அவளது பிரயாணத்தின் குறுக்கீடான
அகன்ற வாயிலைத் திறந்தபோது
சுவாசத்திலடித்தது சாத்தானின் வாடை
வேட்டை நாயொன்றைப் போலவந்து
சதைகள் கவ்வமுயன்ற பொழுது
வேடிக்கை காட்டித்
தப்பிக்கத் தெரியவில்லை அவளுக்கு
தூக்கிப் போட்டு இரை நோக்கவைக்க
இறைச்சித் துண்டுகளும் கைவசம் இல்லை
அவளுடல் பாகங்கள் குறித்தே
சாத்தானுக்குக் குறியிருந்தது
சூழச் சூழ வந்து அவளைத்
தொட்டணைத்துத் தன்
பற்தடங்களைப் பதிக்கமுயன்றகணம்
தேவதூதனொருவனின் மெல்லிறகுக் காற்று
இருவருக்குமிடையே ஓர் அணையை எழுப்பிற்று
மாயக்கரமொன்று அவளதிர்ந்த நெஞ்சை
ஆறுதல்படுத்தி விழிநீர் துடைத்திற்று
கீறல்கள் மட்டும் சுமந்து
எப்படியோ சாத்தானைக் கூண்டொன்றிலடைத்திட்டாள்
எம்பி எம்பியது அவளிடம் வர
முயற்சித்தபடியேயிருக்க
அவளது பயணம் தேவதூதனை நோக்கித்
திசைமாறிற்று
இன்று
தூரத்து ஒளியொன்று பார்வையில் இடறிட
நெடுஞ்சோலைகள் தாண்டிப்
பசும்வெளிகள் தாண்டி
வற்றாத அழகிய நீர்வீழ்ச்சிகள் தாண்டி
நிலவற்ற நடுநிசிகளில் கூட
அவனது மெல்லிறகுகள் கொண்ட
அருட்கரங்களைத் தேடியே
அவள் பாதங்கள் தொலைந்தபடியிருக்க
அணையெழுப்பிய மெல்லிறகுக் காற்றே
நீயறியாயோ வெந்துருகும் அவள் சுடுமூச்சை ?
விழிநீரழித்த மாயக்கரமே
நீயறியாயோ பிரவகிக்கும்
அவள் துயரங்களின் மூர்க்கத்தை ?
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Showing posts with label கீற்று. Show all posts
Showing posts with label கீற்று. Show all posts
Wednesday, October 15, 2008
Monday, September 1, 2008
கனவு முகங்களில் தொலையும் இரவு !
வெள்ளைப் பூனையின் மென்மயிரென
இலகுவாக உதிர்ந்துவிடுகிறதா என்ன
என் நிராசைக் கனவுகளின் நீட்சி ?
ஒரு சவத்தைப் பின்பற்றுகின்றது
என் பாதங்களின் அடிச்சுவடு ;
பின்னால் வருகின்றாயென்பதை
உணர்ந்து நடந்து மண்டியிட்டு
பிணத்துக்காகப் பிரார்த்திக்கையில்
சவப்பெட்டியில் படுத்திருப்பதுவும்
நீதானெனக் கண்டதிர்ந்து
துயில் கலைகிறேன் !
கனவுகளுக்குள்ளான போலிமுகத்தின்
புருவத் தீற்றலைக் கண்டறியும்
சாஸ்திரங்களைக் கற்றவனல்ல நான் ;
எனவே சொல்...
பிணத்தின் முகம்தனை
எவ்வாறு சூடிக் கொண்டாய் ?
உடலசையா உறக்கத்தினை
எங்கிருந்து கற்றறிந்தாய் ?
உனது நினைவுகளைச் சேர்த்துக்
கொழுவி வைத்திருக்கிறேன்,
ஒவ்வொரு கண முகங்களிலும்
வித்தியாசமாகவே தெரிகிறாய் !
கண்ணாடி விம்பம்தனில்
கண்ணீர் மிதந்திருக்கும்
இரு விழிகளைக் காண்கிறேன் ;
நிராதரவாகிப் போன
நந்தவனத்து மான்குட்டியொன்றின்
மருண்ட பார்வைகளைத் தாங்கிக்
கண்ணீர் மிதந்திருக்கும்
இரு விழிகளைக் காண்கிறேன் !
அந்த விழிகளை மூடித் துயிலுறுமிரவினில்
இன்றெந்த முகத்தைத் தாங்கிக்
கனவினில் வருவாயோ ?
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
இலகுவாக உதிர்ந்துவிடுகிறதா என்ன
என் நிராசைக் கனவுகளின் நீட்சி ?
ஒரு சவத்தைப் பின்பற்றுகின்றது
என் பாதங்களின் அடிச்சுவடு ;
பின்னால் வருகின்றாயென்பதை
உணர்ந்து நடந்து மண்டியிட்டு
பிணத்துக்காகப் பிரார்த்திக்கையில்
சவப்பெட்டியில் படுத்திருப்பதுவும்
நீதானெனக் கண்டதிர்ந்து
துயில் கலைகிறேன் !
கனவுகளுக்குள்ளான போலிமுகத்தின்
புருவத் தீற்றலைக் கண்டறியும்
சாஸ்திரங்களைக் கற்றவனல்ல நான் ;
எனவே சொல்...
பிணத்தின் முகம்தனை
எவ்வாறு சூடிக் கொண்டாய் ?
உடலசையா உறக்கத்தினை
எங்கிருந்து கற்றறிந்தாய் ?
உனது நினைவுகளைச் சேர்த்துக்
கொழுவி வைத்திருக்கிறேன்,
ஒவ்வொரு கண முகங்களிலும்
வித்தியாசமாகவே தெரிகிறாய் !
கண்ணாடி விம்பம்தனில்
கண்ணீர் மிதந்திருக்கும்
இரு விழிகளைக் காண்கிறேன் ;
நிராதரவாகிப் போன
நந்தவனத்து மான்குட்டியொன்றின்
மருண்ட பார்வைகளைத் தாங்கிக்
கண்ணீர் மிதந்திருக்கும்
இரு விழிகளைக் காண்கிறேன் !
அந்த விழிகளை மூடித் துயிலுறுமிரவினில்
இன்றெந்த முகத்தைத் தாங்கிக்
கனவினில் வருவாயோ ?
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Friday, August 15, 2008
புதைகுழி வீடு !
அத்திவாரத்தை
வெடிபொருட்களால் நிரப்பி
அது இறுகிச் சேர்ந்திட
மனிதக் குருதி சேர்த்து
நெருப்புக்களால் ஆன
வீடொன்று கட்டு உனக்கு.
பேய்களே அதற்குக் காவலிருக்கட்டும் !
முன்பு புதைத்த
சவங்களைத் தோண்டியெடுத்து
அதன் எலும்புகளால் சில யன்னல்களும் வை.
இரவானாலும் - எந்த
இருளானாலும்
அவை மூடப்படாமலே கிடக்கட்டும் ;
அனல்காற்றும்,
அரைவேக்காட்டுப் பிணவாடையும்
மட்டுமே சுமந்தது உள்ளே வரட்டும் !
உருகிச் சிவந்து சூடு சுமக்கும்
தட்டை இரும்பினாலோர்
ஒற்றைக் கதவு வை.
வெப்பத்திறவுகோலால்
சாத்தான்களுக்கு மட்டுமதனைத்
திறந்து வழிவிட்டு நகர் !
பிணக்கால்களின் மூட்டுக்கள் கொண்டு
உன் சிம்மாசனம் அமையட்டும்,
மண்டையிலடித்துக் கொன்றொழித்த
பெண்களின் முத்துப் பற்களை
அழகுக்காகப் பதி ;
சிறு மழலையின் மண்டையோடு
செங்கோலின் கைப்பிடியை அலங்கரிக்கட்டும் !
இளம்பெண்களின் அலறலும்,
குழந்தைகளின் அழுகையும்,
மனிதர்களின் ஓலமும்
துயர் சுமந்த ஒப்பாரிகளும்
உன் வீட்டை இசையாக
நிரப்பட்டும் !
விருந்தினர் வருகையில்-கொதிக்கும்
விஷபானம் குடிக்கக் கொடு ;
அவர்கள் தொண்டை வழியே உருகிவழிகையில்
உன் வீரவாள் கொண்டு
வெட்டிக் கறி சமை !
அவர்கள் கண்களைத் தோண்டி-அதில்
ஆயிரம் அலங்காரம் பண்ணி,
நாக்குகளை அறுத்துத் துணைக்குத்
தொட்டுக் கொள்ளவை !
உன் பசி தீர்ந்ததா?
இப்பொழுது சொல்.
நான் சொன்னபடி கட்டிய
உன் வீட்டுக்கும்
என் தாய்தேசத்துக்கும்
என்ன வித்தியாசம் இன்று?
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
இணைய வானொலியில் ஒலிபரப்பான இக்கவிதையை பிரபல அறிவிப்பாளர் அப்துல் ஜப்பார் அவர்களது குரலில் கேட்க...
வெடிபொருட்களால் நிரப்பி
அது இறுகிச் சேர்ந்திட
மனிதக் குருதி சேர்த்து
நெருப்புக்களால் ஆன
வீடொன்று கட்டு உனக்கு.
பேய்களே அதற்குக் காவலிருக்கட்டும் !
முன்பு புதைத்த
சவங்களைத் தோண்டியெடுத்து
அதன் எலும்புகளால் சில யன்னல்களும் வை.
இரவானாலும் - எந்த
இருளானாலும்
அவை மூடப்படாமலே கிடக்கட்டும் ;
அனல்காற்றும்,
அரைவேக்காட்டுப் பிணவாடையும்
மட்டுமே சுமந்தது உள்ளே வரட்டும் !
உருகிச் சிவந்து சூடு சுமக்கும்
தட்டை இரும்பினாலோர்
ஒற்றைக் கதவு வை.
வெப்பத்திறவுகோலால்
சாத்தான்களுக்கு மட்டுமதனைத்
திறந்து வழிவிட்டு நகர் !
பிணக்கால்களின் மூட்டுக்கள் கொண்டு
உன் சிம்மாசனம் அமையட்டும்,
மண்டையிலடித்துக் கொன்றொழித்த
பெண்களின் முத்துப் பற்களை
அழகுக்காகப் பதி ;
சிறு மழலையின் மண்டையோடு
செங்கோலின் கைப்பிடியை அலங்கரிக்கட்டும் !
இளம்பெண்களின் அலறலும்,
குழந்தைகளின் அழுகையும்,
மனிதர்களின் ஓலமும்
துயர் சுமந்த ஒப்பாரிகளும்
உன் வீட்டை இசையாக
நிரப்பட்டும் !
விருந்தினர் வருகையில்-கொதிக்கும்
விஷபானம் குடிக்கக் கொடு ;
அவர்கள் தொண்டை வழியே உருகிவழிகையில்
உன் வீரவாள் கொண்டு
வெட்டிக் கறி சமை !
அவர்கள் கண்களைத் தோண்டி-அதில்
ஆயிரம் அலங்காரம் பண்ணி,
நாக்குகளை அறுத்துத் துணைக்குத்
தொட்டுக் கொள்ளவை !
உன் பசி தீர்ந்ததா?
இப்பொழுது சொல்.
நான் சொன்னபடி கட்டிய
உன் வீட்டுக்கும்
என் தாய்தேசத்துக்கும்
என்ன வித்தியாசம் இன்று?
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
இணைய வானொலியில் ஒலிபரப்பான இக்கவிதையை பிரபல அறிவிப்பாளர் அப்துல் ஜப்பார் அவர்களது குரலில் கேட்க...
Saturday, March 1, 2008
மரணம் துரத்தும் தேசத்துக்குரியவனாக...!

எந்த தேவதைக்கதைகளும்
தேவையில்லை,
மெல்லிசைகளோ,சுகந்தங்களோ கூட
வேண்டவே வேண்டாம்,
பாவங்கள் சூழ்ந்த
இந்த யுத்தப்பிசாசினை மட்டும்
ஓட ஓட விரட்டி அதன்
ஓசைகளை நிறுத்தித் தாருங்கள் !
என் ஜன்னலில் தெரியும் வானம்
உங்களுடையதைப் போலவே
மேகம் தழுவும் மென் நீலமாயும்,
என் பாதங்கள் பயணிக்கும்
வயல்வெளி,வனாந்தரங்களத்தனையும்
உங்களுடையதைப் போலவே
அடர்பச்சை கலந்ததாயும்,
மழைநீரும்,நதியும்,நீர்வீழ்ச்சி,வாவிகளும்
நிறமற்றதாயும்,
வெயில் வெப்பம் சுமந்தலைவதாயுமே
இருக்கின்றதென்பதை மறுப்பீர்களாயினும்
உங்களைப் போலவே
காற்றைத்தான் நானும்
சுவாசித்துச் சீவிக்கிறேனென்பதை
மட்டுமாவது ஒத்துக்கொள்வீர்களா?
உங்களுக்கேயுரியதாக நீங்கள்
காவியங்களில் சொல்லிக்கொள்ளும்
சூரிய,சந்திர,நட்சத்திரங்கள்
எனக்கும் சில கிரணங்கள் மூலம்
வெளிச்சம் பாய்ச்சுவதோடு,
உங்கள் வியர்வையழிக்குமல்லது
மேனி சிலிர்க்கச் செய்யும் தென்றல்
எனக்காகவும் கொஞ்சம்
வீசத்தான் செய்கிறது !
உங்களுக்கேயுரியதான
இவ்வினிய பொழுதில்
எனதிப் புலம்பல் எதற்கெனில்
பசி,தாகம்,உறக்கமென
உங்களைப் போலவே
அத்தனை உணர்ச்சிகளும்
எனக்கும் வாய்த்திருக்கையில்...
பெரும் அடர்புற்றுப் போல்
என் தேசம் முழுதும்
வியாபித்துச் சூழ்ந்திருக்கும்
இந்த யுத்தப்பிசாசினை
ஓட ஓட விரட்டி அதன்
ஓசைகளை நிறுத்தித் தாருங்கள் !
உங்களைப் போலவே
எனக்கும்
எத்துயர் நிஜங்களோ,
தீய கனவுகளோ அற்றுக் கொஞ்சம்
நிம்மதியாக உறங்க ஆசை !
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Monday, January 21, 2008
விதிக்கப்பட்ட மரணம் !

அது நீலமோ,சாம்பலோ
தெரியவில்லை
இரண்டும் கலந்தவோர்
அடர்நிறம் போர்த்திய அதிகாலை !
ஒரு பொழுதின் ஏக்கமும் ,
ஒரு பொழுதின் வசந்தங்களும்
பனியில் குழைக்கப்பட்டு
அந்நிறம் உருவாகியிருக்கக்கூடும் !
அடர்ந்த வனாந்தரத்துள்
மெல்லிய துயரத்தோடு
தனித்தாடும் ஆண்மயிலின்
இறகுகளின் முனையில்
அந்நிறத்தைக் காணலாம் !
அன்றியும் ,
மாலைவெயிலை
எதிர்கொண்டு நடக்கையில்
சட்டெனத் திரும்பிப்பார்ப்பீர்களாயின்
நிழலில் ஒரு கணம் - அந்
நிறம் தோன்றக்கூடும் !
வனம் கலைத்துச் செல்லும் பறவை
வான்வெளியில்
சிறகுதிர்த்துச் செல்வது போல
உங்கள் மனப்பரப்பில்
அந்நிறம் இப்பொழுது
கிளைபரப்பத் தொடங்கியிருக்கும் !
தொலைதூரப் பெருங்கடல்
தொடுவானுடன் சங்கமிக்கும்
புள்ளியொன்றில் தோன்றுமே...
அதே நிறம்தான் !
விடுங்கள் - உங்களுக்கு
ஆயிரம் வேலைகளிருக்கும் !
அன்றைய விடிகாலையில்
அவன் இறுதிமூச்சு விட்ட காற்றோடு
ஆயுதங்களால் விதிக்கப்பட்ட
அநீதியைப்பார்த்த சாட்சியாய்
அந்நிறம் மட்டுமேயிருந்தது !
- எம்.ரிஷான் ஷெரீப் ,
மாவனல்லை,
இலங்கை.
Tuesday, November 27, 2007
திமிர் களைந்தெழு...!

எழும்பு!
கனவுகளேதுமற்றவுன்
நெடுந் தூக்கத்தை விட்டும்!
பார்!
உன்னால் துடி துடிக்கப் பிடுங்கப்பட்ட
சிட்டுக் குருவிகளின்
சிறகுகளின் முனையில்
குருதி கறுப்பாய்க்
காய்ந்து கிடப்பதை!
கேள்!
இறக்கைகளனைத்தையும்
விலங்கான உன்னிடத்தில் இழந்து
பறக்க முடியாமல்
குருவிகள் பாடும்
ஒப்பாரியின் ராகத்தை!
புரிந்து கொண்டாயா
இருந்தும் என்ன திமிருனக்கு ?
உன் பாதத்தை
விளிம்பாய்க் கொண்டு,
உன் ரேகையை
நூலாய் எடுத்து,
ஓர் அந்தகாரக் காரிருளில்
ஒரு விஷச் சிலந்தி
தனக்கான வலையைப் பின்னும் வரை
உனக்கேதும் புரியாதுதான்!
- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Monday, November 12, 2007
கண்ணாடியின் வேர்கள் !

வானத்தினழகும் ,
வசந்தகால
வனாந்தரங்களின்
பசுமையும்,
வானவில் வர்ணங்களும்,
வண்ணத்துப் பூச்சிச்
செட்டையின்
மென்மையும் ;
இந்தக் கண்ணாடி விம்பத்திடம்
தோற்றுத்தான் போகுமென
சொல்லிக் கொண்டிருந்தேன் !
எங்கிருந்து வந்தாய்...?
என் கனவுகளில்
தீப்பிடிக்கச் செய்தாய் ;
எனது பாடல்களை
ஒப்பாரியாக்கி,
எனது தேடல்களை
விழிநீரில் கரைத்து
வழியனுப்பச் செய்யுமுன்
சந்தர்ப்பவாதத்தை
எந்தக் கரங்களில்
ஏந்தி வந்தாய்...?
என் தோழனா நீ...?
நட்பென்ற கண்ணாடியை
உடைத்துப் பார்த்ததன்
வேரைத் தேடினாய் ; - இன்று
கீறல்களையொட்டி
புதுமெருகு
பூசமுடியாதென்பதை
புரிந்துகொண்டாயா...?
என் எதிரியா நீ...?
எங்கிருந்து வந்தாய்...?
என் தலை கோதிக் கோதி
ஓங்கிக் குட்டுமுன்
சூட்சுமக் கரங்களோடு
எங்கிருந்து வந்தாய் நீ...?
போதுமுன் சுயநலத்தை
இத்தோடு
நிறுத்திக்கொள் ;
தலைகோதுமுன்
துரோகத்தை
கொத்தோடு
தூக்கியெறி !
ஓர்
அந்தகாரக் காரிருளில்
என் நிழல்தேடி
நான் சோர்ந்த வேளை,
உன் விரல் தீண்டித்
திரை அகன்று,
புதுவெளிச்சம்
பாய்ந்தென்
பூஞ்சோலை
பூத்ததென்பேனோ
இனிமேலும்...?
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Thursday, November 1, 2007
எனது துயரங்களை எழுதவிடு...!

பொன்மஞ்சளின் தீற்றலோடு
இளஞ்சிவப்பு மலருரசிச்செல்லும்
மெல்லிய வாடை சுமந்த காற்று
உன் தேநீர்க்கோப்பையின்
ஆவிகலைத்துச் செல்லும்
இக்கணப்பொழுதில்
எனது கவிதைகளில்
சோகம் அழித்து,
காதலையும்,கனவுகளையும்
அழகாய்ப் பதித்திட
அன்பாய்க் கட்டளையிடுகின்றாய் !
ஐரோப்பாவின் குளிர்ந்த தெருக்களில்
உலாவி நடக்கவும்,
சோம்பிப்போய்ப் படுக்கையில்
குலாவிக்கிடக்கவும்,
தேவதைகளின் தாலாட்டில்
உலகம் மறக்கவும்
உனக்கு வாய்த்திருக்கிறது !
நாளைக்கே
நானும் கொல்லப்படலாம் ;
சோகம் தவித்துக்கனக்குமெனது
மெல்லிய மேனியில்
மரணம் தன் குரூரத்தை - மிக
ஆழமாக வரையவும் கூடுமான
அக்கணத்திலும்...
உனது கோப்பைகளில் திரவங்கள்
ஊற்றி வழிந்திட,
தேவதைகள் இதழ்ரேகை
தீர்க்கமாய்ப் பதிந்திட,
மாலை வேளைகளுனக்குச்
சொர்க்கத்தை நினைவுறுத்தும் !
வாழ்க்கை
வளர்ப்பு நாய்க்குட்டி போல்
வசப்பட்டிருக்கிறதுனக்கு !
உலகச்சோகங்களனைத்தும்
கரைத்தூற்றப்பட்டு
நான் மட்டும் வளர்ந்தேனோ...?
ஒரு கோடித்துயரங்கள்
தீப்பாறைக் குழம்புகளாயென்
உள்ளே கிடக்கையில்
எனது விரல்களிலிருந்து மட்டுமென்ன
செந்தேனா வடியும் ?
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Friday, October 26, 2007
எங்கள் தேசம்


அந்த மலைகளைத் தாண்டிப்
பெரும் சமுத்திரத்துக்கப்பால்,
எங்களுக்கென்றொரு
அழகிய தேசம் இருந்தது ;
அது எங்கள்
அழகிய தேசம் !
பூலோகத்தின் சொர்க்காபுரி !!
சலசலத்தோடும்
நதிக்கரைகளில்
பட்டாம் பூச்சி துரத்தியும்,
வசந்தகால மரங்களில்
பூக்கள் பறித்தும்,
பாடப் புத்தகங்களுக்கிடையில்
மயிலிறகைப்
பொத்தி வளர்த்தும் - என்
தங்கை தோழிகளுடன்
விளையாடினாள் !
சூரியக் கதிர்கள்
பயிர்களைத் தொடமுன்பு,
எம் மக்கள் - அவர்களது
விவசாய நிலங்களைப்
பார்வையிடப் புறப்படுவர் !
அன்பையும்,
ஆரோக்கியத்தையும்,
ஒற்றுமையையும் ,
உயர் குணத்தையும்
மழலைகளுக்கு - எம் மாந்தர்
உணவுடன் ஊட்டி வளர்த்தனர் !
மழை பொய்க்கவில்லை ,
வெயில் வாட்டவில்லை ;
பஞ்சம்,பிணி,பட்டினியென
எம் மக்கள் வாடவில்லை !
எனினும் - ஓர்
இருண்ட அமாவாசை இரவு
எங்களுக்கு மட்டும் விடியவேயில்லை !
அன்றுதான்
அந்த அந்நியதேசத்து
ஆக்கிரமிப்பாளர்கள் வந்தனர் ;
எனது அழகிய தேசம்
ஆயிரம் துண்டங்களாக ,
நாமெல்லாம் ஒரே இரவில்
அடிமைகளாக மாறிப் போனோம் !
அதன் பிறகு வந்த
பௌர்ணமி நிலவும்
தீப்பிடித்தெரிந்தது ;
அழகிய தேசம்,
அழுகிய தேசமாகவும்,
அழவைத்த தேசமாகவும்
மாறிவிட்டதைக் கண்டு !
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Friday, October 12, 2007
மழை

மழை!
ஒரு வரி
ஹைக்கூ கவிதை!
பெருவிருட்சங் கொண்ட
வனாந்தரங்கள்
ஜீவராசிக்கனுப்பும்
வான்வெளிக் கடிதம்!
நீலக்கடல்,
நீர் வீழ்ச்சி,
நீர் நிலைகளனைத்தினதும்
உதடுகள் முணுமுணுக்கும்
தாய் மொழி!
மேகத் துணி மூட்டையை
யாரோ இறுக்கிப் பிழிந்து விட்டு
சூரியனின் மேலே
காயப் போட்டார்களோ;
இப்படி இருண்டு கிடக்கிறதே!
மழைச் சாரல்
சற்று அதிகரித்துவிடின் - நம்
மானிடர் விழிகளில்
தொடர்ச்சியாய் தூறல்;
ஒன்று காய்ச்சலால்,
மற்றது வெள்ளப் பாய்ச்சலால்!
ஒரு நாழிப் பொழுதில்
ஒரு கோடிப் பிரசவங்கள்
ஆகாயத்திற்கு;
ஒரு ஊழிப் பொழுதின்
வேதனைகளை வெளிப்படுத்தும்
இடி மின்னல் வார்த்தைகள்
புரிகிறதா உனக்கு....?
- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Friday, September 28, 2007
நடுநிசியிலெனது தேசம்...!

பகல் மறையும் பொழுதுகளில்
ஆரம்பிக்கும்
எம்மக்கள் பதற்றம்...
மெல்ல இருட்ட ஆரம்பிக்கும்-எங்கள்
உவகையெல்லாவற்றையும்
உள்வாங்கி...!
குண்டு விழும்,
விழுந்த இடத்தைச் சிதறடிக்கும்,
இடி போலச் சத்தங்கேட்கும்,
தூரத்து அவலக்குரல்கள்
குண்டு போடப்படுவதை
உறுதிப்படுத்தி-தொடர்ந்து
எதிரொலிக்கும் !
துப்பாக்கிகள்
வீட்டுக்கதவு தட்டும்,
சகல குடும்பத்தினரதும்
கதறலுக்கப்பாற்பட்டு-இளைஞர்கள்
கடத்தப்படுவர் !
பௌர்ணமியும்
பார்த்து அழும்
வதைப்படுதல் கண்டு !
தினந்தோறும்
கடற்கரை,வயற்காடு,
வீதியோரம், களத்துமேடு,
பொதுமயானம், புளியந்தோப்பு,
எங்கும் கண்டிடலாம்...
எவர்க்கேனும் மகனாக,
கணவனாக,தந்தையாக,
சகோதரனாக,சினேகிதனாக
வாழ்ந்து வந்தவர்களின்
சடலங்களை...!
'இன்றைக்கெவர்க்குச் சாவோ..?"
பதுங்கு குழியிலிருந்தவாறே
உறவினரை எண்ணிப்பார்த்து
உயிர்துடிக்கும்.
மூச்சடக்கி, மூச்சடக்கி
உள்நெஞ்சுக்கேவல் எழும் !
அனைத்தும் முடிந்தநேரம்
வீட்டுச்சுவர் மேல் - சத்தமின்றி
வெயில் ஏறும் !
- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை
Tuesday, September 18, 2007
நான்கு மூலைகளிலும் சபிக்கப்பட்ட வாழ்க்கை...!

கருணை வழிந்தோடும்
இடுங்கிய விழிகளினூடு
எதுவும் இயலாதவளாக
என்னைப் பார்க்கிறாய்!
காலம் சுழற்றியடித்துச்
சுருங்கிய உடலோடு,
விபத்துக்குள்ளான - உன்
பேரனைப் பார்த்துப்போக
கடன்வாங்கித் துரிதகதியில்
தலைநகர் வந்ததாக
காவல்துறையிடம் கெஞ்சுகிறாய்!
அழகாயிருந்த வாழ்க்கையின்
நான்கு மூலைகளும் சபிக்கப்பட்டு
நாறடிக்கப்பட்டிருக்கும் போது
மன்றாடியென்ன பயன்...?
மன்னித்துக்கொள் தாயே...!
உன் பனையோலைப்பையின்
ஒவ்வொரு இடுக்காய்த் தேடியும்
கைக்குட்டைச் சில்லறைகளையும்
பனங்கிழங்குகளையும் தவிர
வேறெந்த ஆயுதத்தையும்
இவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை...!
காவல்துறை வாகனத்தில்
கைப்பிடித்து ஏற்றப்படுகின்றாய்...
என்ன செய்ய...?
நீ மூதாட்டிதானெனினும்
அடையாளஅட்டையில்லையெனில்
உன்னை வதைப்படுத்தி விசாரிக்காமல்
விடமாட்டார்கள் - உன்
நெற்றியில் பொட்டிருக்கும் காரணத்தால்...!
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை
Thursday, September 13, 2007
வசந்தங்கள் வர வழி விடு

உனதிருண்ட வாழ்வில்
ஒரு பொழுதிலேனும்
ஒளிக் கீற்றொன்று
உட்பிரவேசிக்குமென்ற
நம்பிக்கையுடனாவது-கொஞ்சம்
நிம்மதியாய்
உறங்கக் கூடாதா தோழி?
விழிநீர் வற்றும் வரை
கதறியழுதுன்
காலத்தைப் போக்குவதாக
வாதம் புரிகிறாய்;
இருட்டு மட்டுமேயுன் எதிர்காலத்தைச்
சூழ்ந்துள்ளதென்று
ஏங்கித் தவிக்கிறாய்!
வசந்தம் - உன்
வாசலுக்கு மட்டும்
வரக்கூடாதென்கிறாய்.
வைகறை விடியலும் - உன்
வாழ்விலொருபோதும்
இல்லையென்கிறாய்!
உன்னிதயத்தைச் சிலுவையிலேற்றிச்
சித்திரவதை செய்யும்-அவன்
சம்பந்தப்பட்ட நினைவுகளை
மறக்க முடியாதென்கிறாய்.
மருந்து போடக்கூடாதென்கிறாய்!
உன்னால் உயிர் பிரிந்த-அவன்
உனக்கான நிம்மதியையும்
உருவிக்கொண்டு போனதாக
உள்ளம் குமுறுகிறாய்.
உச்சந்தலை மேல்
இடி வீழ்ந்துன் இதயம் நொருங்கியதாய்
எண்ணித்தவிக்கிறாய்!
உன் சுற்றமேயிப்போது
உனைச் சீறுகிறது.
வார்த்தை அம்புகளால்
வதைக்கிறது.-அவன்
காதலை ஏற்க மறுத்த
கர்வம் மிகுந்த அந் நாட்களில்
கணப் பொழுதிலேனும்
இப்படி நேருமென நீ
எண்ணிப் பார்த்ததுண்டா?
அவன் உறங்கும் கல்லறையில்
வீழ்ந்து கதறியழுதாவது
நீ செய்த பாவத்துக்கு
பரிகாரம் தேட முயற்சிக்கிறாய்!
உன்னிடம் அன்பை யாசித்து
அபயம் தேடிய அவனுக்குன்னால்
ஆறுதல்தான் கூற முடியவில்லை.
வார்த்தைகளால் காயப்படுத்தாமலாவது
இருந்திருக்கலாமல்லவா?
விதி உனக்கென்று
வரைந்த பாதையினூடு-உன்
வாழ்க்கை போகிறது.
நீ அதற்கென்
செய்வாய் தோழி?
நீ செய்த தவறுக்காக
காற்று – உனை மட்டும்
விட்டுவிட்டு வீசுகிறதா?
நிலா –தன்
பால் கிரணங்களை உன்மேல்
பொழிய மறுக்கின்றதா?
உனை நனைக்க
மழை தூற மாட்டேனென்கிறதா?
அவன் போய்விட்டான்
இனி உனக்கான தேசத்தில்
நிச்சயமாய் வாழ வரமாட்டானென்ற
நிதர்சனத்தை
நீயுணர்ந்த போதிலும்
நிம்மதியிழந்து தவிப்பதேன் தோழி?
கண்ணீரால் வரையப்பட்ட-உன்
காதல் சரித்திரம்
மறக்கவே முடியாததொன்றுதான்.
ஆனாலும் உனக்கான வாழ்க்கை
இன்னும் மிச்சமிருக்கிறதென்கிற
உண்மையை உணர்வாயா?
வசந்தத்தின் ஆணி வேர்கள்
உனை நோக்கி வருகிறது
இதய வாசலைத் திறந்துவிடு தோழி!
வாழ்க்கை உனை
வாழ அழைக்கிறது-ஒரு
முன் மாதிரியாய் வாழ்ந்துகாட்டு தோழி!
ஒரு பூ
உதிர்ந்து போனதென்று
செடிகள் என்றேனும்
சித்தம் கலங்குவதில்லை.
கணப்பொழுதுதான் தனக்கு
காட்சி தர முடிகிறதென்று
வானவில் ஒருபோதும்
வருத்தப் பட்டதில்லை!
- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை
Saturday, September 8, 2007
நிசப்தம் விழுங்கும் உறக்கம்...!

நிசப்தித்திருந்தது நள்ளிரவு;
காலமோடும் சப்தம் கூட
காதுக்குள் அதிர்ந்தறைந்தது...!
ஒரு அசாத்தியமான மௌனத்தின்,
அமைதியின் உலகை
பேரிரைச்சலின் கை
அறைந்து சாத்தியதும்,
எனதான தேசம்
பற்றியெரிய தொடங்கியதுமான
அன்றிலிருந்துதான்...
இமைகளின் மேல் மயிலிறகால்
'உறக்கமே வருக'வென
மெலிதாய் எழுதி வைத்திடினும்
விழிகளில் ரயிலூர்ந்ததாய்
உறக்கம் மட்டும் வரவே வராது !
இப்படித்தானே இருந்து வருகிறது
தமதான தேசத்தைப் பிரிந்து,
சுயததை இழந்த
ஒவ்வொரு மனிதனுக்கும்...
ஒவ்வொரு நள்ளிரவும்...
- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Saturday, August 25, 2007
விழிகளில் வழியும் ஏக்கம் !

உனது உயிர்
போகும் பாதையைப்
பார்த்த படியே
விழிகள் திறந்தபடி
உயிர்விட்டிருந்தாய் !
ஏழு வானங்களையுமது
எந்தத் தடைகளுமின்றித்
தாண்டிச்சென்றதுவா...?
திறந்திருந்த வாய்வழியே
இறுதியாக என்ன வார்த்தையை - நீ
உச்சரிக்க நினைத்திருந்தாய்...?
நீ
நிரபராதியோ...
தவறிழைத்தவனோ...
உயிர்விடும் கணம்வரை
எப்படித் தாங்கிக் கொண்டாய்
அவ்வலிகளை ?
உன் நகங்கள்
ஒவ்வொன்றாக பிடுங்கப்பட்டிருந்தன .
நீ பிறந்தவேளையில்
ஒரு மெல்லிய பூவிதழ்போல்
அவை இருந்திருக்கக்கூடும் !
உன் உடம்பு முழுக்க
வரி வரியாய்
காயங்கள்...வீக்கங்கள்...
சிறுவயதில் நீயும்
சிறு சிராய்ப்புக்கு அழுதபடியே
எச்சில் தடவியிருப்பாய் !
என்றபோதிலும்
எதுவுமே சொல்லாமல்
உயிர் விட்டிருந்த உனது
விழிகளில் மட்டும்
எஞ்சியிருக்கிறது இன்னும்
ஏதோ ஒரு ஏக்கம்...
ஏதோ ஒரு தாகம்...
- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Thursday, August 9, 2007
இன்னும் எழுதப்படாத என் கவிதை

பொய்யைக் கனவைக் கற்பனையைக்
கவிதையாய்க் கிறுக்கிடினும்
பிரமிப்புகள் நீங்கலாக
என்னவெல்லாமோ
எஞ்சியிருக்கின்றன இன்னும்
எழுதப்படாமலே இங்கு...!
வானவில்லின் வசீகரம்,
வண்ணத்துப்பூச்சி அழகு,
இதழ் விரிக்கும் பூக்களின் மென்மை,
காதலியின் பொய்க்கோபம்-எல்லாமே
எழுதப்பட்டிருப்பினும்...
எந்த மொழியில்,
எந்தச் சொற்களைக் கொண்டு,
எப்படி எழுதி முடிப்பேன்
என் தாயின் புன்னகையை
ஒரு சில வரிகளில்.....?
- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Saturday, August 4, 2007
வெறுக்கப்படும் மழைப்பொழுதுகள்...!

மழை
பிடித்திருந்தது !
வேர்த்துப் புழுங்கிச் செத்து,
மேற்சட்டை வெதும்பி
முதுகோடு ஒட்டும் கணங்களில்
நிலா மறைத்து,
வானிலிருந்து துளித்துளியாய்க்
கீழிறங்கும்
நீர்த்துளிகளைப் பிடித்திருந்தது!
நெஞ்சைக் குளிர்விக்கும்
ஈரச்சாரலோடு,
நாசியை வருடும்
தூசு மணத்தில்
வினாடி நேரம் - நான்
என்னை மறந்ததுமுண்டு!
வாய்திறந்து நா காட்டி,
மழைத்துளியை உள்வாங்க
மனம் விரும்பிச் சிறுபிள்ளையாய்ச்
செய்து பார்த்ததுமுண்டு!
முகாம் கூரை விரிந்து
மழைத்துளிமுக்காடு நனைத்த கதைகளை,
சுவர் இடிந்து விழுந்துயிர்கள்
நசுங்கிச் சக்காகிச் சாறாகிப்
பிரிந்த கதைகளை,
வெள்ளம்
அழையா விருந்தாளியாய்
வீட்டினுள் புகுந்து
குடியிருந்தவர்களையெல்லாம்
கூரையிலேற்றிக் குடித்தனம் செய்யச்
சொன்ன கதைகளையெல்லாம்
பேசப்பார்க்கக்
கேட்கும் கணங்களிலெல்லாம்
ஏனோ - மழையையும்
மழை சார்ந்த எதையுமே
பிடிக்காமல் போகிறது !
- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Friday, August 3, 2007
எலும்புக்கூட்டு ராஜ்ஜியங்கள்

காற்றினைப் போல்
எங்கள் வாழ்க்கை,
ஓரிலக்கில்லாமலும்...
அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டும்...!
ஓடும் நதியினைப் போல்
எங்கள் பயணம்,
ஓரிடத்தில் தரித்திருக்க முடியாமலும்...
திக்குதிசையின்றி பாய்ந்தோடிக்கொண்டும்...!
வானவில்லினைப் போல்
எங்கள் சந்தோஷம்,
நிலைத்து நிற்காமலும்...
உடனே கலைந்து போவதாயும்...!
மயானபூமியைப் போல்
எங்கள் கனவுகள்,
பயமுறுத்தும் அமைதியோடும்...
எலும்புக்கூடுகளின் ராஜ்ஜியங்களோடும்...!
பாழடைந்த வீட்டினைப் போல்
எங்கள் எதிர்காலம்,
எப்பொழுதும் பயமுறுத்திக்கொண்டும்...
எவராலும் கவனிக்கப்படாமலும்...!
மீஸான்கட்டைகளைப் போல்
எங்கள் சமூகம்,
அழிந்துகொண்டே இருப்பதாயும்...
அடையாளத்துக்காக வேண்டி மட்டுமாயும்...!
மணல்மேட்டினைப் போல்
எங்கள் தேசம்,
சரிந்துகொண்டே இருப்பதாயும்...
விலங்குகளின் எச்சங்களைச் சுமந்துகொண்டும்...!
ஊசலாடும் ஒட்டடைகளைப்போல்
எங்கள் உயிர்கள்,
எவராலும் வேண்டப்படாத குப்பையாயும்...
எப்பொழுதிலும் அறுந்துவிழக்கூடியதாயும்...!
எங்களது உயிர்கள்
எடுக்கப்படும் கணப்பொழுதுகளில்
என்ன செய்துகொண்டிருப்பீர் தோழரே..?
ஓர் அழகிய பாடலின்
ஆரம்ப வரிகளை
முணுமுணுத்துக் கொண்டிருப்பீரோ...?
- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Thursday, August 2, 2007
வாழ்க்கையின் மௌன ஓவியம்...!

எதனாலும் நிற்காமலும்
எதுவாகவும் ஆகாமலும்
எப்படிப் போகிறது வாழ்க்கை...?
சடுதியாய்ச் சந்திப்புகள் - குருதிச்
சகதியாய் விபத்துகள்,
எவராலும் தடுக்க முடியாதவையாக
அன்றாடம் நிகழ்கின்றன.
விரும்பியபடியே வாழ்க்கையெனினும்,
வாழ்க்கையின் மௌன ஓவியத்தை
விரும்பிய நிறங்களைக் கொண்டு
வரைய முடிவதேயில்லை !
வாழ்க்கை போகிறது
அதனுடனே நானும்...
சிலவற்றைப் பெற்றுக் கொண்டும்...
நிறைய இழந்து கொண்டும்...
- எம்.ரிஷான் ஷெரீப் ,
மாவனல்லை,
இலங்கை.
Subscribe to:
Posts (Atom)


