Showing posts with label சிறப்பு. Show all posts
Showing posts with label சிறப்பு. Show all posts

Monday, January 15, 2018

ஆகாயக் கடல்


எத் திசையிலும் எப்போதும்
சுழன்றடிக்கலாம் காற்று
அதன் பிடியில்
தன் வேட்கைகளையிழந்த
ஓருருவற்ற வானம்
மேகங்களையசைத்து அசைத்து
மாறிக் கொண்டேயிருக்கிறது


விதவிதமாக வர்ணங்களைக் காட்சிப்படுத்தும்
தொடுவானத்தினெதிரே
ஒற்றை நிறம் நிரப்பிப் பரந்து கிடக்கிறது கடல்
ஆகாயத்தைப் போலவன்றி
சமுத்திரத்தின் இருப்பு
ஒருபோதும் மாறுவதில்லை
எவ்வித மாற்றமுமற்ற
கடலின் அலைப் பயணம்
கரை நோக்கி மாத்திரமே


பருவ காலங்களில்
வானின் நீர்ச் செழிப்பில்
கடல் பூரித்து
அலையின் வெண்நுரையை
கரை முத்தமிடச் செய்கிறது


இராக் காலங்களில்
தூமகேதுக்களின் வழிகாட்டலின்றி
கடற்பயணங்களில்லையென்றபோதும்
ஒன்றுக்கொன்று நேரெதிர்
ஆகாயமும் கடலும்


நேரெதிராயினும்
இப் புவியில்
ஆகாயமின்றிக் கடலேது


கரை
கால் நனைக்கக் கால் நனைக்கக் கடல்

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி - அம்ருதா ஜனவரி 2018 இதழ், வல்லமை இதழ், வார்ப்பு இதழ், பதிவுகள் இதழ், தமிழ் எழுத்தாளர்கள் இதழ்.

Monday, May 1, 2017

தென்னைகளில் கள்ளெடுப்பவள்






பக்கவாதப் புருஷனுக்கென முதலில்
வீட்டுத் தென்னையில் கள்ளெடுத்தவளின்
தோப்பு மரங்கள்
அத் தடவை காய்த்துக் குலுங்கியது கண்டு
தொடக்கத்தில் ஊர் முழுவதும்
வியப்பாகக் கிசுகிசுத்துக் கொண்டார்கள்
பெண்ணேறும் தென்னைகள்
அதிகமாகக் காய்க்கிறதென


விடியலிலும், இரவிலுமென
எக் காலத்திலும் மரமேறுபவள்
எல்லாத் தென்னைகளினதும் உச்சிகளைத் தொடுத்து
நீண்ட கயிற்றினால் முடிச்சிட்டுக் கட்டினாள்


ஓரோர் மரத்துக்கும்
கயிற்றின் வழியே நடந்து சென்று
மண்பானைகளைப் பொருத்தியும், எடுத்தும் வரும்
கள்ளெடுக்கும் செம்பருத்தி
தென்னை ஓலைகளினூடே தொலைவில்
கடல் மின்னுவதை
எப்போதும் பார்த்திருப்பாள்


தென்னந் தோட்டங்களை வைத்திருப்பவர்கள்
அவளைக் காண வரும் பின் மதியங்களில்
தம் தோப்புக்களைச் செழிக்கச் செய்ய வேண்டுமென்ற
அவர்களது வேண்டுகோள்களோடு பணத்தையும் வாங்கி
பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வாள்


ஒரு தொகை பணம் சேர்த்த பின்
கடலின் அப்புறம் தெரியும் தீவுத் தென்னைக்கு
கயிறெரிந்து முடிச்சிட்டு
கணவனோடு தப்பித்துச் செல்லும் வீரியம்
அவள் கண்களில் மின்னும்
அப்போதெல்லாம்

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி - காலச்சுவடு இதழ்-207, தமிழ் எழுத்தாளர்கள் இதழ், ஊடறு, வல்லமை, வார்ப்பு

Monday, April 10, 2017

அகாலத்தில் மரித்தவனின் கைபேசி எண்கள்



மரணித்தவர்களுக்கு வரும் கைபேசி அழைப்புக்கள்
அலைவரிசைகளில் அதிர்ந்து பெருகி
பேரலையாகித் துரத்த
கரை மணலென எங்கும் பரந்து விடுகின்றன
அவர்களது தொலைபேசி எண்கள்

கடற்கரைச் சிப்பிகள் பொறுக்கும் சிறுமி
மீன் வலைக்காரன்
மணற் சிற்பக் கலைஞன்
உப்பு நீரில் கால் நனைப்பவர்களென ஓரோரும்
தாமறியாது எண்களைப் பொறுக்கி
கடலில் எறிந்து விடுகிறார்கள்

அன்றிலிருந்து
இருளில் தொலைந்துவிடும்
ஆத்மாக்களின் சுவடுகள்
அம் மணலை மிதித்துதிர்க்கும் துகள்கள்
தனித்தனி எண்களாகி
படகுகளென வெளியெங்கும் மிதக்கும்
எக் காலமும்


அவ்வாறானதொரு காலத்தில்
அகாலத்தில் மரித்தவனின் எண்கள்
அவனை அழைப்பவர்களது விரல் துடுப்புக்களினூடு
அசைந்தசைந்து... அசைந்தபடியே

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி - காலச்சுவடு தழ்-207, மிழ் எழுத்தாளர்கள் தழ், வல்மை, வார்ப்பு
Painting - Kipayes