Tuesday, February 23, 2010

பெருநகரப் பூக்கள்

தனித்தனியாகப் பிரிந்துசெல்லும்
பாதைகள் வழியும்
அடர்காட்டுக்குள்ளும்
பூத்துக்கிடக்கின்றன
சில வனாந்தரப்பூக்கள்

வாசத்தைப் பரப்பும்
பூக்களை ரசிக்கவோ
பூசைக்கென்று கொண்டாடவோ
யாருமற்ற வெளியிலும்
இயல்பினை மறக்காமல்
தத்தம் பாதையில் வெகு ஆனந்தமாக
பூத்துக்கொண்டே இருக்கின்றன

இயற்கையின் பன்னீர்த்தூவல்
ஒளிக்கீற்றின் களி நர்த்தனம்
இலை மிகுக்கப் பச்சையங்கள்
வட்டமிட்டபடியே சுற்றிவரும் தேன்குருவி
அனைத்தும் மிகைத்துக் கிடக்க
காட்டுப் பூக்களுக்குக் கவலையேதுமில்லை

ஒளி மறுக்கப்பட்டுக்
குளிர்விக்கப்பட்ட அறையில்
பூ மலர்ந்தபொழுதில்
தொட்டிச் செடிக்கு மனதும் வலித்தது
மூன்றாவதாகப் பிறந்ததும் பெண்ணாம்

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


நன்றி
# அகநாழிகை கலை இலக்கிய இதழ் 01 - அக்டோபர், 2009
# தமிழ் எழுத்தாளர்கள்
# திண்ணை
# வார்ப்பு


Thursday, February 11, 2010

இடர்மழை

நமக்கிடையே வான் தெளித்த
அடர்த்தியான மழையைத் தவிர்த்து
வேறெவருமிருக்கவில்லை
தூறல் வலுத்த கணமது
வீதியின் ஒரு புறத்தில் நீ
இதுவரை கவிழ்ந்திருந்த தலையை
முக்காட்டுக்குள்ளிருந்து நிமிர்த்தி
எதிரே வருமென்னைப் பார்க்கிறாய்

காற்றடித்து வலுத்த மழைக்குத் தப்பியோட
நானிருக்கும்போது நீ முயற்சிக்கவில்லை
உன் நாணத்தை முழுமையாக வழித்தெறியத்
தூறலுக்குத் தெரியவுமில்லை

உன்னிடமோ என்னிடமோ
அந்திவேளையின் மழையை எதிர்பார்த்த
குடைகள் இல்லை
வானிலிருந்து பொழியும் நீர்த்துளிகளைத் தடுக்க
மேனிகளுக்குத் தெரியவுமில்லை

இத்தனைகள் இல்லாதிருந்தும்
ஆண்மையென்ற பலமிருந்து நான்
அருகிலிருந்த என் வீட்டிற்கு ஓடுகிறேன்
காற்சட்டையில் சேறடித்திருக்கக்
கவலையேதுமில்லை
தேய்த்துக் கழுவ அம்மா இருக்கிறாள்
நான் மறையும்வரை காத்திருந்து நீயும்
புத்தகங்களை நெஞ்சில் அணைத்து
பேருந்து நிறுத்தம் நோக்கி
ஓடத்துவங்குகிறாய்

திரைக்காட்சிகளில் வரும்
அழகிய இளம்பெண்களின்
மழை நடனங்கள் பற்றிய கனவுகளோடு
யன்னல் வழியே பார்க்கிறேன் உன்னை

ஆங்காங்கே ஒழுகிவழியும்
பேரூந்து நிறுத்தத்துக்குள்
நீ முழுவதுமாக நனைந்திருக்க
அடிக்கடி பின்னால் திரும்பி
சேற்றோவியம் வரைந்திருந்தவுன்
நீண்ட அங்கியைக் கவலையுடன்
பார்த்தவாறிருக்கிறாய்
தேய்த்துக் கழுவுவது நீயாக இருக்கக்கூடும்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# வடக்குவாசல் - டிசம்பர், 2009
# நவீன விருட்சம்
# தமிழ் எழுத்தாளர்கள்
# கீற்று
# திண்ணை
# வார்ப்பு



Monday, February 1, 2010

அரசியல்

வண்ணத்துப்பூச்சியொன்றின்
ஒரு இறகில் நீயும்
மறு இறகில் நானும் ஏறிக் கொண்டு
உலகம் முழுதும் சுற்றிப்பார்ப்போம்

நான் ஆளும் தேசம் பற்றிய
பஞ்சப்பாட்டுக்களைத் தவிர்த்து
என் பற்றிச் சிலாகித்துப்பாடு
அது நான் செய்யாததாக இருப்பினும்
நிறைந்த நற்செயல்களாலும்
அருள்மிகுந்த கீர்த்திகளாலும் -எனது
நீண்ட ஆயுளுக்கான பிரார்த்தனைகளாலும்
ஆனதாக இருக்கட்டும்

காலம் காலமாகப் பிரிந்தே பயணித்த
இரு சமாந்தரத் தண்டவாளங்களை
சூடாகித் தெறித்துப் பின் காய்ந்து போன
சிவப்புவர்ணத்தைப் பூசி இணைத்தது
தலையற்ற முண்டமொன்று
அது பற்றி உனக்கென்ன கவலை?
வா

வண்ணத்துப்பூச்சி வேண்டாம்
தும்பிக்கு நான்கு சிறகுகளாம்

அதன்
ஒரு இறகில் நீயும்
மறு இறகில் நானும்
மற்ற இரண்டில்
எதிர்த்துக் கேள்விகளெதுவும் கேட்கவிழையாத
மேலுமிரு அப்பாவிக் குடிமகன்களையுமேற்றி
என் புகழ் பாடியபடி
உலகம் முழுதும் சுற்றிப்பார்ப்போம்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


நன்றி
# உன்னதம் இதழ், டிசம்பர் 2009
# திண்ணை

# ஒளி ஓவியம் - நண்பர் ஜீவ்ஸ் ஐயப்பன்