ்க்கை உனை
வாழ அழைக்கிறது-ஒரு
முன் மாதிரியாய் வாழ்ந்துகாட்டு தோழி!

ஒரு பூ
உதிர்ந்து போனதென்று
செடிகள் என்றேனும்
சித்தம் கலங்குவதில்லை.
கணப்பொழுதுதான் தனக்கு
காட்சி தர முடிகிறதென்று
வானவில் ஒருபோதும்
வருத்தப் பட்டதில்லை!

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை

Saturday, September 8, 2007

நிசப்தம் விழுங்கும் உறக்கம்...!













நிசப்தித்திருந்தது நள்ளிரவு;
காலமோடும் சப்தம் கூட
காதுக்குள் அதிர்ந்தறைந்தது...!

ஒரு அசாத்தியமான மௌனத்தின்,
அமைதியின் உலகை
பேரிரைச்சலின் கை
அறைந்து சாத்தியதும்,
எனதான தேசம்
பற்றியெரிய தொடங்கியதுமான
அன்றிலிருந்துதான்...

இமைகளின் மேல் மயிலிறகால்
'உறக்கமே வருக'வென
மெலிதாய் எழுதி வைத்திடினும்
விழிகளில் ரயிலூர்ந்ததாய்
உறக்கம் மட்டும் வரவே வராது !

இப்படித்தானே இருந்து வருகிறது
தமதான தேசத்தைப் பிரிந்து,
சுயததை இழந்த
ஒவ்வொரு மனிதனுக்கும்...
ஒவ்வொரு நள்ளிரவும்...

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.