1.
மஞ்சள் பூக்களைப் பற்றிப் பேசியபடியும்
இலைகளிலிருந்து விழத்துடிக்கும்
மழைத்துளிகளைப் பாடியபடியும்
சாத்தான்களைத் தூதனுப்புமுன்
பாறாங்கல்லிதயத்திலிருந்து
நட்சத்திரமொன்றைத் தள்ளிவிட்டாய்
மனதின் முனையைப் பற்றியபடியது
இல்லாத உன் புகழ்பாடி வீணாகுகையில்
நீர்ப்பரப்பில் நத்தைகள்
நீந்துவதாகச் சொல்கிறாய்
ஓடு பொதுதானெனினும்
நத்தைகள் ஆமைகளாக முடியாது
எல்லாவற்றிலும்
2.
நீ உடைத்த வெளிகளில்
தூளாகிச் சிதறியது மனம்
சாத்தப்பட்ட கதவினைத் தட்டியபடி
கைகளில் விளக்கோடு காத்திருக்கிறாய்
அறை முழுதும் நிரம்பி
எக்காளமிடுகின்றன
உன் பற்றிய என் கவிதைகள்
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
