Monday, July 1, 2013

செங்குருவி



மான்கள் துள்ளும் அவ் வனத்தில்
செங்குருவிக்கென இருந்ததோர் மரம்
தனித்த மீன்கொத்தியொன்று அமரும் கிளைக்கு
நேரெதிரே இருக்கும் பெருந்தடாகம்
செங்குருவிக்குப் பிடித்தமானது

அல்லிப்பூக்களுக்குச் சிறகு முளைத்து
பறந்து திளைக்கும் கனவுகளையெல்லாம்
சொட்டு நீருஞ்சி வரும் கணங்களில்
குளத்தில் விட்டு வரும் செங்குருவி
கிளையில் அமர்ந்திருக்கும்

தன் ஒற்றைக் கண்ணால் பார்க்கும் உதிர்ந்த மயிலிறகு
சொன்ன கதைகளையெல்லாம்
கேட்டுக் கேட்டுச் சலித்திருக்கும் செங்குருவி
வானவில் விம்பம் காட்டும்
தெளிந்த தடாகத்தைத் தன் பச்சை விழிகளால்
அருந்தித் திளைத்திருக்கும்

அச் செங்குருவிக்கின்று
எந்தத் தும்பி இரையோ
இல்லை எக் கிளைக் கனியோ

நடுநிசியொன்றில் அகாலமாய்
செங்குருவியின் பாடலொலிக்கக் கேட்பின்
அதன் ப்ரியத்துக்குரிய மரத்திலேறிய சர்ப்பம் குறித்த
செய்தியை அறிந்துகொள்ளும்
அல்லிப் பூக்களும்
குருவிச் சிறகு தொட்டுத் தனித்துப் போன
மேகங்களும்
பின்னர் துயரத்தில் கதறும்

- எம். ரிஷான் ஷெரீப்
07012012
 
நன்றி
# அம்ருதா மாத இதழ்யாத்ரா கவிதைகளுக்கான இதழ், உயிர்மை, திண்ணை, பதிவுகள்