Friday, May 6, 2011

போர்ப் பட்டாளங்கள்

மேசையில் ஊர்வலம் போகும்
குதிரைப் பட்டாளங்களைப் பார்த்திருந்த சிறுவன்
உறங்கிப் போயிருந்தான்
சிப்பாய்களிறங்கி தப்பித்து வந்த
முற்றத்தில் யானைகளின் நடனம்

தூரத்து மேகங்களிடையிருந்து
திமிங்கிலங்கள் குதித்திட
பாய்மரக் கப்பல்களின் பயணம்
கைகொட்டிச் சிரிக்கும் குழந்தையின் காலடியில்
படை வீரர்களின் வாட் போர்
கதை சொல்லும் தங்கையின் மொழியில்
கடற்குதிரை நடை

சிங்க வேட்டை சுவர்ப்படத்தின் கீழே
சிறுவனிடம் கதை கேட்கும் கிழச் சிங்கம்
விளக்கின் நிழலில் குள்ளநரி
கூடையில் இரட்டைக் குழந்தைகள்
தாலாட்டும் அம்மாவின் புத்தகத்தில்
கதைமாந்தர்களின் உறக்கம்

செதுக்கிய மரச் சிற்பங்களிடையிருந்து
எழுந்து நிற்கும் புதுச் சிலை
அப்பாவின் கை தொட்டு
உரத்துப் பேச ஆரம்பிக்கிறது
நிலவிலிருந்து இறங்கிவரும் பாலம்
யன்னல் கதவிடையில் முடிய
கட்டிலுக்கு இறங்கி வருகின்றனர்
தேவதைகளும் சாத்தான்களும் ஒருசேர

படுக்கையில் எழுப்பிய மாளிகை உச்சிகளில்
கொடிகள் பறக்கின்றன
வழமை போலவே
கீற்றுப்படைகளோடு வந்த ஒளி
மூடியிருந்த கண்ணாடி யன்னலோடு போரிட
சிதறிய வெளிச்சம் அறை நிரப்பி
என் கனவு கலைத்திற்று

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.



நன்றி
# உயிர்நிழல் இதழ் 33
# அதீதம்
# உயிர்மை
# வீரகேசரி வார இதழ்
# தடாகம்
# நவீன விருட்சம்
# காற்றுவெளி
# திண்ணை
# தமிழ் முரசு அவுஸ்திரேலியா