Wednesday, October 15, 2014

மலையுச்சிப் பூவின் தியானம்




கைக்குழந்தை உள்ளங்கையென மொட்டவிழ்கிறது
பறிக்கப்படாத கனிகள் வீழ்ந்தழியும் மலைத் தரைகள்
வனப்பு மிக்க காடுகளைச் சுமக்கின்றன தம்மில் அவை

அந்திப் பறவைகள்
கறுப்புத் திட்டுகளாகப் பறந்து மறையும்
மாலை நேரங்களில் வனங்கள் என்ன செய்யும்

உன் பாடலெனப் பொழிந்திடும் மழை பார்
ஒவ்வொரு துளிகளிலும் உறைந்திருக்கக் கூடும்
தாண்டிப் பறந்த பட்சி இறகுகளின் ரேகைகள்

நீ மிதந்திருக்கிறாய் ஒரு வெண்குதிரையின் மீது
யாரும் அகற்றிடா ஆதிச் சருகுகள் மூடி மறைத்திருக்கும்
தடித்த வேர்கள் பிடித்து வைத்திருக்கும்
கருங்கற் குகைகளிடை வழி
உனது பயணப் பாதையல்ல

நீ பறித்து வரச் சென்ற மலையுச்சிப் பூவின் தியானம்
கடவுளுக்கானது
காட்டின் விரூபங்களை மறைக்கும் இராப் பொழுதுகளில்
உதிக்கும்
மலையுச்சிப் பூவின் சோர்ந்திடாத் திமிர்

உனது இலக்குகளில்
பகலைக் கரைத்த ஈரம் சொட்ட அழுத சூரியன்
எங்கோ தொலைந்துபோகும் இத் தருணத்தில்
தாமதியாதே
வனத்தின் வேர்களில் உனது புரவிகள் சற்று ஓயட்டும்

- எம். ரிஷான் ஷெரீப்
நன்றி

# தீராநதி இதழ் - ஆகஸ்ட், 2014, படிகள் - பத்தாவது ஆண்டுச் சிறப்பிதழ் - ஆகஸ்ட் 2014, வல்லமை இதழ், காற்றுவெளி, பதிவுகள், வார்ப்பு

Monday, May 5, 2014

விலகல்


அடைமழை பெய்தோய்ந்த
நள்ளிரவுக்கு முன்னரான பொழுதின் வளி
குளிரில் ஒடுங்கிக் கண்ணாடியில் தன்னைப் பார்க்கும்
பனியை விரலிலேந்தி கடைசிப் பேரூந்திலிருந்து இறங்கினாய்

பகலை விடவும் இருளிடம் இருக்கின்றன
பல்லாயிரம் விழிகள்
அன்று ஒவ்வொரு விழியின் துளியுமிணைந்து
தெருவெங்கும் குட்டைகளாய்த் தேங்கியிருந்ததை
தாண்டித் தாண்டி நீ வந்த காட்சி
இருளின் கறுப்புத் திரைக்குள் மறைந்தது

பட்ட மரத்தின் அடிப்பாகத்தில்
புற்றெழுப்பும் கரையான்களைக்
கொத்த வரும் சாம்பல்குருவிகளை
பொறி வைத்துப் பிடிக்க ஆவலெழும்
வேட்டைக் கதைகளை நீ கொண்டிருந்தாய்

நாம் கதைத்தபடியே நடந்து கடந்த
எனது கிராமத்தின் ஒற்றையடிப் பாதை
வழித்தடங்களிலெல்லாம் அக் கதைகள் சிந்தின
விடிகாலையில்
அக் கதைகளைப் பொறுக்கித் தின்ற சாம்பல்குருவிகள்
தொலைதூர தேசமேகிப் பின்னர் வரவேயில்லை
உன்னைப் போலவே

- எம். ரிஷான் ஷெரீப் 

# நன்றி - அம்ருதா இதழ், ஜனவரி 2014 , எதுவரை இதழ், வல்லமை இதழ், காற்றுவெளி இதழ், பதிவுகள் இதழ், இன்மை இலக்கிய இதழ்

Tuesday, April 1, 2014

நுழைதல்


எந்த நட்சத்திரமும் உதிர்ந்துவிழா பனிபடர்ந்த இரவின் காலம்
எனது கைவிரல்களை ஒற்றியொற்றி
உன் நேசத்தைச் சொல்லிற்று

பசியினைத் தூண்டும் சோள வாசம்
காற்றெங்கிலும் பரவும்
அத்திப்பூ மலையடிவாரக் கிராமங்களினூடான பயணத்தை
முடித்து வந்திருந்தாய்
குடிநீர் தேடி அடுக்கடுக்காய்ப் பானைகள் சுமந்து நடக்கும்
பெண்களின் சித்திரங்களை
புழுதி பறக்கும் தெருவெங்கும் தாண்டி வந்திருந்தாய்
வெயிலெரித்த சருமத்தின் துயரம்
உன் விழிகளுக்குள் ஒளிந்திருக்கும்
அந் நெய்தல் நிலத்தின் அழகை என்றும் மறந்திடச் செய்யாது

நகரும் தீவின் ஓசை
நீ நடந்த திசையெங்கிலும்
பாடலாகப் பொழிந்திடக் கூடும்
அனற்சூரியனை எதிர்க்கத் தொப்பிகள் விற்பவன்
வாங்க மறுத்து வந்த உன்னை நெடுநாளைக்கு நினைத்திருப்பான்

உனைத் தீண்டி நகர்ந்திருந்ததொரு விஷத் தேள்
உச்சியிலிருந்து சருக்கச் செய்தது அதன் நச்சு
எல்லாம் கடந்துவிட்டன
நேற்றிருந்த மேகத்தைப் போல
இக் கணத்து நதி நீர் போல

உனது பயணங்கள் முடிவற்றன
எல்லையற்று நீளும் உனது பாதைகள் வலியன
ஏமாற்றங்களில் தடுக்கி விழுந்து
அனுபவங்கள் பல ஒளிந்திருந்த நெஞ்சுனது
பாளங்களாய்க் கனன்றெரிந்து
உன் வாழ்வின் கதைகள் பேசிற்று
உள்ளிருந்த எனக்கான உன் நேசம் சுகமாயும் வலியாயும் மிதந்தூறிட
தெப்பமென நனைந்தேன்

நரகப் பெருநெருப்புக்கஞ்சி
எவருக்கெனவோ மூடிக் காத்திருந்த பொக்கிஷ நந்தவனமொன்று
நீ வரத் திறந்தது
அன்று
உனக்கென உதிர்ந்ததொரு மந்திரப் பூ
உனக்கெனத் தெளிந்ததொரு வாசனைப் பொய்கை
உனக்கென மட்டும் துளிர்விடத் தொடங்கியிருக்கிறது ஒரு தளிர்

எல்லாவற்றையும் குறித்துத் தெரிந்திருக்கிறாய்
ஆனாலும் சகா
நீ உணர்வதற்கும் நம்புவதற்கும்
அப்பாலுள்ளது எனதுலகம்

- எம். ரிஷான் ஷெரீப் 
# நன்றி - அம்ருதா இதழ், ஜனவரி 2014எதுவரை இதழ்வல்லமை இதழ்பதிவுகள்Painting - Abhijith

Thursday, February 20, 2014

நீந்தும் மீன்களை வரைபவள்


அக் காலத்தில் பன்புற்களை நேர்த்தியாக வரிசைப்படுத்தி
அம்மா நெய்யும் பாய்கள்
அழகுணர்ச்சியை விதந்துரைக்கும்
பலரும் கேட்டுவந்து வாங்கிச் செல்வரென
சிறுமியின் தாய் பகன்றதும்
சிலிர்த்துக் கொள்ளும் மூதாட்டி
காடுகாடாய் நதிக்கரை தேடியலைந்து
கோரைப் புற்களைச் சுமந்து வந்த
அந்தி நேர நினைவுகளை
பேத்தியிடம் பகிர்கிறாள்

'முக்காடிட்ட பெண்கள் வரைதல் தகா'
மதகுருவின் உரை சுவரெங்கும் எதிரொலிக்கிறது
பித்தேறிய ஆண்கள் கூட்டம்
நளினமான கரங்களை அடக்கிவைத்திடும்
பாரம்பரிய எண்ணச் சங்கிலிகளோடு
புனித இல்லத்தின் வாயில் தாண்டுகிறது

உயிர் ஜீவராசிகளை
வர்ணச் சித்திரங்களாக வரைவோர்
நரகத்தில் அவற்றுக்கு உயிர்கொடுக்கக் கடவர்
எனவே ஓவியம் கவிதை பாடலிசை
திறமை எதிலிருப்பினுமதைக் காண்பித்தல் கூடாது
மீறிடின் சிறுமியெனக் கூடப் பாராது
மூங்கில் பிரம்பு பேசிடுமென
தடைக் குரல்கள் பல
வீடுகள் தோறும் முழங்கித் தீர்ப்பிடுகின்றன

கோரைப் புற்களைக் கொண்டு வந்து காய்த்து
நெய்யும் பாய்களில் சிறுமியின் முடங்கிய விரல்கள்
அழகிய சித்திரங்களைப் பின்னுகின்றன
ஓலைப் படல்களைத் தாண்டும்
தொட்டில் குழந்தைகளிற்கான
பெண்களின் தாலாட்டுக்கள்
தினந்தோறும் புதிது புதிதாய் உதிக்கின்றன
ஏரிக்கரைகளில் நிலா நேரங்களில்
உலவிடும் பிசாசுகளைப் பிடித்துன் தந்தையை
கட்டிவைக்கச் சொல்லவேண்டுமென்பது போன்ற
விதவிதமான உள்ளக் கிடக்கைகள்
சிறுவர் சிறுமிகளுக்கான பெண்களின் கதைகளில் வெளிச்சமிடுகின்றன

மூதாட்டியின் சிறுபராயம்
பாய்களிலும் கூடைகளிலும் கழிகிறது
வீட்டின் அனைத்து ஆண்களினதும்
வலிய கட்டளைகளுக்கு அஞ்சிய
அவளது எல்லா ஆற்றல்களும்
விரல்கள் வழி கசிகிறது
துளையிடப்பட்ட ஓடம்
மழைக் கணமொன்றில் நடுக்கடலில் தத்தளிக்கிறது

பாட்டியின் கதைகேட்ட சிறுமி தனது
வர்ணப்பெட்டியை எடுக்கிறாள்
எவளது கூந்தல் தூரிகையாலோ மீன்களை வரைபவள்
சித்திரத் தாள்களை ஊஞ்சலில் வைத்து ஆட்டி விடுகிறாள்
காற்றுவெளியில் நீந்தும் மீன்களைப் பிடிக்க
இரை தேடித் தடுமாறுகிறான்
அவ் வீட்டின் தூண்டில்காரன்
யன்னல்வழி கசியும்  மஞ்சள் வெளிச்சம்
அறை முழுவதையும் நிரப்புகிறது

- எம்.ரிஷான் ஷெரீப்
20102012
நன்றி
# காலச்சுவடு இதழ் - 162, எதுவரை இதழ், தமிழ் மிரர் இதழ்

Wednesday, January 1, 2014

இடையனின் கால்நடை


காலை வெயில் அலைமோதும்
பனியில் குளித்த விருட்சங்களைச் சுற்றிய பசும்புல்வெளியில்
மேய விட்டிருந்தாய் உன் கால்நடையை

ஒழுகி அசைபோடச் செய்தபடியிருக்கும்
தனித்திருந்த கொட்டகையின் கூரைகள்
பகல் பொழுதின் மேய்ச்சல் நினைவுகளை
வைகறைவரை இரவிடம் கிசுகிசுக்கும்

வேட்டை விலங்குகளின் பார்வைக்குத் தப்பிய
கால்நடையின் சதைப் பூரிப்பில் மின்னும் அதன் சருமம்
உன் ப்ரியத்தில் உறைந்திருந்த அது
எங்கும் தப்பிப் போய்விடாது எனினும்
வேலியை இறுக்கிக் கட்டினாய் நீ
அதனையும் அறியாது அசைபோட்டபடியிருந்தது அது

மேய்ச்சலுக்கு இட்டுச் செல்ல முடியாத அடைமழை நாட்களில்
எங்கெங்கோ அலைந்து
தீனிச் செடி குலைகளை எடுத்து வருவாய்
உன் தலை தடவலில் உயிர்த்திருக்கும் அதனுலகம்
தீனிக்கென நீ வைத்திடும் எல்லாவற்றையும்
அன்பென எண்ணிச் சுவைக்கும்
அதட்டலுக்குப் பயந்து அடிபணியும் - பிறகும்
அகலாதிருக்க இவ் வாழ்வும்
உன் பரிவும் நிலைத்திடக் கனவு காணும்

தசை, தோல், எலும்பென கூறிட்டுப் பணம்பார்க்க
அதன் எடை கூடும் காலமெண்ணிக் காத்திருக்கும் உன்
கத்தியைக் கூர் தீட்டும் நாளில்
அதன் மேனியிலிருந்து எழக் கூடும்
விடிகாலைத் தாரகையோடு
பசும்புல்வெளியில் உலர்ந்த உன் பாசத்தின் வாசம்

- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
# அம்ருதா இதழ், அக்டோபர் 2013நவீன விருட்சம்திண்ணைபதிவுகள், காற்றுவெளி இதழ்

Friday, November 1, 2013

ஒரு பூக்காலத்தில் நான் மிதக்கும் தோணி


மலைக் காடொன்றின் மத்தியில்
தெளிந்த ஒற்றையடிப் பாதையின் முடிவில்
ஒரு தனித்த குடில் வீடு உனது ஓவியமாகியிருந்தது
விகாரைக் கூரையை அதற்கு ஏன் தீர்மானித்தாயென்ற கேள்விக்கு
புறாக்களும் புனித தேவதைகளும் வந்து செல்வரெனச் சொல்லி
நீ காதலைச் சொன்ன தருணம்
மஞ்சள் அந்தி மாலை நேரத்தைப் போல எவ்வளவு அழகாக இருந்தது

சின்ன மேசையருகே முழந்தாளிட்டு
நாமருந்திய தேன்பானம் நீ தயாரித்தது
சூடுமற்ற குளிருமற்ற இதமான காலநிலையில்
நாம் நடந்துவரச் சென்ற அன்று நீ
மழை வருமா எனக் கேட்ட பொழுது சிரித்தேன்
பெருங்குளத்துக்கு மத்தியிலான காட்டைச் சுற்றிவர
நிலத்தில் பதித்திருந்த பச்சை விளக்குகள்
முன்னந்தியில் ஒளிர ஆரம்பிக்கையில் மழை
சட்டெனப் பெய்து வலுத்தது கண்டு கை கோர்த்துக் கொண்டோம்

அப்பொழுதெல்லாம் எவ் வடிவ மேகம் போல நீ மிதந்தாய்
என் புன்னகை ஒரு மந்திரக் கோலென்றாய்
எந்த அதிர்வுகளுக்கும் ஆட்படாத மனம்
அதிர்ஷ்டம் வாய்ந்ததெனச் சொல்லி
உனது தூரிகை தொடர்ந்தும் சித்திரங்களைப் பரிசளித்தது
என் நேசம் உன் புல்லாங்குழலின் மூச்சென்றானது

நீ இசைத்து வந்த வாத்தியக் கருவியை
அன்றோடு எந்த தேவதை நிறுத்தியது
உன்னிலிருந்தெழுந்த இசையை
எந்த வெளிக்குள் ஒளிந்த பறவை விழுங்கிச் செரித்தது

மழைக் காலங்களில் நீர் மிதந்து வந்து
விவசாயப் பயிர்களை நாசப்படுத்தி
பெருக்கெடுத்துப் பாய்ந்தோடும் நதியொன்றிருந்த
எனது கிராமத்தின் கதையை
இக் கணத்தில் உனக்குச் சொல்ல வேண்டும்
ஊரின் முதுகெலும்பாய்ப் படுத்திருந்த மலையின் ஒரு புறம்
சமுத்திரமும் இருந்தது

வாழ்நிலங்களைக் காக்கவென மூதாதையர்
அம் மலையைக் குடைந்து இரண்டாக்கி
ஆற்றின் தண்ணீர்ப் பாதையை
கடலுக்குத் திருப்பிய கதையையும்
கூடைகூடையாய் தொலைவுக்கு கால் தடுக்கத் தடுக்க
பெண்கள் கல் சுமந்து சென்று கொட்டிய கதையையும்
இரவு வேளைகளில் விழி கசியச் சொன்ன
பாட்டி வழி வந்தவள் நான்

அந்த மன உறுதியும் நேசக் கசிவும் ஒன்றாயமைந்த
நான் மிதக்கும் தோணியை ஒரு பூக்காலத்தில்
ஏழு கடல் தாண்டித் தள்ளி வந்திருக்கிறாய்
உனது எல்லா ஓசைகளையும் மீறி
'உஷ்ணப் பிராந்தியத்தில் வளர்ந்த செடியை
குளிர் மிகுந்த பனி மலையில் நட்டால்
ஏது நடக்குமென நீ அறியாயா' எனப் பாடும் இராப் பாடகனின் குரல்
தினந்தோறும் இடைவிடாது எதிரொலிக்கிறது

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# அம்ருதா இதழ், அக்டோபர் 2013திண்ணை