Wednesday, July 15, 2009

நிசிவெளி


தீராக் கொடும்பசியுடன்
பூரண நிலவைத்
தின்று சிதறி
ஏதுமறியாப் பாவனையோடு
பார்த்திருக்கின்றன
நிசிவெளியின் நட்சத்திரங்கள்

முற்றாகத் தின்னட்டுமென
விட்டுப்பின்
இருளைத் தின்று வளர்கிறது
இளம்பிறை

-எம்.ரிஷான் ஷெரீப்



நன்றி - உயிர்மை

Wednesday, July 1, 2009

வதந்தி


உதிர்ந்த இலைச்சருகுகளுக்குள்
ஊர்ந்தொளிகிறது பாம்பு
கசந்த அசைவொன்றைக்
காற்றுக்குக் கொடுத்தபடி
ஆடியசையும் வனவிருட்சங்கள்
விஷப்பாம்பினைப் போர்த்த
மேலும் மேலும் உதிர்க்கின்றன
இலைகளையும் காட்டுப்பூக்களையும்

குஞ்சுகளின் பசியாற்றிய பட்சி
உள்ளே அதிர்ந்து நிற்க
பசித்த பாம்பு தன் வாடை பரப்பி
மரமொன்றின் கிளிப்பொந்தில்
இரைதேடி ஏறுகிறது

பீதியில் நடுநடுங்கிய
தாய்க்கிளியின் ஓசை
வனமெங்கும் அதிர
ஏதுமறியாக் குஞ்சுகளும்
உண்ட இரை கக்கத் தம்
மென்குரலில் அலற
சர்ப்பம் ஒரு குஞ்சை விழுங்கிற்று

எஞ்சிய குஞ்சுகள்
விஷ உடலின் கீழ் நசுங்கி
இடையறாது கதற
நிஷ்டை கலைந்த வனமும்
மற்றவையும்
பட்சிகளைச் சாடியபடி கிடக்கையில்

எப்பொழுதும் போலக்
குஞ்சுகளின் குரலெடுத்து
அவற்றின் உயிரெடுத்துக்
காற்றே போ
கிளிச்சொண்டு சொல்லுதிர்த்ததால்தான்
காட்டில் பெருங்கலகம் விளைந்ததெனப்
போய்ச் சொல்

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


நன்றி - உன்னதம் ( மே-2009) இதழ்