Thursday, January 19, 2012

நான் குருடனான கதை

தேவ வனங்களின் வண்ணங்களில் தோய்த்து
மொழிகளையொன்றாக்கி வரைந்திட்ட ஓவியத்துக்குக்
கண்களற்றுப் போயிற்று
காலம் நகரும் கணங்களின் ஓசையைக் கேட்கக்
காதுகளற்றுப் போயிற்று
காணச் சகித்திடா அவலட்சணத்தை
தன்னுள் கொண்டது நவீனத்துக்குள் புதைந்தது
புதிதாக மின்னக் கூடுமென்ற நம்பிக்கையோடு

யாரும் காணாச் சித்திரத்தின் உதடுகளில்
வண்ணங்கள் முணுமுணுத்துக் கண்களைத் தேடிற்று
எங்கும் தன் விம்பங்களைப் பொருத்தியபடி
திசைகள் தோறும் ஓடியது உயிரற்ற ஓவியம்
எனது விழிகளை உருவிக்கொண்டு

- எம்.ரிஷான் ஷெரீப்
13122008

நன்றி
# வடக்குவாசல் இதழ் - நவம்பர், 2012
# திண்ணை

Wednesday, January 4, 2012

புகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்...


சலனமற்ற தூறலோ நிலவோ வெயிலோ
எதுவோ நகரும் இக் கணத்தில்
வரையப்பட்ட மண்டையோட்டின்
சாயலில் காண்கிறேன் என்னை
வளைந்து நெளிந்து செல்லும்
இப் பாதையொரு முடிவிலி

இரு மருங்குப் புதர்களிலிருந்தும்
வெளிப்பட்டிருக்கும்
புகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்
புதையுண்ட மனித உயிர்கள்
காலக் கண்ணாடியை விட்டும்
இரசம் உருள்கிறது
அதில் தென்பட்ட விம்பங்கள்தான்
புதையுண்டு போயினவோ

வேர்களில் சிக்கியிருக்கும்
உடல்களிலிருந்து எல்லாச் செவிகளையும்
உறிஞ்செடுத்த விருட்சங்கள்
எவ்விசை கேட்டு வளரும்
விதியெழுதும் பேனா
எக் கணத்தில் முறிந்திடுமோ
காத்திருக்கலாம்
இங்கு பூதம் காத்த விளக்காய் நான்

கால்களை விரித்தாடும்
எனது நிழல்களில்
ஒரு குழந்தை
ஒரு கொடூர விலங்கு
இணைந்திரண்டும்
ஒரு கணமேனும் விடாது அசைகின்றன
பார்வைக்குத் தெரியாத இழையொன்றால்
பிணைக்கப்பட்டிருக்கிறேனா
தெரியவில்லை

கடந்த காலத்தைக் காட்டிட
பறவைகளிடமில்லை
என்னிடமிருக்கின்றன
தேய்ந்தழியக் காத்திருக்கும் எனதேயான
பாதத் தடங்கள்

சுற்றிவரச் சட்டமிட்ட கூண்டுக்குள்
வளரும் தளிர் நானா
எவ்வாறாயினும் என்னில் வரையும்
எந்த வண்டிலுமில்லை
உணர்கொம்பில் ஒட்டிய தேன்
மண்டையோட்டிலுமில்லை
குருதியின் ஈரலிப்பு

பிறகும்
என் முகம் எதிலும் இல்லை
இருக்கக் கூடும்
இவ் வரிகளின் ஏதேனுமொரு மூலையில் நான்
நானாகவே

- எம். ரிஷான் ஷெரீப்
20100702

நன்றி 
# காலச்சுவடு இதழ் - 142 - அக்டோபர் 2011
# திண்ணை
வல்லினம் - கலை, இலக்கிய இதழ் - 37, ஜனவரி 2012
ஓவியம்: காச வினய்குமார்