Friday, April 17, 2009

சாகசக்காரியின் வெளி

அதீத மனங்களில் மிதந்து வழியும்
ஆசைகளை அவளறிவாள்
தன் வஞ்சக விழிகளில் சிரித்து
மென்மை வழியும் குரலினை
சாம்பல் காலங்களின் முனையினில் மாட்டி
தூண்டிலென எறிவாள்

கபடங்களறியாக் கண்களைக் கொண்ட
பிஞ்சுமனங்களை அவளிடம்
கொடுத்துப் பார்த்திருங்கள்
அல்லது
உலகம் மிகவும் நல்லதெனச்
சொல்லிக் கொண்டிருக்குமொரு மனிதனை
அவளிடம் விடுங்கள்
அம் மனிதன் தானாகவே
முன்பு நல்லதெனச் சொன்ன நாவை
கருஞ்சுவரில் தேய்த்துக்கொள்ளும்படியான
நஞ்சை மிடறாக்கி
அருந்த வைத்திருப்பாள் அவள்
கைவசமிருக்கும்
எல்லா நெஞ்சங்களையும்
கெட்டதாக்கி அழுகவைத்துப்
பின்னொருநாள் புது இதயங்களுக்கு
மீண்டும் தூண்டிலிடவென விட்டுச் செல்வாள்
அழுதழுது நீங்கள்
அவளைத் தேடிச் சென்றால்
உங்களைத் திரும்பச் சொல்லி
மென்மையானதென நீங்கள் சொல்லும்
அவளது பாதங்களால் எட்டியுதைப்பாள்
கொடுந்தீய வார்த்தைகளையெல்லாம்
எச்சிலோடு காறி உங்கள்
வாடிய முகங்களில் துப்பிடுவாள்

பிஞ்சு மனங்களை, நல்ல மனிதனை
வக்கிரங்களறியவென
அவளிடம் கொடுத்த நீங்கள்
இதையெல்லாம்
சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்
ஏனெனில் அவள்
சாகசக்கார வெளியில்
வன்முறைகளை விதைப்பவள்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


லண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பான இக்கவிதையை ஒலிபரப்பாளர் ஸைஃபா பேகம் அவர்களின் குரலில் கேட்க...





நன்றி - 
* நவீன விருட்சம் காலாண்டிதழ்
* லண்டன் தமிழ் வானொலி

Thursday, April 9, 2009

கண்ணீர்ப் பிரவாகம்

2009, பெப்ரவரி மாத வடக்குவாசல் மாத இதழில் பிரசுரிக்கப்பட்ட எனது 'கண்ணீர்ப் பிரவாகம்' கவிதையினை தமிழ்மணம் நட்சத்திரப் பதிவாக இங்கே பார்க்கலாம்.

Wednesday, April 1, 2009

துரோகிக்கு மிகவும் நன்றி

வஞ்சித்த சினேகமொன்றினை
எண்ணித்தனித்துச் சோர்ந்து
கதறிக் கதறியழுதவேளை
நீயுள் நுழைந்தாய்
மிகுந்து வெடித்த
கவலைக்கான கலங்கலிலுன்னுருவம்
தட்டுப்படவில்லையெனினும்
தலைசாயத் தோள் கொடுத்து
மிதந்த துயரையெல்லாம்
மேலும் மேலும் அழுதுதீர்க்கும்படி
ஆதரவாய்ச் சொன்னாய்

கவலையறியாக் கண்ணீரறியா
தனித்த ஜீவனொன்று
காலம் காலமாய்ச் சேமித்த விழிநீரெல்லாம்
அணை உடைப்பெடுத்துத் திமிறிப் பொங்கி
உன் தோள் நனைத்த கணத்தில்
அன்னையின் அணைப்பையொத்த
அன்பான தலைதடவலுன்
கருணை மனம் சொல்லிற்று

எதற்கிந்த அழுகை
ஏதுன்னைக் கதறச் செய்தது
எதையுமே நீ கேட்டிடவில்லை
தூய அன்பைக் கொன்றவனதை
மயானத்தில் புதைத்த கதையின்
ஒரு சொல் பற்றிக் கூட
உன்னிடம் கேள்விகள் இருக்கவில்லை
அத்துயர்பற்றியேதும் நீ அறிந்திருக்கவுமில்லை

நீ யாரெனத் தெரிந்திருக்கவில்லையெனினும்
அக்கணத்தில் நீயொரு
ஊமையாய் இருந்தாய்
செவிடனாய் இருந்தாய்
எதையுமே அறியாமல்
பாசமாய் அரவணைத்தவொரு
பொம்மையாய் இருந்தாய்
வழிந்த துளிகள் காய்ந்து
கண்ணீர் மீதமற்ற பொழுதில்
புன்னகை தந்தவொரு தேவதூதனாயிருந்தாய்

வாழ்வின் பாதங்கள்
வழிதவறிப் போனதை மட்டும்
எக்கணத்திலும் கேட்டாயில்லை
வழிய வழிய அன்பைத்தந்து இப்பொழுதெல்லாம்
நயவஞ்சகனொருவன் பற்றிய
பழங்கால எண்ணங்கள் மிகைக்காமல்
நேசத்தின் அழகிய பாடல்களை
காலங்கள் தோறும் காற்றில் மிதக்கும்படி
எப்படிப் பாடுவதெனச் சொல்லித் தருகிறாய்

சகா
இரு கரங்கள் உயர்த்திய
புராதனப் பிரார்த்தனையொன்றின் பலனாக
அமைதியையும் அன்பையும்
அகிலம் முழுதுமான மகிழ்வையும் நிம்மதியையும்
அள்ளியெடுத்து நீ வந்தாயோ
வசந்தங்கள் நிறைந்து
நறுமண வாடை சுமந்த தென்றலுலவும்
ஓரழகிய பூஞ்சோலை வாழ்வின்
பளிங்குப் பாதை வழியே
எந்த இடர்களும் இடறல்களுமற்று
சிறுமழலையாய் விரல் பிடித்து
வழிகூட்டிப் போகிறாய்

இப்போதைய அழகிய வாழ்வின்
நேசனாயுனைச் சேர்த்த
அந்தக் கண்ணீருக்கு நன்றி
கரிய இருள் பரவிய கொடிய வழியினில் அழைத்துக்
காயங்கள் தந்து கண்ணீர் தந்து
அன்பான உன்னிடம்
கைவிட்டுச் சென்ற
அந்தத் துரோகிக்கு மிகவும் நன்றி

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை


நன்றி - 'நாம்' மலேசிய காலாண்டிதழ் ஜனவரி - மார்ச் 2009